ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 17, 2017

குடும்பத்திலும் வியாபாரத்திலும் கொடுக்கல் வாங்கலில் வரும் சிக்கல்களிலிருந்து விடுபடுவது எப்படி...?

இன்று நாம் மனிதனுக்குள் ஒருவருக்கொருவர் நாம் பாசமாக அன்பாகத்தான் வாழ்கின்றார்கள்.

இருந்தாலும் சந்தர்ப்பத்தால் சில சிரமங்கள் ஏற்பட்டால் அதிலிருந்து மீளத் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக நண்பர்களையோ உறவினர்களையோ தேடி வருகின்றார்கள்.

ஏனென்றால் அவர்களிடம் பணம் இருக்கிறது. பணத்தை வாங்கிச் சமாளிக்கலாம் என்று வாங்குகிறார்கள்.

சீக்கிரம் திரும்பத் தந்துவிடுவேன் என்று சொன்னபின் அவர்களும் பணத்தைக் கொடுக்கிறார்கள்.

எப்படியோ (ஏமாற்றி) பணத்தை வாங்கிக் கொள்வார்கள். வாங்கிய பணத்தைச் செலவழிக்கின்றார்கள்.

ஆனால் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

இப்பொழுது கொடுக்க முடியவில்லை. “தருகிறேன்…” என்று சொல்வார்கள்.
1.இரண்டாவது தடவை கேட்கும் பொழுதும் அதே பதில் வருகிறது.
2.மூன்றாவது தடவையும் கேட்டவுடனே என்ன சொல்வார்கள்?

“நான் தான் கொடுக்கிறேன்…!” என்று சொன்னேனே அதற்குள் என்ன அவசரம் என்பார்கள். அன்று
1.தக்க சமயத்தில் தனக்கு உதவி செய்தார்கள் என்ற
2.அந்த நல்ல எண்ணம் வருவதில்லை.
3.ஆக பணத்தைத் திருப்பிக் கேட்பவருக்குச் சரியான பதில் சொல்ல முடியவில்லை.

அப்பொழுது அவருக்குக் கோபம் வரும்.

கோபத்தின் தன்மை பணம் கொடுத்தவருக்கு வரப்படும் போது உதவி செய்தார்கள் என்ற எண்ணம் பணம் வாங்கியவருக்கு மறந்துவிடுகின்றது. அப்புறம் அவருக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பணம் கொடுத்தவர் என்ன சொல்வார்? பார்… அன்றைக்கு உதவி செய்தேன். பாவிப் பயல் இன்றைக்கு அவன் எனக்குத் தொல்லை கொடுக்கிறான்…! என்பார்.

அப்பொழுது தொல்லையின் உணர்வுகளைத்தான் இவர் உடலிலே  வளர்க்க முடிகிறது. தொல்லைகளை நீக்கும் நிலை இல்லை.

இப்படி மனிதனுக்கு மனிதன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் உணர்வுகள் இப்படி மாறுகின்றது.
1.பகைமை உணர்ச்சிகள் உருவாகி உடலுக்குள் வந்தவுடன்
2.உறுப்புகள் சீர் கெடுகின்றது. கடும் நோயாக மாறுகின்றது.
3.இந்த நோயை மாற்ற என்ன வழி?

மனிதன் சந்தர்ப்பத்தால் நல்ல குணங்களை நல்ல முறையில் பயன் படுத்தினாலும் வாங்கிய பணத்தைத் திருப்பி அவர்களால் கொடுக்க முடியவில்லை என்ற நிலைக்கு வந்தவுடன் அங்கே என்ன நடக்கின்றது?

“என்னைத் தொந்தரவு செய்கின்றார்களே… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள்” என்ற உணர்ச்சிகள் தன்னை அறியாமலே அதிகரித்துவிடுகின்றது.

உண்மையில் அவனால் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாத நிலையில் இருந்தாலும் இரண்டு தடவை பணத்தைத் திருப்பிக் கேட்டாலே போதும். அங்கே உணர்ச்சிகள் மாறும்.

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருக்கிறது. “தருகிறேன்…” என்று சொல்வார்.

ஆனால் முயற்சி எடுக்கும் பொழுது வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளால் இவர் செல்வம் தேடுவதும் இழந்து விடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் இரண்டு தரம் பணத்தைத் திரும்பக் கேட்டு நிர்ப்பந்தப்படுத்தும் போது அந்த வெறுப்பு காழ்ப்புணர்ச்சியாக வருகின்றது. இந்த வேதனையின் உணர்வைத் தனக்குள் எடுத்தவுடன்
1.ஒன்று இவர் தவறு செய்பவராக மாறுகின்றார்.
2.இல்லை என்றால் அவர் நுகர்ந்த உணர்வு கடும் நோயாக மாறுகின்றது.
3.இதன் உணர்வுகள் இப்படித் தான் போகின்றது.

பணம் கொடுத்தவரோ… பாருங்கள்… அன்றைக்குக் கொடுத்தேன். இன்றைக்கு எதிர்க்கிறான்… கொடுக்காமல் ஏமாற்றுகிறான்.. என்பார்.

ஏனென்றால் இயற்கையில் (உண்மையில்) பணத்தை அவரால் திரும்பக் கொடுக்க முடியவில்லை.

அவருக்கு எப்படியோ நல்ல நேரம் வரட்டும். அவருக்குக் கொடுக்க வேண்டிய வலு வரவேண்டும். பணத்தைத் திரும்பக் கொடுக்கக்கூடிய திறன் வரவேண்டும் என்று “பணம் கொடுத்தவர்கள்… எண்ணுகிறார்களா…!” என்றால் இல்லை.

அப்படி எண்ண முடியவில்லை.

பணத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்ற வேதனை உணர்வு தான் வருகிறது. அப்பொழுது அந்த வேதனையைச் சமைக்கும் உணர்வுகள் பணம் கொடுத்தவர் உடலிலும் வருகிறது.

நான் அவ்வளவு உதவி செய்தேன். இந்த மாதிரி எல்லாம் செய்கிறானே என்று இவர் சந்தர்ப்பத்தில் விளைந்த உணர்வுகள் கடன்காரனை எண்ணி எடுக்கும் போது “ஓ…ம்” வெறுப்பான உணர்வுகள் ஜீவனாகி
1.இவனெல்லாம் உருப்படுவானா…?
2.என்னை இப்படி ஏமாற்றுகிறான் பார்…! என்று
3.சாபமிடும் நிலைக்கு வந்துவிடுகின்றார்.

அன்றைக்குக் கேட்டதும் பணத்தைக் கொடுத்தேனே… இவன் உருப்படுவானா…? என்று இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்த்து இந்த உணர்வுகள் உடலிலே விளைகின்றது.

இதே போல உணர்வுகள் அங்கே பணத்தை வாங்கியவர் உடலிலும் படருகிறது. இதை எண்ணும் போது அவரின் செயலின் தன்மையும் இழக்கச் செய்கிறது.

கடைசியில் பணம் கொடுத்தவருக்கும் வேதனை வருகின்றது. பணம் வாங்கியவருக்கும் வேதனை வருகின்றது. நல்லதின் பலனை இரண்டு பேரும் அடைய முடியவில்லை.

இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைப்பதற்காகத்தான் ஆலயங்களில் தீப ஆராதனை காட்டுகின்றார்கள். ஏனென்றால் அப்பொழுது அங்கே மறைந்திருக்கும் பொருள்கள் அந்த வெளிச்சத்தால் தெரிகின்றது.

அப்பொழுது நாம் எண்ண வேண்டியது எது? பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

1.இந்த ஆலயத்திற்கு வரும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
2.எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
3.என்னிடம் தொழில் செய்வோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
4.என்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
5.என்னைப் பார்க்கும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

இப்படி ஒவ்வொருவரையும் எண்ணும்படிச் செய்து ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சந்தர்ப்பத்தால் ஏற்படும் பகைமைகளை அகற்றச் செய்வதற்காகத்தான் தீப ஆராதனை என்ற “விளக்கை… அந்த ஜோதிச் சுடரைக்” காட்டினார்கள் ஞானிகள்.

ஜோதியின் சுடர் போல் பொருளை அறியும் திறன் நமக்குள் வளர்ந்தால் இருளைப் போக்கும் சக்தியாக அது வளரும்.

இருளைப் போக்கி அருள் ஒளி என்ற நிலை பெருகும் பொழுது நம் சொல் பார்வை செயல் மற்றவரையும் இருளிலிருந்து அகற்றச் செய்யும்.
1.வேதனையாக மாற்றாது.
2.மகிழ்ந்து வாழ்ந்திடச் செய்யும் ஆற்றலாகப் பெருகும்.