ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 13, 2017

“ஞானகுரு… உங்கள் உணர்வுக்குள் தான் இருக்கிறேன்” – பயன்படுத்திக் கொ‌ள்ளு‌ங்க‌ள்

நான் (ஞானகுரு) வந்தவுடன் “எங்கள் வீட்டுக்கு வாருங்கள்… எங்கள் வீட்டுக்கு வாருங்கள்…. வந்து சாப்பிட்டுவிட்டுப் போங்கள்…!” என்று சொல்வதற்குத்தான் ஆள்கள் இருக்கின்றது.

சாமி…!
1.நீங்கள் சொன்ன சக்திகள் அனைத்தும் எங்களுக்குள் உருப் பெறவேண்டும்.
2.நாங்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்.
3.எங்கள் பார்வை நன்றாக இருக்க வேண்டும் என்று கேட்பவர்கள் “யாரும் இல்லை”.

சாமி உங்கள் வீட்டுக்கு வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். “சாமி…” உங்கள் உணர்வுக்குள்ளே தான் இருக்கிறேன்.

1.குருவின் உணர்வை நீங்கள் பெற்றீர்கள் என்றால்
2.அந்த உணர்விலிருந்து எல்லாமே நீங்கள் பெறலாம்
அந்த நிலையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்.


சாமியாரைப் பார்த்து.. அவரைப் பார்த்து… இவரைப் பார்த்து… கடைசியில் “சாமியார் தான் எல்லாவற்றையும் மீட்டிக் கொடுப்பார்…” என்று நினைக்கிறீர்கள்.

அருள் ஞானியின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்கள் எண்ணம் உங்கள் உடலுக்குள் இருக்கும் பகைமை உணர்வை நீக்குகின்றது. உங்கள் உடலை நலமாக்குகின்றது. உங்கள் வாழ்க்கையை உயர்த்துகின்றது.

இந்தப் பழக்கங்கள் வரவேண்டும்.

டி.வி, ரேடியோவில் ஒலி/ஒளி பரப்பு செய்கிறார்கள் என்றால் எந்த ஸடேசனை நீங்கள் திருப்பி வைக்கிறீர்களோ அதுதான் வருகிறது. அந்த அலைகளை நீங்கள் காட்சியாகவும் பார்க்கின்றீர்கள். பாடல்களையும் கேட்கிறீர்கள்.

இதே மாதிரித்தான்  உங்கள் உடலுக்குள்ளும் நடக்கின்றது.

பல பேரைச் சந்திக்கிறீர்கள். சண்டை போடுகிறவர்களைப் பார்க்கின்றீர்கள்; வேதனைப்படுவோரைப் பார்க்கின்றீர்கள் கோபப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்;  சஞ்சலப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்; சங்கடப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்; குரோதமாக இருக்கிறவர்களையும் பார்க்கின்றீர்கள். குரோதத்தால் பிறரை அழிக்கக்கூடிய உணர்வையும் பார்க்கின்றீர்கள்; தெரிந்த்தே தப்புப் பண்ணுபவர்களையும் பார்க்கின்றீர்கள்.

இதை எல்லாம் பதிவாக்கிக் கொள்கிறீர்கள்.

1.இதிலே நீங்கள் எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றீர்களோ…
2.”அடப் பாவிப் பயலே… இப்படிச் செய்கிறேயடா..!” என்று
3.அந்த ஸ்டேசனைத் திருப்பி வைத்தால் அந்தக் காட்சிகள் தான் வரும்.

எந்தக் காட்சி? அவன் சண்டை போடுவது திருடுவது ஏமாற்றுவது.

நான் அன்றைக்கு அந்தப் பையனைப் பார்த்தேன்… கஷ்டப்படுகிறான்… என்ற நினைவு வந்து அந்த ஸ்விட்சைப் போட்டீரகள் என்றால்
1.“அடப்பாவமே அவன் இப்படிக் கஷ்டப்படுகின்றான்…” என்று  இந்தக் காட்சி உங்களுக்குள் வரும்.
2.அந்த வேதனை உங்களுக்குள் வரும். இத்தனை வேலையும் நடக்கும்.

அதே மாதிரி பணம் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லை. அவன் ஏமாற்றிவிட்டுப் போய்விட்டானே என்று அந்த ஸ்டேசனை வைத்தால்
1.ஏமாற்றப்பட்ட உணர்வலைகள் காற்றிலிருக்கின்றது,
2.உடனே அது உங்களுக்குள் வந்து வேலை செய்கிறது.
3.அப்பொழுது உங்கள் நல்ல உணர்வுகள் வாடுகின்றது.

இதே போலத்தான் அருள் மகரிஷிகளின் உணர்வு இந்தக் காற்றிலே கலந்திருக்கின்றது. உங்களுக்குள் ஆழமாக அதைப் பதிவு செய்யவேண்டும் என்று தான் திரும்பத் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.

சூரியன் எப்படி உருவானது? மனிதன் எப்படி உருவானான்? மனிதனான பின் அகஸ்தியன் ஒளிச் சரீரம் எப்படி ஆனான் என்று சொல்கிறோம்.

அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கிறோம். அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.

1.இந்த ஸ்டேசனைத் திறந்தால்
2.அந்த அகஸ்தியனின் உணர்வு வரும்.
3.நமக்குள் கோபிக்கும் உணர்வை தடுக்கும்.
4.நமக்குள் அருள் ஞானத்தை வளர்க்கும்.
5.நம்மை அறியாத வந்த தீமைகளைத் துடைக்கும்.

இதை நீங்கள் பெற வேண்டும் என்பதற்காகத்தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன். ஏனென்றால் குருநாதர் அந்தச் சக்தி கொடுத்தார். எல்லாமே செயல்படுத்திக் கொண்டு வருகிறேன்.

சாமி பார்த்துக் கொள்ளும் என்று கோயிலில் போய் கஷ்டத்தை எல்லாம் சொல்கிற மாதிரி அந்த நம்பிக்கையிலே இருக்கும் போது என்னைப் பார்த்தவுடனே ஆயிரம் கஷ்டங்களைச் சொல்கிறார்கள். ஆயிரம் வம்புகளைச் சொல்கிறார்கள்,

நான் இதையெல்லாம் கேட்டு என்ன செய்ய…!

இப்படி நூறு பேர் வந்து என் காதில் சொன்னால் நான் எடுத்துக் கொண்ட சக்தியை நீங்கள் தடைப்படுத்துகிறீர்கள் என்று தான் அர்த்தம்.
1.நீங்கள் நல்லதைப் பெறுவதற்கு பதில்
2.அதைத் தடை விதித்துக் கொள்கிறீர்கள்.

உங்களுக்குள் அந்த உணர்வு வளர்ந்து விட்டால் நான் சொன்ன அந்த வாக்கை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது போய் விடுகிறது.

1.அருள் ஒளி பெற வேண்டும்.
2.என்னை அறியாத இருள் நீங்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்.
4.உடல் நலம் பெற வேண்டும்.
5.எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்.
6.என் தொழில் நலம் பெற வேண்டும்.
7.என் பையன் நல்லவனாக வேண்டும் என்று கேளுங்கள்.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களுக்கு இந்த நிலை வேண்டும் என்று தான் நான் கேட்கச் சொல்கிறேன்.

எத்தனை பேர் இப்படிக் கேட்கிறீர்கள்…!

இவ்வளவு தூரம் நான் சொல்கிறேன். இருந்தாலும் இப்பொழுத் தான் உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். “நீங்கள் பெரிய மகான்…” என்று சொல்லி “என் கஷ்டம் இப்படி இருக்கிறது…!” என்று சொல்லி உடனே அழுக ஆரம்பித்துவிடுகிறார்கள்.

நான் சொன்னதை எல்லாம் மறந்துவிடுகின்றார்கள். அவர்களுக்குள் எது பதிவானதோ அந்த உணர்வு தான் வேலை செய்கிறது.

யாம் சொல்லும் உயர்ந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அவர்கள் பெறும் தகுதியை அவர்கள் உடலுக்குள் இருக்கும் உணர்வே தடை படுத்துகின்றது என்று உணர்கிறார்கள். உணர்ந்தாலும் அதை அறிய முடிவதில்லை.

ஒரு இடத்தில் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்றால் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம்.
1.இன்னும் கொஞ்சம் இருக்கிறது
2.அதையும் தூய்மையாக்கிப் பழக வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும்,

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை பெற்று உங்கள் வாழ்க்கையில் தீமைகள் புகாது ஒவ்வொரு நொடியிலும் விழித்திருத்தல் வேண்டும்.