ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 26, 2017

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் பூரணமாக நாம் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

தனித்த நிலையில் யாரும் உயர்ந்த ஆற்றலைப் பெற முடியாது. மற்றவர்கள் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டோருக்குத் தான் அந்தத் தகுதியே கிடைக்கும்.
1.எந்த மகரிஷியும் தனித்த நிலையில் சக்தி பெறவில்லை.
2.மற்றவர்களை உயர்த்தித் தான் அவர்கள் உயர்ந்த நிலை பெற்றார்கள்.

அதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் தமக்குள் மெய் ஞானத்தை விளைய வைத்தார். அவருக்குள் விளைவித்ததை எமக்குள் பதியச் செய்தார்.

பதியச் செய்த ஞான வித்தை எனக்குள் (ஞானகுரு) வளர்த்துக் கொண்டேன். அவர் காட்டிய அதே அருள் நெறி கொண்டு அந்த ஞான வித்தை உங்களுக்குள் திரும்ப திரும்ப பதியச் செய்கின்றோம்.

அந்த ஞான வித்தை வளரச் செய்வதற்குக் கூட்டுத் தியானப் பயிற்சியையும் கொடுத்துள்ளோம்.

ஒருவர் தீமையை விளைவிக்கும் உணர்வைக் கேட்டறிந்த பின் அதே தீமையைச் செயல்படுத்தும் உணர்வாக நம்மையும் அது இயக்குகின்றது.  

இதைப் போன்று தான் இந்த அருள் ஞான உபதேசங்களைக் கேட்டுணர்ந்த உணர்வின் தன்மையை
1.உங்கள் உயிர் ஜீவனாக்குகின்றது.
2.உங்கள் உடலுக்குள் உள்ள எலும்புக்குள்
3.ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவு செய்கிறது.

அதை மீண்டும் நினைவு கூறும்போது வினைக்கு நாயகனாக அதனுடைய இயக்கமாக உங்களைச் செயல்படுத்தும்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்
1.அவர் விண்ணின் ஆற்றலைக் கண்டுணர்ந்த உணர்வின் சத்தை
2.அதை “வித்தாக உருவாக்கி...” என்னில் அதை பதியச் செய்தார்
3.அந்த வித்தினைப் பலவாறாக.. நீ பெருக்கு...” என்றார்.
 
தீமையை அகற்றிடும் அருள் ஞான வித்தாக உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். உங்கள் எண்ணத்தால்
1.இதைப படித்துனர்ந்தாலும் கேட்டுணர்ந்தாலும்
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை ஈர்க்கும் நிலைக்கு வர வேண்டும்
3.பதிவாக்கியதை நுகர்ந்து... கவர்ந்து... சுவாசித்து... இழுத்து... உங்கள் உடலுக்குள் சேர்க்க வேண்டும். (இது மிகவும் முக்கியம்)

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது நிலைகள் பெற்று இன்று சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இன்னொரு மனிதனின் ஈர்ப்புக்குள் சிக்காது உணர்வை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள்.

அத்தகைய எண்ணத்தை நாம் கவர வேண்டுமானால் அதற்குச் சமமான வலு நமக்குள் வேண்டும். ஒரு நூலை வைத்து எடை கூடிய பொருளைத் தூக்கினால் அந்த நூல் அறுந்து விடும். ஆனால் பல நூல்களை இணைத்துக் கயிறாக்கித் திரித்துத் தூக்கினால் எடை கூடிய பொருளை எளிதில் தூக்க முடியும்.

பல பேர் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று கூட்டமைப்பாக எண்ணும்போது அந்த மெய் ஞானிகளின் அருளை எளிதில் பெற முடியும்.


 இப்போது கேட்டுணர்ந்தோம் இது சிறு துளி தான். சிறு துளி பெரு வெள்ளமாகப் பெருக வேண்டும்.

மழை காலங்களில் சிறு துளியானாலும் பெரு வெள்ளமாக எப்படித் திரண்டு ஓடுகின்றதோ
1.அவ்வாறு ஆயிரக் கணக்கானோர் இதை எண்ணி  
2.மகரிஷிகளை உணர்வின் எண்ணத்தால் எண்ணும் போது,
3.அவருக்குச் சமமாக இந்த எண்ணம் வலுப் பெறுகிறது.
4.அப்பொழுது இலகுவில் அதைப் பருகும் தன்மை வருகிறது.

அதைப் பருகிய பின் அந்த அருள் ஞானத்தை ஊழ் வினையாக உங்களுக்குள் விளையச் செய்து தை வினைக்கு நாயகனாக ஆக்கும்போது அதன் நாயகனாக இயக்கி
1.உங்கள் வாழ்க்கையில் தீமைகளை அகற்றி,
2..தீமைகளை அகற்றும் சக்தியாக விளைந்து,
3.அருள் ஞானி உணர்வுடன் ஒன்றி
4.என்றும் பிறவா நிலை என்னும் பெருநிலையை நீங்கள் அனைவரும்  அடைய முடியும்.

பெற்ற சக்திகளின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை நீங்களாகத் தான் நீக்க வேண்டுமே தவிர சாமியார் செய்வார் சாமி செய்யும் ஜோசியம் செய்யும் ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் என்று எண்ண வேண்டாம்.

உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களால் முடியும்.