ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 18, 2017

நமது கண்களுக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்

அவரவர்கள் அம்மா அப்பாவை எண்ணி எங்கள் அம்மா அப்பா அருளாசி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.கண்களைத் திறந்து செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரம் என்று யாம் (ஞானகுரு) சொல்வதை நீங்கள் கேட்டுப் பதிவாக்கி விட்டீர்கள்.
1.இந்தப் பதிவின் நினைவை
2.உங்கள் கண்களுக்குக் கொண்டு வருகின்றீர்கள்.

உங்கள் கண்ணின் நினைவு நான் எதைத் “துருவ நட்சத்திரம்…” என்று சொன்னேனோ
1.உங்களுடைய உணர்வலைகள்
2.அங்கே அழைத்துச் செல்லுகின்றது.

இந்தக் காற்றிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவரும் சக்தி பெறுகின்றது.

"துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா" என்று
1.கண்ணைத் திறந்தே ஏங்கி இருங்கள்.
2.இப்போது கண்ணின் கரு மணிகளில் இந்த ஈர்க்கும் சக்தி வரும்.
3.கண்கள் லேசாகக் கனமாக இருக்கும்
4.மெதுவாகக் கண்ணை மூடுங்கள்.

புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள்,

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
1.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.ஈர்க்கும் சக்தியைக் கொண்டு வாருங்கள்.

அப்படி ஈர்க்குமானால் நம் புருவ மத்தியில் அந்தத் துருவ நட்சத்திர உணர்வு அதிகரிக்க நம் உடலுக்குள் இருக்கும் தீமை விளைவிக்கும் தீய உணர்வுகளுக்கு உணவு செல்லாதபடி தடைபடுத்தும்.

கண்ணிலே எப்படிக் கனமாக இருந்ததோ அதைப் போன்று
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திர அலைகளை ஈர்க்கும் சக்தி வரும் போது
2.புருவ மத்தியிலும் கனமாக இருக்கும்.
3.உயிரிலே இது மோதும் போது வெளிச்சங்கள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஈர்க்கும் சக்தி பெறுகின்றீர்கள்.

1.எதைக் கண்ணிலே நினைத்தோமோ
2.அதை உயிருடன் ஒன்றப்படும் பொழுது
3.உயிரில் உள்ள அந்தக் காந்தம் கவர்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உயிரில் (புருவ மத்தி வழியாக) ஈர்க்கப்படும் பொழுது இதைக் கடந்து தீய உணர்வுகள் உள் செல்ல முடியாது தடைபடுத்துகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் அருள் வட்டமாக அமைகின்றது. ஒரு பாதுகாப்புக் கவசமாக உங்கள் ஆன்மாவில் அமைகின்றது.
1.ஒளியின் அணுக்களாக உடலில் பெருகுகின்றது.
2.உயிரான்மா ஒளியாக மாறுகின்றது.