ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 22, 2023

கோவிலிலே காசைக் கொடுத்துச் செய்வது போல் அல்ல “யாம் சொல்லும் இந்த ஞானத்தின் வழி”

எப்படியும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும்
1.உங்கள் நினைவுக்கு அது அடிக்கடி வர வேண்டும்
2.உங்கள் நினைவால் உங்களைக் காக்கும் அந்த அரும்பெரும் சக்தி நீங்கள் பெற வேண்டும்… அந்த எண்ணம் வளர வேண்டும் என்று
3.குருநாதர் சொன்ன முறைப்படி நீங்கள் பெற வேண்டும் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

ஆதே போல் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று நீங்களும் ஆசைப்பட்டால் எனக்குள்ளும் அந்த தீமையிலிருந்து விடுபடும் ஆசை பிரம்மம் ஆகிறது.

நான் எண்ணுவது போல் நீங்களும் எண்ணினால் வசிஷ்டர் பிரம்மகுரு. அதாவது ஒரு நோயாளியைப் பார்த்தால் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று அந்த உணர்வைக் கவர்ந்து உடலில் எடுத்துக்கொண்டால் தீமை நீக்கும் உணர்வுகள் உங்களுக்குள் பிரம்மம் ஆகிறது.

அந்தத் தீமையை நீக்கும் சக்தி உங்களில் வளர்ந்து சொல்லாக வெளி வரும் பொழுது… மற்றவர்களுக்கும் அது தீமை நீக்கும் சக்தியாக வருகின்றது. ஆகவே சாஸ்திரங்கள் நமக்கு காட்டிய அந்த அருள்வழிப்படி தெளிவாக வாழ்வோம்… அந்த அறிவின் தன்மை கொண்டு வாழ்வோம்.

1.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கம் தான் நமது குருநாதர் காட்டியது
2.ஆனால் இந்த உடலின் இச்சைக்காகத் தான் பெரும் பகுதி இதைச் செயல்படுத்துகின்றோமே தவிர உயிர் இச்சை யாருக்கும் வரவில்லை.

உயிரை யார்…? என்று அறிந்து கொள்ளும் மனிதனாக ஆன பிற்பாடு உயிரை மதித்துப் பழகுவதே நல்லது. அவன் தான் நம்மை மனிதனாக உருவாக்கினான் என்ற நிலையில் அவனை மதிக்க வேண்டும்.

வேதனை வெறுப்பு சலிப்பு சங்கடம் இது போன்ற குணங்களை உள்ளே விடாதபடி தடுத்தல் வேண்டும்.
ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அடிக்கடி வரும் தீமைகளை துடைத்துப் பழக வேண்டும்… துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களைப் பெறச் சொல்கிறோம்.

தீமைகள் புகாது தடுத்தால் உங்கள் ஆன்மா சுத்தமாகின்றது. உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள். எளிதில் நீங்கள் இதைச் செயல்படுத்த முடியும்.

காசு கொடுத்து அல்ல… நடந்து சென்று (பாத யாத்திரை) அல்ல…! அப்படி யாரும் விலைக்கு வாங்க முடியாது. விலை கொடுத்து இந்த ஞானத்தை வாங்க முடியுமா…?

1.என் பிள்ளை இப்படிச் செய்கின்றான் என்று தெய்வத்திடம் முறையிட்டு…
2.அதற்காக வேண்டிக் கோவிலிலே காசைக் கொடுத்து அர்ச்சனை செய்தால்
3.அந்தத் தெய்வம் வரம் தரும் என்று சொல்லிப் போகின்ற மாதிரி அல்ல யாம் சொல்லும் நிலை.

நாம் எண்ணியதையெல்லாம் நமது உயிர் ஓ என்று இயக்கி உருவாக்கிக் கொண்டே உள்ளது. நான் எண்ணியதையெல்லாம் ஓ…ம் நமச்சிவாய…! என்று உடலாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆகவே… அந்த உயிரான ஈசனை வேண்டி அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவோம்… அருளைப் பெறுவோம்… இருளை அகற்றுவோம்… பிறவியில்லா நிலை அடைவோம். ஆனந்த வாழ்க்கை வாழ்வோம்… என்றும் ஏகாந்த வாழ்க்கை என்று பெற தியானிப்போம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்துவோம். காரணம்… நமக்காக அவர்கள் எத்தனையோ துயர் பட்டார்கள்.

சப்தரிஷி மண்டலத்தில் அவர்களை இணையச் செய்து… அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துவிட்டால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக நம் முன்னோர்கள் வாழத் தொடங்குகின்றனர்.

1.அதை எண்ணும் போதெல்லாம் நாமும் அந்த உயர்ந்த சக்தி பெற முடியும்
2.அதைப் பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துள்ளோம்.

தனி ஒருவரால் ஒன்றும் செய்ய முடியாது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமையான உணர்வு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால் இருளை அகற்றலாம்… உலகையும் காக்கலாம்… நம்மையும் காக்கலாம்… குடும்பத்தில் வரும் சர்வ தோஷங்களை நீக்க முடியும்.

அந்தச் சக்தி பெறவே உங்களுக்குள் இந்த நிலையை உபதேசித்தது. மன உறுதி கொள்ளுங்கள் அருளைப் பெருக்குங்கள் இருளை அகற்றுங்கள் பேரானந்தம் பெற்று ஏகாந்த வாழ்க்கை வாழ உயிரான ஈசனை வேண்டி அருள் உணர்வுகளை நமக்குள் சேர்ப்போம்.

தெளிந்த மனம் கொண்டு வாழ இந்த வாழ்க்கையை அர்ப்பணிப்போம்...!