ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 25, 2023

உலகம் அழியப் போகிறது என்றால்… விஷ உலகம் அழிகின்றது… ஞானிகள் தோன்றுவார்கள்

இயற்கையின் உண்மையின் நிலைகளை எல்லாம் குருநாதர் என்னை (ஞானகுரு) அறியும்படியும் செய்தார். பல கஷ்டங்களைக் கொடுத்து வேதனைப்படவும் செய்தார். பல சிரமப்பட்டுக் கஷ்டப்பட்டு அனுபவபூர்வமாகப் பெற்ற உண்மைகளைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.வேதனைப்பட்டதைச் சொல்லிக் கொண்டு வந்தால் என்ன ஆகும்…? வேதனை தான் வளரும்.
2.ஆனால் நல்லதாகும் என்று சொன்னால் நல்லதாகும்.

இதே மாதிரித் தான் குடும்பத்தில் கஷ்டங்கள் வந்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் நலம் பெற வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும் என்று உயர்ந்ததாக எண்ண வேண்டும்.

ஆனால் பையன் படிக்கப் போனானே… என்ன ஆச்சோ…? போனானா வந்தானா… என்ன ஆனது என்று தெரியவில்லையே…! என்று எண்ணி அவன் சரியாகப் படிக்கவில்லையே… படிக்கவில்லையே…! என்று இந்த உணர்வை எடுத்தோம் என்றால் “அங்கே அவனால் சரியாகப் படிக்க முடியாது…”

பையன் சுட்டித்தனம் பண்ணுகின்றான்… அவன் செய்யும் குறும்புத்தனம் தாங்க முடியவில்லை…! என்று இப்படியே எண்ணினால்
1.அவனுக்குள் குறும்புத்தனம் செய்யும் உணர்வைத் தான் வளர்க்க முடியும்.
2.அவனைக் காணும் பொழுதெல்லாம் வெறுப்பு தான் வளரும்.

அதற்குப் பதிலாக… அவனுக்கு அருள் கிடைக்க வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் அவனுக்கு ஞானம் கிடைக்க வேண்டும் அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். “நாளடைவில் அவன் ஞானமாக வருவான்…”

ஏனென்றால் குடும்பத்தில் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும் இன்றைக்கு இருக்கின்றோம்… நாளை எங்கே செல்கின்றோம்…? என்று யாருக்குத் தெரியும்…! என்ற நிலை தான் இருக்கின்றது.

சேர்த்து வைத்த சொத்துக்களோ சம்பாதித்து வைத்த பணமோ நம்முடன் வருகின்றதா…? இல்லையே.
1.ஆக நமக்கு அழியாச் சொத்து அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் தான்…
2.அதை வளர்த்தால் அங்கே போகின்றோம்.

என் பிள்ளை இப்படி இருக்கின்றானே… என் பிள்ளைக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தார்களே…! என்று
1.இது போன்று உணர்வுகளை யாரை எண்ணி அதிகமாக வளர்த்தோமோ
2.இந்தச் சொத்தை தேடி வைத்த நிலைகள் கொண்டு அவன் உடலுக்குள் தான் செல்ல முடியும்.

அவர்களையும் தரித்திரமாக்கி உணர்வின் தன்மை மாற்றிவிட்டு ஆடாகவோ மாடாகவோ பிறக்கத்தான் நேரும். இல்லையென்றால் அடுத்த உடலுக்குள் பேயாகச் சென்று அந்தக் குடும்பத்தையும் அழித்துவிட்டு நாயாகவோ பாம்பாகவோ தேளாகவோ பிறக்க வேண்டி வரும்… மீள முடியாது.

ஏனென்றால் இதைத்தான் குருநாதர் காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று பல நிலைகளைக் காட்டி அந்த உண்மைகளை உணரும்படி செய்தார்.

இன்றைய விஞ்ஞான உலகில் கடுமையான விஷத்தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. எந்தக் காரணத்தை கொண்டும் அந்த விஷம் நம்மை அழித்து விடக்கூடாது. உலகம் அழியப் போகிறது என்கிறார்கள்… விஷ உலகம் தான் அழிகின்றது

எம்மைச் சந்தித்த ஏராளமான குழந்தைகளுக்கு அருள் ஆசி கொடுத்துள்ளேன்… கருவுற்ற தாய்மார்களுக்கு ஆசி கொடுத்துள்ளேன்.

அந்தக் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று அவர்கள் ஆர்வத்தில் வரும் பொழுது இதைக் கொடுத்துள்ளேன். அந்த மாதிரிக் குழந்தைகள் ஞான குழந்தைகளாக வருவார்கள்.

1.அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு எப்படி உலகை அறிந்தானோ உலகைக் காக்கும் சக்தியாக வளர்ந்தானோ
2.அவன் உணர்வை எடுத்து இங்கே கர்ப்பமான பெண்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அந்த அறிவின் ஞானம் வளர்கின்றது
3.விஞ்ஞான உலகில் இருந்து மீட்கக் கூடிய சக்தியாக அவர்கள் வளர்வார்கள்
4.விஷத் தன்மைகள் அழிந்துவிடும்.. அரும் பெரும் ஞானிகள் தோன்றுவார்கள்.

காரணம் தென்னாட்டில் தோன்றியவன் தான் அகஸ்தியன். அதே தெற்கிலிருந்து தான் இந்த உலகை மீட்டிடும் சக்திகளும் வரப்போகின்றது.

விஞ்ஞானத்தால் பல பேரழிவுகள் வந்தாலும்… அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே பரப்பப்பட்டுப் பேரழிவிலிருந்து தப்பும் மனிதர்களாக உருவாக்கும். ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

இனிமேல் இதை எல்லாம் காணலாம்

இன்றைய உலகம் எங்கோ போவதாகத் தெரிந்தாலும்… நாம் இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தகைய துன்பங்கள் வந்தாலும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை மட்டும் கூட்டிக் கொள்ளுங்கள்.

நோயுற்றவர்களைக் காண நேர்ந்தால் அந்த நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.அது தான் நாம் சொந்தமாக்க வேண்டியது
2.என்னை இப்படிப் பேசினானே… அவனைச் சும்மா விடுவதா…? என்று இதைச் சொந்தமாக்க வேண்டாம்.

அதைச் சொந்தமாக்கினால் மீண்டும் பிறவிக்குத் தான் அந்த உடலுக்குள் தான் செல்ல வேண்டி வரும்.

ஆகவே அருளை நாம் சொந்தமாக்குவோம். இருளை அகற்றுவோம்… மெய்ப்பொருளைக் காண்போம்… மெய் வழி வாழ்வோம்… அருள் ஞானம் பெறுவோம்… அருள் வாழ்க்கை வாழ்வோம்.