ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 24, 2023

மகரிஷிகள் காட்டும் கற்பு

அருந்துகின்ற நன்னீர் உடைய அழகிய ஒரு பொய்கை உள்ளது. அருமருந்து போல் தித்திக்கின்ற சிறப்புடைய அந்தக் குளத்தின் நீரை… அந்நீரின் தூய்மை கெடாத வண்ணம் பாதுகாத்தலே சிறப்பாகும்.

அந்த நன்னீர் பொய்கையைக் கண்டவுடன் அந்த நீரில் நமது ஆடைகளைச் சுத்தம் செய்வதற்குச் சிறப்புடையது என்ற எண்ணம் கொண்டிட்டால்… ஆடை தூய்மை பெறும்.
1.ஆனால் குளத்தின் நீர் தன்மை மாறு கொண்டுவிடும்.
2.அதன் தூய்மை கெட்டு அருமருந்தை விருந்தாக்கிடும் செயலும் அற்றுப்போகும்.

நீண்ட நெடும் அறிவின் தர்க்கத்திற்கே… “தர்க்கம் என்பது வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்ற நல்ல வாய்ப்பு…” என்றால் மிகையன்று.

சிறப்புடைய ஓர் காலகட்டத்தின் மன அசைவு நிலை… பாடத்தின் தன்மை கருத்தோவியமாக விளங்குதலினால்… காட்சிப்புலன் உலகோதய நடைமுறை ஆத்ம ஞானம் கூட்டிடும் சிறப்பு என்று சுருங்கக் கூறினாலும்… விளங்கிக் கொள்கின்ற தன்மையாக அதன் தொடரை இதில் உரைப்போம்.

நன்னீர் பொய்கை என்று உரைத்திட வந்ததே…
1.உயிராத்மா வலு வேண்டி உயர் ஞான முகிழ்விப்பில்
2.தன் உயிராத்மா சக்தியின் முலாமை வளர்த்துக் கொண்டிட வேண்டும் என்ற உத்வேக உந்துதல் தான்.

அந்த முயற்சியின் வித்து… அஷ்ட பேதங்கள் கூட்டிடும் “சிருஷ்டியின் உதயத்திலும்” அதே செயல் தன்மை “உயர் ஞான வளர்ப்பிலும்” உண்டு.

நெருப்பாகவும் நீராகவும் காற்றாகவும் நிலமாகவும் ஆகாயமாகவும் அமில குணத்தன்மைகளாகப் பால்வெளியில் படர்ந்து விளங்கிட்ட சக்தியின் சக்தியையே பஞ்சபூதங்களாகக் காட்டிட்ட அத்தன்மைகள்…
1.ஒன்று கலந்த உயிரணுவாக பரிணமித்திடச் செய்வது “அகங்காரம்” என்ற பேதம்.
2.இந்நிலையின் கூட்டுச் சுழல் தன்மையால் மனம் “எண்ணம்” என்ற பேதத்தைக் காட்டுகின்றது.
3.இதனினும் சூட்சும பேதமே “அறிவேனும் புத்தி”
4.ஆக ஓர் சிருஷ்டியின் அஷ்ட பேத குணங்களின் சங்கமத்தின் மூலம் தான் ஆத்ம நிலை ஐக்கிய ஜீவன் பெறுகின்றது.

இத்தன்மைகளின் மூலத்தையே பிரகிருதி (இயற்கையின் நியதி) என்பார் வியாச பகவான்.

“எத்தனை பேதங்கள் ஒன்றுபட்டு” அற்புதமான இந்த மனிதச் சரீரம் வாய்க்கப் பெறுகின்றது…? காலத்தின் தன்மையைத் தவறவிட்டால் அது தகுமா…?

இயற்கையின் சிருஷ்டியே பேதங்களாகப் பாகுபடுத்திக் காட்டிட வீரியத் தன்மைகள் கிடைத்தற்கரிய பாக்கியம் பெற்ற இந்த மானிட ஜென்மத்தின் சக்தி பெற்றிடும் வழி அறிந்தும்…
1.பஞ்சபூதங்கள் எனும் பரந்த பேரருள் செல்வத்தை மனிதன் தேடியே அலைந்து
2.அதைக் கூவி அழைத்தாலும் அது பருப்பொருளாகக் (கண்ணுக்குப் புலப்பட்டதாகக் கையில்) கிடைக்குமா…!

பஞ்சபூதங்களை இவனில் ஐக்கியப்படுத்திவிட்டு… ஒன்றில்லாமல் ஒன்று இல்லை என்றே பின்னிப் பிணைந்திட்டு… சுவாசத்தின் தன்மையாகச் சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள சக்தியைத் தன்னுள்ளே ஈர்த்துக் கொண்டு வளர்வதில்… “தான் எத்தகைய பேதமும் உரைத்திட முடிந்திடாது…”

மகா ஞானியாக இருந்தாலும் இச்சுவாச அலை ஈர்ப்பில்… தன் ஆத்ம சக்தியைப் “பிறரைப் போற்றி அடிமை கொண்டிடும் பொழுது… பஞ்சபூதங்களே பேதங்கள் காட்டும்…”

இனி உயர்ஞான வளர்ப்பில் சிந்திக்கலுறும் மனித ஜீவன்… அஷ்ட பேதங்களை ஒன்றுபடுத்திடும் உயர்வான ஜெப அலையை ஈர்த்திடும் பொழுது… சரீரம் கொண்டிட்ட உணர்வுகள் பஞ்சேந்திரியங்களாகச் செயல்படும் காலத்தில்… அதி நுட்ப உணர்வுகள் கிளைத்தெழும் தன்மையை வளர்த்துவிடும் “காந்தப்புலம்…”
1.இங்கு தான் மனத்தின் பேதம்
2.புத்தி எனும் அறிவின் பேதத்தை நாடுகின்றதா…?

அன்று பஞ்சேந்திரியங்கள் கட்டவிழ்த்து ஓடும் ஓர் பிடிப்பின் தன்மைக்கு… அறிவின் ஆற்றலையே உண்டுவிடும் ஈர்ப்பில் அது செயல் கொள்கின்றதா…? என்ற வினாவிற்குப் “புலன் காத்தல் கற்பு” என்பார் வேதாள மாமகரிஷி.

பரிவு எனும் பேதம் கொண்டது நன்னீர் பொய்கை. ஆடை என்பது உலகோதயப் பிடிப்பு எனும் அதி ஆசை நிலை.

அந்த ஜெபநீரைப் பெற்றிடவே… பேரருள் செல்வமாக விளங்கிடும் அந்தப் பேரானந்தப் பெருநிலையை… அறிவு என்னும் தீட்சண்யம் கொண்டு விளங்கிச் சுடர்ந்திடும் அத்தன்மையை… மனிதன் உலகோதயப் பிடிப்பில் செயல் கொண்டு வாழ்ந்திடும் செயலின் நிலையே - நன்னீர் பொய்கையும்… அதிலே ஆடை சுத்தி செயல் தன்மையும்…!

தனக்குள் கட்டுக்குள் அடங்கி நிற்கின்ற பேத குணத்தன்மைகள் அது கட்டவிழ்ந்து ஓடும் செயல் நிகழ்வு புலன்கள் காத்திடாத் தன்மையாக உள்ளதே மௌடீக (மூடத்தனம்) நிலை.

கற்பு என்றிட்டால் சிற்றின்ப நிலை அடக்கும் தன்மையையே இன்றைய மனித மனம் உரைத்திடும். அது அல்ல…!

பஞ்சபூதங்கள் தன்னுள் செயல் கொண்டு… பஞ்சேந்திரியங்களான…
1.மனம் புத்தி அகங்காரம் என்ற சூட்சுமத் தன்மைகளைத் தன்னுள் தெளிவுபடுத்திக் கொண்டு
2.இயற்கையுடன் ஒன்றி வாழ்பவனுக்கு பேரின்ப நாட்டமன்றோ சாஸ்வதமாக நிலை பெற்று விளங்கிடும்.

இதையே கற்பு என்பர் மகரிஷிகள்.