ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 26, 2023

“துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனித்துப் பிரித்தெடுக்கக்கூடிய வல்லமையை” நாம் பெற வேண்டும்

விஞ்ஞான அறிவு கொண்டு டிவிக்களில் மனித உருக்களைப் படமாக்கிக் காட்டுகின்றார்கள்… ஒலி/ஒளி அலைகளாகப் பரப்புகின்றார்கள். எந்த அலைவரிசையில் திருப்பி வைக்கின்றோமோ அந்தப் படக் காட்சிகளையும் அதிலிருந்து வரும் சொல்களையும் காண்கின்றோம்.

இதைப் போன்று தான் ஒரு தெய்வத்தை வழிபட்டு வருகிறோம் என்றால்… அதை நமக்குள் பதிவாக்கி விட்டால்
1.பதிவான உணர்வுகள் அங்கு இருப்பது கல் சிலை தான்
2.அதிலே பல நிறங்கள் பல ஆடைகள் பல ஆபரணங்கள் எத்தனையோ விதமான அலங்காரங்கள் எல்லாவற்றையும் கண்களால் உற்றுப் பார்த்து
3.அந்த உணர்வின் அலைகளாக மாற்றித்தான் நாம் நுகர்ந்து அதை அறிகின்றோம்.

அதாவது அதன் மீது சூரியனுடைய ஒளிக் கதிர்கள் படப்பட்டு எத்தகைய கலர்கள் இருந்ததோ அந்த உணர்வலைகள் கவரப்பட்டு அந்த அலைகளாகக் கவர்ந்து வெளி வருகின்றது.

அதன் உணர்வைத் தான் நம் கண்ணின் கருவிழி தனக்குள் இதைப் பதிவாக்குகிறது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ சூரியனால் கவரப்படும் இந்த அலைகளைத் தனக்குள் எடுத்து இந்த பூமியில் பரவுவதைக் கருவிழி இங்கே பதிவாக்கியதனால் இதைக் கவர்ந்து கொள்கிறது.

கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி நம் உயிரிலே இணைக்கச் செய்து இந்த உணர்வின் அலைகளை உடலில் பரப்பச் செய்து அதன் உணர்ச்சிகள் எதுவோ அதன் செயலாக்கங்களை நம்மை அறியச் செய்கிறது.

மனிதனாக இருக்கக்கூடிய நாம் அறிந்து இதை கொள்ள வேண்டும்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்…! குரு அருளைப் பதிவு செய்து அதன் வழி உணர்ந்து கொண்ட… தெரிந்து கொண்ட நிலையைத் தான் என்று வெளிப்படுத்துகின்றேன்.

சாமி என்னமோ சொல்கின்றார்…! விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசுகிறார்…! என்று எண்ண வேண்டியதில்லை.
1.விஞ்ஞான அறிவு கொண்டு எதைச் செய்கின்றார்கள்…? என்று குரு அருளால் இங்கிருந்து அதை நான் காண முடிகின்றது.
2.அந்த அலைகள் பரவி இருப்பதை என்னால் நுகரவும் அறியவும் முடிகின்றது.

காரணம்… விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியால் தீமைகள் பயக்கின்றது. அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களில் இதைப் பதிவாக்குகின்றேன்.

நீங்கள் நினைவு கொண்டு அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்து “விஞ்ஞான விஷத்தன்மையால் வரும் பேரழிவிலிருந்து… உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள வேண்டும்…”

எப்படிப் பல ஸ்டேஷனில் இருந்து அலைகள் வந்தாலும் டிவி.யைத் திருப்பி வைத்தவுடன்… அந்த ஸ்டேஷனுக்குரிய அலைகளை மட்டும் பிரித்து எப்படி எடுக்கின்றதோ… அதைப் போல்
1.துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளி அலைகளைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வருவதை
2.இப்பொழுது பதிவாக்கிப் பதிவு கொண்ட நிலையை நினைவைக் கூட்டி அந்த வலுவினை எடுத்துக் கொண்டால்
3.நாளைக்கு எத்தனை விபரீதங்கள் விஞ்ஞானத்தில் வந்தாலும் அதிலிருந்து பிரித்து
4.நீங்கள் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உங்களைக் காக்க முடியும்
5.உங்கள் சார்புடையோரையும் நஞ்சிலிருந்து மீட்க முடியும்.

அந்த நிலையை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் குரு இட்ட ஆணையை… அந்த வழிப்படி செய்கின்றேன்

சூரியன் வாழ வேண்டும் என்றாலும் தனக்கு ஒத்த கோள்களின் தன்மை சமப்படுத்தினால் தான் இதுவும் வாழ முடியும். தனக்கொத்த நிலைகளில் வந்தால் தான் சூரியக் குடும்பமே ஜீவனுடன் இருக்க முடியும்.

உதாரணமாக குடும்பத்தில் குழந்தை பிறந்து வளர்ச்சியடைந்து திருமணமான பின் தனிக் குடும்பமாக செல்கின்றார்கள்.

இது போன்றுதான் இந்தச் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் தனக்கென்று நிலையில் வரப்படும் பொழுது… கார்த்திகை நட்சத்திரம் அதுடன் சேர்ந்து ஏனைய நான்கைந்து நட்சத்திரங்கள் தனக்கென்று ஒரு குடும்பமாக சூரியக் குடும்பமாக பிரிந்து சென்று விட்டது.
1.அவை எடுத்துச் சமைத்து நம் சூரியனுக்குக் கொடுக்கும் உணர்வுகள்
2.சூரியனுக்குக் கிடைக்காது போய் விட்டது (அதனால் மங்கல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது).

இருப்பினும் நட்சத்திரங்களால் வெளிப்படுத்தப்பட்டு மின்னல்களாக வருவது… அதன் உணர்வுகள் பல நிலைகள் மாறினாலும் நமது பூமிக்குள் அந்த மின்னல்கள் தாக்கப்படும் பொழுது செடி கொடிகள் கருகி விடுகின்றது.

அதே மின்னல்கள் பூமிக்குள் ஊடுருவினால் எதிர் நிலையான நட்சத்திரங்களின் அலைகள் ஒரு இடத்தில் குவியப்படும்போது இங்கு எதிர் நிலைகள் உருவாகின்றது.

சாந்த குணங்களும் நல்ல பண்புகள் கொண்டிருக்கப்படும் பொழுது ஒருவன் பயமுறுத்தும் உணர்வினை வெளிப்படுத்துகிறான் என்றால் அதை நுகர்ந்தால் உடலையே அது எப்படிக் கலக்குகின்றதோ நம்மை அஞ்சச் செய்கின்றதோ… சிலருக்கு பேதி கூட ஆகிவிடும். அவன் தன்னைக் கொன்று விடுவான் என்றால் அந்த உணர்வின் தன்மை வந்தபின் பேதியாகி விடுகிறது.

இதைப் போன்றே நட்சத்திரங்களுடைய மின் கதிர்கள் ஊடுருவி விட்டால்
1.எதிர்நிலை கொண்டு கொதிக்கலனாக மாறுகிறது… பாறைகளை உருக்கி விடுகின்றது.
2.இந்த பாறைகள் உருகி வரும்பொழுது நட்சத்திரங்கள் தாக்கிய ஒளிக்கற்றைகள் அது பலவீனமாகும் வரையிலும் குழம்பாகி
3.ஒரு நொடிக்குள் ஒரு குலுக்கு குலுக்கி விட்டு நின்றுவிடும் (நிலநடுக்கம்).

அதன் பின் பார்த்தால்… சில பாறைகளில் வெடிப்பாக இருக்கும். உருகிக் குழம்பான ஆவியின் கற்றைகள் வெளிச் செல்லும் பொழுது பாறைகளில் பல பல உலோகத் தன்மைகளும் மருந்துத் தன்மையும் பாறைகளின் நிறங்கள் மாற்றம் கைரேகை போன்று இருக்கும்.

எங்கே வெடித்ததோ அந்த ஆவியின் தன்மை சேர்ந்து மறுபடியும் அந்த சந்தை அடைத்துக் கொள்ளும்.

இவைகள் எல்லாம் இயற்கையின் நியதிகள்… ஆதியிலே கண்டவன் அகஸ்தியன்.
1.அவனுடன் சேர்ந்து விஞ்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வுகளை இணைத்துப் பார்த்து
2.உலகம் எப்படி இருக்கின்றது…? என்று உங்களை நீங்கள் அறிந்து
3.இனி வரும் விஷத்தன்மைகளிலிருந்து நீங்கள் மீண்டிட வேண்டும்.

அந்த அகஸ்திய மாமகரிஷியின் உணர்வுகளை நுகர்ந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் எண்ணம் தான் அதற்கு உதவும். எந்த சாமியாரும் எந்தக் கடவுளும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை.