ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2023

நன்றாகத் தியானம் செய்பவர்கள்… அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

1.நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அறிவுகளையும் தெளிவாக்கும் நாள் தான் கார்த்திகை தீபம்… கார்த்திகை ஜோதி
2.அதாவது எல்லா அணுக்களுக்கும் தெளிவான (ஒளியான) உணர்ச்சிகளை ஊட்டும் நாள் இது.

கோபப்படுபவரை நாம் எண்ணினால் நம் மனம் இருண்டு விடுகின்றது. நோயோடு வாடுகின்றான் என்று பார்த்து அதை மீண்டும் எண்ணினால் நம் மனம் இருண்டு விடுகின்றது. சிந்தனை இழக்கச் செய்து நம்மைச் சோர்வடையச் செய்கின்றது.

ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது… அத்தகைய இருண்ட நிலைகளை எல்லாம் தெளிவாக்கிச் சிந்தித்துச் செயல்படும் சக்தியை நமக்கு ஊட்டுகின்றது.

நமது சாஸ்திரங்கள் கூறிய தத்துவத்தின்படி விதியை மதி கொண்டு மாற்ற முடியும்.
1.நமது உயிரின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.உடலில் இருக்கும் எல்லாவற்றையும் அருள் ஜோதியாக இருள் சூழாத நிலைகள் கொண்டு
3.ஏகாந்த நிலையாக… என்றும் ஏகாதசி என்ற பத்தாவது நிலையை அடைய முடியும்.

மனிதன் ஒருவன் தான் இதைச் செயல்படுத்த முடியும்…! இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் அழைத்துச் சென்று
2.அது வெளிப்படுத்தும் உணர்வுகளை கவரச் செய்து
3.அதை நீங்கள் நுகரப்படும் போது உங்கள் இரத்தத்திலே அந்த துருவ நட்சத்திரத்தினுடைய சக்திகள் சேருகின்றது.
4.உங்கள் உடலில் சோர்வோ எங்கேயாவது வேதனையோ இருந்தாலும் அது குறையத் தொடங்குகின்றது.
5.இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அந்த உணர்வுகள் குறையத் தொடங்கும்

அது மீண்டும் குறைய… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்கிக் கொண்டால் நமக்குள் இருக்கும் பிணிகளை மாற்றி… சிந்தித்து செயல்படும் வலுவைக் கூட்டி… அருள் உணர்வின் தன்மை கொண்டு இந்த வாழ்க்கையைத் தெளிவாக்கி ஒளியின் சுடராக நாம் மாற முடியும்.

ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டாலும்
1.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அந்த அணுக்கள் நல்லதாக மாறும் பொழுது உடலிலே வலி தெரியும் …!
2.தீய உணர்வுகளை நுகரப்படும் பொழுது… அந்தத் தீயது நல்லதாக மாறும் பொழுது வலிகள் வரும்

நல்லதாக்க வேண்டும் என்ற நிலையில் ஆத்ம சுத்தியோ தியானமோ செய்து… அந்தந்தச் சந்தர்ப்பங்களில் மாற்றும் பொழுது
1.எல்லாம் மாற்றினேன்… ஆனால் வலிக்கிறது என்று கொஞ்சம் சங்கடம் இருக்கும்… வெறுப்பு கூட இருக்கும்.
2.ஆனாலும் ஒளியின் சுடராகும் பொழுது நம்மைத் தெளிவாக்கும்
3.ஓரளவுக்கு மாற்றிக் கொள்ளும் வலுவும் கிடைக்கிறது.

ஆகையினால் எப்படி இருந்தாலும் நம் உணர்வின் அணுக்களை ஒளியாக மாற்றப்படும் பொழுது தீமையின் உணர்வாக வளர்த்த… “இந்த உடலும் கரைகின்றது…”

அதே சமயத்தில் ஒளியின் சுடராக மாறி உயிருடன் ஒன்றி உயிரான்மா வெளி செல்லும் பொழுது பேரருள் பேரொளியாக ஏகாந்த நிலை அடைகின்றது.

ஆனால்… இந்த மனிதனின் வாழ்க்கையில் வெறுப்பும் வேதனையும் கொதிப்பும் அதிகமானால்… அதனதன் உணர்வுகள் கலக்கப்பட்டு அதற்குத் தக்க உடலாக… புலியோ நரியோ நாயோ பாம்போ தேளோ இதைப் போன்ற உடல்களுக்கு அழைத்துச் சென்று “நம்மை உருமாற்றிவிடும் நமது உயிர்…”

இன்றைய செயல் நாளைய சரீரமாக மாற்றிக் கொண்டே உள்ளது உயிர். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்திந் உணர்வுகளைக் கலக்கும்படி செய்தோம்.
1.இந்த உபதேசத்தின் உணர்வுகள் உங்களை மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு அமுதாகச் சேர்கிறது…
2.”அருள் வழியில் வளரும்” அத்தகைய அணுக்களாக மாற்றும்.

அந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டும் அதற்கே இதைச் செயல்படுத்துகின்றேன் (ஞானகுரு).