ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 3, 2023

அக்னி அஸ்திரம்

1.உள்ளத்தின் கூளமதை உணர்ந்து கொண்டு… அதை தூய்மையாக்கிடும் முயற்சிக்கு (தன் ஆத்மாவைச் சுத்தம் செய்வது)
2.இன்றைய மக்களின் நிலை வேர்விடும் ஒதிய மரமாகக் காணப்படுகின்றன.
3.சூறைக்காட்டில் ஒதிய மரம் (மிகவும் மென்மையான மரம்) நின்று நிலை பெற்றிடாது.

கருமானின் (கொல்லன்) உலைக்களத்தில் சென்று தேவையற்ற இரும்புப் பொருட்கள் அங்கே ஏன் கிடைக்கின்றது…? என்று கேள்வி கேட்க முடியுமா…! அவைகளை அவன் உளைக்களத்தில் தானே வைக்க முடிந்திடும்.

உலக சிருஷ்டியின் கூளத்தைப் பார்…! உலகத்தின் குப்பைகள் ஒவ்வொன்றும் புதிய புதினங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் சிருஷ்டியின் இரகசியங்களை நீ அறிந்து கொண்டிட வேண்டும்.

மனித மனத்தின் கூளங்கள்… மனிதனின் மனக்கருவையை மூடிக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்து… ஆத்ம பரிபாலன அரசை இந்த உலகோதயம் சூதிலே வீழ்த்திவிடும்.

உரத்து எழுகின்ற காற்றே குப்பைகளை அகற்றும். அது போல் மகரிஷிகளின் சக்தியை வைத்துத் தான் ஆன்மாவில் பட்ட அசுத்தங்களை அகற்ற முடியும்.

தூய்மைப்படுத்த வேண்டுமென்றால்… சப்தரிஷிகளின் அருள் வழி கடாக்ஷங்கள்… மகரிஷிகளின் அருள் ஒளியாக உரத்து மனத்தூய்மை காட்டும் அந்தச் செயல்பாட்டின் உறுதி நம்மிடம் எப்படி இருக்க வேண்டும்…?

தென்னம்பாளைப் பஞ்சு…
அம்பின் நுனிக் குஞ்சு…
பாறையின் மோதல் வேக நெருப்பு… (SELF IGNITION)
(இராம) காதையின் வழி கண்டுகொள் விருப்பு.

1.தென்னம்பாளைப் பூவின் பஞ்சு போல் அமைத்திட்ட கோலாக அம்பாக அமைந்து…
2.நாண் பூட்டிய வில்லின் மூலம் அதை எறிய…
3.காற்றின் உராய்வு சக்தி கொண்டு கனன்று எரிகின்ற நெருப்பாக…
4.மனத்தூய்மை பெற்றிடும் முயற்சி… அக்னி அஸ்திரத்தை எறிகின்ற விசை போல் இருந்திட வேண்டும்

நீ ஈர்த்துக்கொண்டிடும் “உயர் மின் நுண்காந்த அணுக்கள்” ஆகாயச் சித்தன் (அகஸ்தியன்) கண்ட செயலில்… சரீர உள் நிகழ்வில்…
1.உச்சி முதல் உள்ளங்கால் வரை… உள்ளங்கால் முதல் உச்சி வரை அந்த ஒளி அணுக்கள் ஓடிடும் ஓட்ட கதியில்…
2.மேலிருந்து கீழாக கீழிருந்து மேலாக ஓட்ட கதி சந்திப்பின் உராய்வில் உண்டாக்கப்படும் ஒலி நாதம்…
3.நம் சரீரத்தைச் சுற்றி ஓடும் அண்ட கோசம் என்ற ஒளிச்சுற்றலாக அமைவு கொண்ட அமைப்பில்
4.உன்னுள்ளே ஓங்கார நாதத்தை இடைவிடாது கேட்டு அனுபவிக்கின்றாய் அல்லவா.

ஞானமாகச் சுடர்கின்ற தன்மைக்கு அதுவே முன் முயற்சி. அனைத்தையும் அறிந்து கொள்ள தெளிந்து கொள்ள முடியும். அத்தகைய மனித மனத்தின் மனோ சக்தியின் ஆற்றலை… இன்றைய மனிதன் இன்னும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

பூட்டி இருக்கின்ற மனக் கதவைத் திறந்து கொள்ள… இங்கே கொடுக்கும் உபதேச வாயிலாகத் “தியானம் என்ற சாவியை” மனமுவந்து அளிக்கின்றோம்.

ஆதை வைத்துத் தன் மனக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன்… உள்ளே இருந்து கொண்டு கதவடைத்துத் தாழ்பாளை இட்டு பூட்டிக் கொண்ட பின்… சாவியைத் தொலைத்து விட்டானப்பா…! (மீண்டும் பிறப்புக்கு வராது மகரிஷிகளுடன் ஒன்றிடும் நிலை).

1.அத்தகைய மெய் ஒலி மெய் ஞானம் சுடராக விளங்க… உண்மை நிலை உணர்ந்து தங்களை உயர்த்திக் கொள்வோர்
2.இங்கே வழிகாட்டும் மாமகரிஷிகள் நிலையின் வழி ஒன்றுவர்.

படைப்பின் படைப்பே சிருஷ்டி… அனைத்தும் பெற என்னுடைய ஆசிகள்.