ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 6, 2023

நாம் பிடிக்க வேண்டிய “பித்து”

அன்று குருநாதர் போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டி… ஒலிகளை எழுப்பி அது எப்படி வருகிறது…? எதற்காக அதைச் செய்கிறேன்…? என்று எனக்கு உணர்த்தினார்.

போஸ்டில் நான் கல்லைத் தட்டுவதைப் பார்த்து என்னைப் பித்தன் என்று சொல்கின்றார்கள். ஆனால் பித்தன் யார்…? என்று நீ சிந்தித்துப் பார் என்ற நிலையைத் தெளிவாக்கினார்.

ஒரு காரியம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.
1.எண்ணியபடி அந்தக் காரியம் நடக்கவில்லை… அதைத் தடைப்படுத்துகிறார்கள் என்றால் எத்தனாகவே மாறிவிடுகின்றோம்… எதிரிகளாக மாற்றுகின்றோம்.
2.உன்னால் என்ன செய்ய முடியுமோ… செய்து பார்…! என்று வீம்பின் தன்மை பேசுகின்றோம்…!

அப்பொழுது எத்தனாகவே மாறிவிடுகின்றோம்.

அங்கே அப்படி மாற்றியது யார்…? சந்தர்ப்பம் தான் அப்படி மாற்றுகின்றது
1.சிந்திக்கின்றோம்… தவறு செய்யக்கூடாது என்றும் எண்ணுகின்றோம்.
2.ஆனால் சந்தர்ப்பம் நம்மைச் செய்ய வைக்கின்றது… அதிலிருந்து மீள வேண்டும் அல்லவா.

அதற்குத்தான் அதிகாலை துருவ தியானத்தின் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை உந்தித் தள்ளி… சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

அங்கே இணைத்து இந்த உடலில் பெற்ற நஞ்சுகள் கரைய வேண்டும் என்று செயல்படுத்தினால் உடல் பெறும் உணர்வுகள் கரைக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் எல்லோரிடமும் அன்புடன் பண்புடன் தான் நாம் பழகி இருக்கின்றோம்
1.உடலை விட்டுப் பிரிந்தவர்களை யார் யார்…? என்று நாம் தனித்து எண்ண வேண்டியதில்லை.
2.அவர்களுடன் ஒரு நாள் பழகி இருந்தாலும் அவருடைய உணர்வு நம்முடன் கலந்து தான் உள்ளது.
3.இதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களையும் நாம் விண் செலுத்த முடியும்.

குருநாதர் இதைத்தான் எனக்குக் காட்டினார்

அறியாது செய்த தவறினால் நோயின் தன்மை ஆகி இறந்தால் அவர்கள் மீண்டும் பிறவிக்கு இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி விண் செலுத்த வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுக் கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

அந்த உடலில் உருவான இருள்களை அங்கே கரைக்கப்படும் போது சூரியனின் காந்த சக்தியினால் கவரப்பட்டால்… அதன் உணர்வை மாற்றி… மாற்றுப் பொருளாக உருமாற்றி விடுகின்றது.

இது போன்ற நிலைகளை நாம் செய்து பழகினோம் என்றால் “கூட்டுப் பிரார்த்தனை” என்பது இதுதான்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து “மொத்தமாகவே…” எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள்… சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து… பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியாத ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று நாம் விண் செலுத்த வேண்டும்.

உடலுடன் இருக்கக்கூடிய நண்பனும் நாமும் ஒருவருக்கொருவர் அன்புடன் கலந்து உறவாடினால் “எனக்கு நன்மை செய்தான்” என்று எண்ணும் போது விக்கலாகிறது. “தீமை செய்தான் பாவி…!” என்று எண்ணினால் அங்கே புரையோடுகிறது.

இந்த மனித உடலையே இப்படி இயக்கிடும் நிலை வரும் பொழுது மனிதனுடன் பழகி இருக்கும் உணர்வு கொண்டு அந்த உயிரான்மாக்களை அங்கே விண் செலுத்தினால் உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளிச் சரீரம் பெறும்.

அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து விளைகின்றது… அந்த உணர்வுகளும் இந்தப் பூமியில் பரவுகின்றது

அதன் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தினால் அவர் வாழ்ந்த காலத்தில் எத்தனை கஷ்டப்பட்டாரோ அதையெல்லாம் நீக்கி அவரால் நமக்குள் உருவான பரம்பரை நோய்களை… பரம்பரை குணங்களை… மாற்றி நாமும் பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.

இதைத்தான் நமது குருநாதர் அருள் வழியாகக் காட்டினார்.

நான் தட்டியது வெறும் போஸ்ட் அல்ல…!
1.அங்கே தட்டி “என் உயிரான ஈசனிடம் வேண்டினேன்”
2.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் என்று எண்ணினேன்
3.அந்தப் பித்து பிடித்து அதைச் செய்தேன்.

ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் கடவுளே.. அவன் தான் அந்த உடலை ஆளுகின்றான். உயிர் எப்படி ஒளியாக இருந்து இந்த உலகை அறிவிக்கின்றதோ “அதன் உணர்வு நான் பெற வேண்டும் என்று இந்தப் பித்து தான் என்னிடம் உள்ளது…” என்றார் குருநாதர்.

அதைத் தான் நானும் (ஞானகுரு) இன்று உங்களுக்குச் சொல்வது

எனது குருநாதர் சொன்னது போல நானும் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உணர்வுகள் ஒளியாக மாற வேண்டும்… உங்கள் உடலில் அறியாது சேர்ந்து தீமைகள் அகல வேண்டும்… அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று
1.என் குரு வழியில் “நானும் பித்தனாக இருக்கின்றேன்…”
2.நீங்கள் அந்த அருள் ஒளி பெற வேண்டும் அந்த ஏக்கத்தில் இருந்தாலே போதுமானது

இப்படி நாம் ஒவ்வொருவரும் அந்த அருளைப் பெற்றால் இந்தப் பூமிக்குள் வரும் இருள்களை நீக்க முடியும்.
1.அருள் வழி நாம் வாழ முடியும்
2.மற்றவரை நாம் வாழ வைக்கவும் முடியும்.

ஆஅகையினால் உங்கள் உயிரான ஈசனை மதித்துப் பழகுங்கள் உடலை ஆலயமாக உங்கள் மதியுங்கள். உங்களை உருவாக்கிய தாய் தந்தையைக் கடவுளாக மதியுங்கள். தெய்வமாகக் காத்த தாய் தந்தையரை மதித்து நடங்கள். நம்மைக் காத்த முதல் தெய்வங்களும் அவர்கள் தான்.

நமக்கு நல் வழி காட்டிய அந்த நல் உணர்வுகளைப் பதிவாக்கிக் குருவாக மதியுங்கள். நல்ல உணர்வை எப்போதுமே நம் தாய் நமக்குள் பதிவாக்கியிருக்கின்றது. ஆகவே… எந்த நிமிடத்திலும்
1.அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று எண்ணினால்
2.அந்த நல்ல உணர்வுகளை எளிதில் பெற முடியும்… நமக்குள் அறியாது சேர்ந்த இருளை நீக்க முடியும்
3.அந்தப் பேரருளைப் பெற முடியும்… நாம் பேரொளியாக மாற முடியும்.