ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 13, 2018

குருநாதர் வழியில் தான் யாம் உங்கள் பொட்டில் (உயிரில்) தொட்டுக் காண்பித்துக் கொண்டிருக்கின்றோம்...! – விளக்கம்


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயக்கிக் கொண்டிருக்கும் குணங்களைத் (உணர்வின் இயக்கங்களை) தெய்வங்களாகக் காட்டி
1.சந்தர்ப்பம் எதை நம்முடன் இணைக்கின்றது...
2.சந்தர்ப்பம் எதை நமக்குள் விளைவிக்கின்றது...? என்ற நிலையைத்
3.ஞானிகள் தெளிவாக உணர்த்தியிருந்தாலும்
4.காலத்தால் நாம் அதை அறிய முடியாத நிலைகள் ஆகிவிட்டது.

இந்த விஞ்ஞான உலகம் எல்லாவற்றையும் அழித்திடும் காலமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது. மனிதனின் சிந்திக்கும் நிலைகள் அழிந்து கொண்டிருக்கின்றது. மனித இனமே வீழ்ந்திடும் நிலைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

இந்தக் காலகட்டத்தில் இப்பொழுதாவது அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் செல்லும் உணர்வை வளர்த்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது.
1.எல்லோரும் பொட்டில் தொட்டுக் காண்பிக்கிறார்கள்,
2.குண்டலினியைத் தொட்டுக் காண்பிக்கிறார்கள்.
3.முதுகு தண்டைத் தொட்டுக் காண்பித்தார்...! அப்படியே ஜிர்…ர்ர்...! என்று இழுத்தது
4.ஆனால் சாமி (ஞானகுரு) இப்படியெல்லாம் ஒன்றுமே கொடுக்கவில்லையே...! என்று
5.நீங்கள் ஏமாந்து போய் “இதை விட்டு விடாதீர்கள்...!”

ஏனென்றால்
1.உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும்
2.உணர்வின் இயக்கத்தை உள்ளூர அதைத் தொட்டுக் காண்பித்து
3.அந்த இயக்கத்தின் உணர்வை உங்களுக்குள் அறியச் செய்து
4.அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு அது உங்களுக்குள் கட்டுப்பட்டு இயக்கும் சக்தியாக மாற்றுவதற்கு
5.அந்தந்தக் காலத்தில் ஒவ்வொரு மகரிஷியின் அருள் ஒளியை உங்கள் உடலுக்குள் சேர்த்து
6.பல விதமான குணத்திற்குள்ளும் உணர்வுக்குள்ளும் புகுத்தச் செய்து
7.உபதேச வாயிலாகக் கேட்டுணரச் செய்து பதியச் செய்து கொண்டிருக்கின்றோம்.
8.இது தான் தொட்டு காண்பித்தல் என்பது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி இது தான். குருநாதர் இப்படித் தான் எனக்குத் (ஞானகுரு) தொட்டுக் காண்பித்தார். அதைத் தான் உங்களுக்குள்ளும் நான் தொட்டுக் காண்பிக்கிறேன்.

மெய் ஞானியின் அருள் சக்தியை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இணைத்து அந்த உணர்வின் தன்மையை இயக்கச் சக்தியாக மாற்றி விடு...!
1.“மக்கள் அனைவரையும் மெய் ஞானிகளாக மாற்ற வேண்டும்...!”
2.எல்லா மக்களும் விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர வேண்டும்...! என்ற இந்த முழுமையான எண்ணங்கள் கொண்டு அதைச் செய்...!
3.ஆனால் போற்றும் நிலைகள் கொண்டு உபதேசித்து விடாதே...
4.போற்றும் நிலைக்காக ஏங்கி விடாதே...
5.உன்னைப் போற்றும் இயக்க நிலைகளுக்கு ஏங்கி விடாதே...
6.போற்றும் உணர்வைக் கலந்து பதியச் செய்து விடாதே...!
7.அது உன்னையும் ஏமாற்றிவிடும் கேட்போர்கள் உணர்வையும் மாற்றிவிடும் என்று தெளிவாக குருநாதர் எனக்கு உணர்த்தினார்.

ஆகவே இந்த உடலை விட்டு எப்பொழுது உயிரான்மா சென்றாலும் என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் என்ற இந்த உணர்வினை நீங்கள் வளர்த்து அங்கே மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்குள் செல்வோம்...! என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.