ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 7, 2018

நம் ஜீரண உறுப்புகளுக்குள் நடக்கும் சில அதிசயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்...!


இரண்டு பேர் காரசாரமாகச் சண்டை போடுகிறார்கள். அந்தக் சங்கடமான வார்த்தைகளை நீங்கள் கேட்டுவிட்டு வந்து வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன செய்யும்...?

எவ்வளவு வேதனைப் பட்டார்களோ... அந்த வேதனையான உணர்வுகள் அனைத்தும் சாப்பாடோடு கலந்து உள்ளே செல்கிறது.

மற்றவர்கள் சங்கடப்படுவதையும் துன்பப்படுவதையும் ஆத்திரப்படுவதையும் நீங்கள் வேடிக்கையாகத்தான் கேட்டீர்கள். கேட்டு விட்டு வந்து சாப்பிடும் போது அந்த உணர்வு உணவுடன் கலந்து ஜீரண உறுப்புகளுக்குள் போகிறது.
1.அந்த வேதனையான உணர்வு கலந்த உமிழ் நீரும்
2.நாம் சாப்பிட்ட ஆகாரம் இரண்டும் இரைப்பையில் போய் என்ன செய்யும்...?

கோழி குருவி இருக்கிறது இல்லையா...? கோழியாவது கொத்தித் தின்று தன் குஞ்சுகளைக் கூட்டிப் போகும். ஆனால் குருவி காகம் போன்ற பறவை இனங்கள் எங்காவது சென்று இரையை எடுத்து வரும்.

குஞ்சுகள் “ஆ...ஆ...” என்று வாயைத் திறக்கும். தாய் தான் எடுத்து வந்த அந்த இரையை அதன் வாயில் போடும். போட்டவுடன் குஞ்சுகள் வாயை மூடிக் கொள்ளும்.

இதே மாதிரித்தான்
1.நம் சிறுகுடல் அதன் பசியின் நிலைகளை உந்தியவுடனே
2.இரைப்பையிலிருந்து “ஆ...!” என்று வாயைத் திறக்கும்.
3.அந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி இரைப்பையிலிருந்து “சொத்...!” என்று உணவு கீழே விழும்.
4.“லபக்...” என்று மூடிக் கொள்ளும்.

அது மூடியவுடன் என்ன அதிலிருக்கும் இரசத்தை வடித்துக் கொள்ளும். அடுத்துக் கீழே பசி எடுக்கும் போது இதைக் கீழே தள்ளி விடும். அதைக் கழித்து எடுத்துக் கொள்ளும்.

இப்படி வழித்துக் கொண்டே வந்து அதிலிருக்கும் சத்தையெல்லாம் பிரித்துவிட்டு விஷத்தையெல்லாம் வடித்து வெளியே அனுப்பும்.

இப்படி நமக்குள் அந்த விஷத்தை வடிக்கக்கூடிய திறன் இருந்தாலும், நாம் வேதனை உணர்வோடு அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டோம் அல்லவா..!

சாப்பாட்டில் இருக்கக்கூடிய விஷத்தைத் தான் சிறு குடலுக்குப் பிரிக்கத் தெரியும். ஆனால் வேதனையான விஷயத்தை கேட்டறிந்து அது இரைப்பையோடு சேர்ந்து விட்டால் என்ன செய்யும்...?

சிறு குடல் சத்தைப் பிரிக்க இழுக்கும் பொழுது இரைப்பை திறக்கும். ஆனால் பிறர் கோபமாகப் பேசியத்தைப் பார்த்தவுடன் அது “ஆ..” என்று வாயைத் திறந்துவிடும். திரும்ப மூடாது...! ஏன்...?

மிளகாயை வாயில் போட்ட பின் வாயை மூடச் சொல்லுங்கள் பாப்போம்…! உங்களால் மூட முடியுமா என்று பாப்போம்…? “ஆ... ஆ...!” என்று வாயைத் திறந்து அலறிக் கொண்டே இருப்போம். மூட முடியாது. மூட மாட்டோம்.

அதைப் போன்று தான் எரிச்சலான உணர்ச்சிகள் சிறு குடலை விரித்து  விட்டுவிடும். அப்போது “ஆ…ஆ..” என்று அலறும்…! உள்ளே “கட...புடா...!” என்று ஆகும்.

ஏனென்றால் சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு வருகிறீர்கள் இல்லையா…? ஒருவர் கோபமாகப் பேசுவார்.. ஒருவர் வேதனைப்படுவார்…! இரண்டும் இருக்கும்.

இதைப் பார்த்துவிட்டு வந்தவுடன் உங்கள் உடலிலுள்ள குடலில் இத்தகைய உணர்ச்சிகள் தோன்றுவதை நிச்சயம் பார்க்கலாம். நான் சொல்வதையெல்லாம் பாருங்கள் தெரியும்…!

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. ஆனால் நம் புலனறிவால் உடலுக்குள் பதிவாகும் உணர்வுகள் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது
1.அந்தந்த உணர்வுகள் (குணங்கள்) உடலுக்குள் சென்று
2.என்னென்ன வேலை செய்கிறது...!
3.உடல் உறுப்புகளையும் அதை உருவாக்கிய அணுக்களையும் அது எப்படி இயக்குகிறது... மாற்றியமைக்கிறது...! என்பதை
4.நீங்கள் தெரிந்து கொள்வதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

ஆகவே அந்தச் சுவாச நிலையைச் சீராக ஆக்க வேண்டும் என்பதற்குத்தான் தியானமும் ஆத்ம சுத்தியும் உங்களுக்குப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

எந்த வேலை செய்தாலும்... அல்லது எங்கே வெளியிலே சென்றாலும்... மறுபடியும் வீட்டுக்கு வந்த பின்னும்... மகரிஷிகளின் உணர்வுகளை நம் உடலுக்குள் கலக்கும் பழக்கம் வந்துவிட்டால் நம்மை அறியாது உட்புகுந்த தீமைகளை அந்த நேரத்திலேயே செயலிழக்கச் செய்ய முடியும்.

இது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல...!