ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 2, 2018

தசரதனுக்குப் பதினாறாயிரம் மனைவிகள் என்று காவியம் சொல்கிறது – அதனின் பொருள் என்ன…?


தசரதனுக்குப் பதினாறாயிரம் மனைவிகள் என்று கதை எழுதி இருக்கிறார்கள். ஏன்… என்று கேட்டால் அந்தத் தசரதன் “தான் வாழ வேண்டும் என்றால்… தினம் ஒரு கல்யாணத்தைச் செய்து கொள்கிறானாம்…!”

சீதாராமா என்கிற போது இராமனுக்கு ஒரு மனைவி என்று எழுதி இருக்கின்றார்கள். இராமனுக்கு ஒரு மனைவி. ஆனால் அப்பாவிற்குப் பல ஆயிரம் மனைவி. அப்பொழுது தசரத ராமா என்று சொல்லும் போது அதனுடைய பொருள் என்ன…?

தசரத ராமா என்றால் தசரதன் அவன் எண்ணிய எண்ணம் அது சொல்லாக வரப்போகும் போது அது இராமனாகின்றது என்று பொருள்.

உதாரணமாக கோபத்தைப் பற்றியோ சலிப்பைப் பற்றியோ சங்கடத்தைப் பற்றியோ சஞ்சலத்தைப் பற்றியோ வெறுப்பைப் பற்றியோ வேதனைப் பற்றியோ சொல்லும் போது இதெல்லாம் சக்தி “சீதா…!”

அந்தச் சுவையான நிலைகளை எடுத்துத் தசரதன் தன் உடலிலே சேர்க்கப்படும் போது அவன் எண்ணப்படி அந்தச் சொல்லின் தன்மை வரப்போகும் போது அவன் சொல் தசரத ராமனாக மாறுகின்றது.

தசரதனுக்குள் தோன்றியது தான் அந்த இராமன்… தசரதன் அப்பா சொன்ன நிலைகளுக்கு எழுகின்றது. தசரதன் என்கிறது யார்…? அப்பா என்பது உடல்.

நமக்குள் ஒவ்வொரு நிலைகளிலும் எடுத்துக் கொண்ட அந்தச் சக்திகள் எப்படி இருக்கின்றது என்ற நிலையையும் அதற்குள் தோன்றியது தான் சீதாராமா, அந்தச் சுவையின் நிலைகள் கொண்டு அந்த எண்ணங்கள் இயங்குகின்றதென்ற நிலையைத் தெளிவுறக் காட்டுவதற்கு அப்படி எழுதியிருக்கிறார்கள்.
1.அந்த இராமன் எங்கே தோன்றுகின்றான்…?
2.மனிதனான இந்த உடலில் தான்.

நான் எந்தச் சுவையின் சத்தை எண்ணுகின்றனோ அந்த உணர்வின் சத்தான உணர்வுகள் சீதாராமா. இப்போது நாம் சொல்லக் கூடியதை பேசக் கூடியதைச் சூரியனின் காந்த சக்தி இந்தச் சத்தைக் கவர்ந்து கொண்டால் “சீதாலட்சுமியாக…” மாறுகின்றது.

நீங்கள் காதிலே கேட்டு இதைப் பெற வேண்டும் என்று எண்ணும் போது சீதாராமனாக மாறுகின்றது. நீங்கள் கேட்டுக் கொண்ட இந்த  உணர்வுகள் அந்த உணர்ச்சிகள் அந்த உணர்வினுடைய நிலைகள் அம்பாகப் பாய்ந்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது சீதாராமா.

அதே மாதிரி
1.அந்த மகரிஷியின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று அந்த ஏக்கத்திலே நான் (ஞானகுரு) எண்ணும் போது அது சீதாலட்சுமி.
2.நான் எண்ணி என் உடலுக்குள் எடுத்தால் “சீதா…”
3.திருப்பிச் சொல்லப்போகும் போது சீதாராமனாகின்றது.
4.அப்போது அந்த சீதாராமா என்ற மகரிஷியின் அருள் ஒளி என் உடல் முழுவதும் படர்ந்து அதைச் செயலாக்குகின்றது.

அப்போது அந்தச் சொல்லாக வெளிப்படும் போது அந்தச் சத்து சீதா. அந்தச் சுவை என் உடலாகின்றது. அது சக்தியாக மாறுகின்றது. ஆனால் அந்த சத்திலிருந்து வரக்கூடிய உணர்வின் மணம் எண்ணம் அது இராமனாகின்றது என்ற இந்த நிலைகளை நமக்குத் தெளிவுற எடுத்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

சீதாராமா கல்யாணராமா தசரத ராமா கோதண்டராமா என்பார்கள். கோதண்டராமா என்றால் சண்டைக்குப் போகிறான். தன்னுடைய வலுவைக் காட்ட… “வில்லை எடுத்து” அது முறித்துக் காட்டினான். தனது வலுவின் தன்மையும் அது ஒவ்வொரு நிமிஷத்திலும் தன் சொல்லின் நிலைகள் கணைகளாகத் தொடுத்து அவன் இயக்கிக் காட்டினான்.

இதைப் போல
1.அந்த உணர்வின்…
2.மணங்களின்…
3.எண்ணங்களை…
4.நாம் தெரிந்து கொள்வதற்காக இப்படியெல்லாம் தெளிவுறக் கதைகளாக எழுதியுள்ளார்கள்.

இந்த மனித வாழ்க்கையில்
1.ஒவ்வொரு நிமிடமும் நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ
2.அந்த உணர்வான சக்தியை நம் உயிர் இயக்கி
3.அந்த உணர்வின் சத்தை உடலாக மாற்றி
4.உடலுக்குள் இணைந்த அந்தச் சக்தியின் மணத்தை
5.அதையே மீண்டும் நாம் சுவாசிக்கும் போது “எண்ணமாகி…!” அது இயக்குகின்றது.

இன்று நம் உடலுக்குள் விளைந்த அணுக்களின் தன்மைக்கொப்ப தசரத ராமனாகத்தான் நம்முடைய எண்ணங்கள் இருக்கின்றது. அதை மாற்றி
1.அருள் மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக்
2.”கல்யாணராமனாக” நாம் மாற வேண்டும்…!