ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 6, 2018

“மந்திரம்... தந்திரம்... ஆவி....!” என்றாலே சிலருக்கு அச்சம் ஏற்படுகின்றது – அதைப் போன்ற பயமான உணர்வுகளிலிருந்து விடுபடுங்கள்...!

நீங்கள் தவறு செய்யாமலே உங்களை அறியாது எத்தனையோ உணர்வுகள் தூண்டப்படுகின்றது. எத்தனையோ நிகழ்ச்சிகளை ரோட்டிலே பார்க்கின்றீர்கள்..! பத்திரிக்கைகளில் படிக்கின்றீர்கள். டி.வி.யில் பார்க்கின்றீர்கள்.

உதாரணமாக டி.வி.யில் பேய்களைப் பற்றியோ அல்லது அதிர்ச்சியூட்டக்கூடிய படங்களையோ காண்பிக்கின்றார்கள் என்றால் குழந்தைகள் அதை ஆர்வமாக வேடிக்கையாகப் பார்க்கும்.

அதிலே திடீரென்று மிகவும் பயமுறுத்தும் காட்சிகளைப் பார்த்துப் பதிவாக்கிக் கொண்ட பின் இரவிலே அந்தப் பயமான உணர்வுகள் இயக்கி மனதைப் பாதிக்கும் நிலை ஆகிவிடும். தூக்கம் வராது.

டி.வி.யில் படம் பார்க்கும் பொழுது “ஆ... ஊ...!” என்று சப்தம் கேட்டாலோ முதலிலே குழந்தை அதைப் பார்த்துச் சிரித்திருக்கும். ஆனால் இரவு வந்துவிட்டாலோ... “பயம் வந்துவிடும்...!”

அப்புறம் காலையில் எழுந்து இந்த உணர்வுடன் பள்ளிக்குச் சென்றாலோ படிப்பிலே மந்தமாகிப் போகும். வாத்தியாரிடம் இரண்டு அடி வாங்கியது தான் மிச்சமாகிப் போகும்.

பையன் படிப்பில் இப்படி ஆகிவிட்டானே...! என்ன செய்யப் போகிறானோ...? என்று தாய் தந்தையர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதுகள் எல்லாம் விஞ்ஞான அறிவால் வரக்கூடிய விளைவுகள்...!

நான் (ஞானகுரு) சின்னப்பநாயக்கன் பாளையத்தில் இருக்கும் பொழுது ஒரு மந்திரவாதி பல வேலைகளைச் செய்து என் கையை முறித்துவிடுவேன்... காலை முறித்துவிடுவேன்...! என்று மிரட்டிக் கொண்டிருந்தான்.

பல பயங்கரமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். ஒரு மண்டை ஓட்டைத் தூக்கிக் கொண்டு நான் இருக்கும் இடத்தில் வைத்தான்.

இந்தச் சாமியார் (ஞானகுரு) எங்கே இருந்து வந்து இங்கே வந்து வேலை செய்கிறான். அவனை எப்படியும் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் செய்து கொண்டிருந்தார்கள்.

ஏனென்றால் அங்கே இருக்கும் மக்களுக்கு எல்லாம் நல்லாகிப் போகும் என்று வெறும் விபூதியைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். காசும் வாங்கவில்லை.
1.ஈஸ்வரா...! என்று உங்கள் உயிரை எண்ணி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று சொல்லுங்கள்.
4.”உங்களுக்கு எல்லாம் நல்லதாகும்...!” என்று இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தேனே தவிர வேறு ஒன்றும் இல்லை.

அங்கிருந்த மந்திரவாதிகளோ மக்களை ஏமாற்றி மந்திரத்தாலே பல இன்னல்களைக் கொடுத்து பின் அதை நிவர்த்தி செய்து அதன் மூலம் காசைச் சம்பாரித்தவர்கள்.

நன் வெறும் விபூதியைக் கொடுத்து மக்களை நல்லதாக்கியதும் அவர்களுக்கு வருமானம் கிடைக்கவில்லை. இதை ஏற்கனவே குருநாதர் சொல்லி அனுப்பினார்.

உனக்குப் பல இடைஞ்சல்கள் செய்வார்கள்.. நீ மந்திரவாதிகளின் செயலை அனுபவபூர்வமாகத் தெரிந்து  கொள்ள இது ஒரு வாய்ப்பாகும் என்று தான் அங்கே சின்னப்பநாயக்கன் பாளையத்திற்கு என்னை அனுப்பினார்.

மந்திரவாதிகளைப் பற்றியும் மந்திர உணர்வுகள் எப்படி இயக்கி வேலை செய்கிறது...? என்று தெரிந்து கொள்வதற்காக ஒரு வருடம் அங்கே இருந்தேன்.

1.ஒவ்வொரு சிரமங்களும் எப்படி வருகின்றது...?
2.மனிதன் எந்த நிலையில் கஷ்டப்படுகின்றான்...?
3.மனித உணர்வினால் விளைந்த உணர்வுகள் (ஏவல் செய்வினை) எப்படி இயக்குகின்றது...?
4.அந்த உயிரான்மாக்கள் (ஆவி) எப்படி அந்த வேலைகளைச் செய்கிறது...?
5.மந்திர தந்திரங்களிலிருந்து எப்படி நாம் விடுபடுவது...? என்று
6.இதையெல்லாம் அங்கே வைத்துக் காண்பித்தார் குருநாதர்.

கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் இதையெல்லாம் உங்களிடம் இலேசாகச் சொல்கிறேன். உங்களை அறியாது இயக்கக்கூடிய தீமைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

ஆகவே எப்பொழுதெல்லாம் கஷ்டம் என்று வருகிறதோ அந்த நேரத்தில் எல்லாம் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடலுக்குள் சேர்த்து அதை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

இதை ஒரு பழக்கமாகப் பயிற்சியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
1.காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் ஒரு பத்து நிமிடம்
2.இரவில் படுக்கப் போகும் முன் ஒரு பத்து நிமிடம்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று
4.அவசியம் ஒரு பத்து நிமிடமாவது செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக அமையும். மன பலம் மன நலம் கிடைக்கும். உங்களுக்கு யார் இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்களுக்கும் “தக்க பதில் கிடைக்கும்...!”

செய்து பாருங்கள்...! உங்களை நீங்கள் நம்புங்கள்...!