ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 3, 2018

தன் பிள்ளைகள் மீது உள்ள பாசத்தால் அவர்கள் செய்யும் தவறைக் கண்டு பொறுக்க முடியாமல் அடித்து உதைப்பார்கள் – அடிப்பவர்களின் நிலை கடைசியில் என்ன ஆகும்...?


என் பிள்ளை மேலே ரொம்பப் பிரியமாக இருக்கின்றேன். அவன் பள்ளிக்கூடம் போக வேண்டும். அவன் பெரிய கல்விமான் ஆக வேண்டும். பெரிய டாக்டருக்குப் படிக்க வேண்டும். பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.

அந்த ஆசை எல்லாம் வைத்துக் கொண்டு இருக்கும் போது இந்தக் குழந்தை புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு போகிறது. போனவுடனே அங்கே இரண்டு குழந்தை கோலிக்குண்டு விளையாடுகின்றது. கூப்பிடுகின்றது...!

டேய்...! நான் இதிலே இவ்வளவு காசு பார்த்தேன்... அப்படிச் செய்தேன் இப்படிச் செய்தேன்...! என்று சொன்னவுடனே குழந்தை நின்று பார்க்கின்றது.  குழந்தைக்குள் இந்த உணர்வின் தன்மை பட்டுவிடுகின்றது. பார்த்த உணர்வுகள் குழந்தையிடம் பதிவாகின்றது.

வேடிக்கைப் பார்த்து விட்டுப்போன குழந்தையிடம் அங்கே பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லிக் கொடுத்தாலும் குண்டு விளையாண்டதைப் பார்த்த உணர்வுகள் இது முன்னணியில் இருக்கும்.

ஆனால் வாத்தியார் சொன்னதைத் திருப்பிக் கேட்கப் போகும்போது அந்த நினைவுகள் முன்னாடி இருப்பதால் பதில் சொல்ல வராது.

நான் சொன்னதைக் கேட்கிறாயா...! அல்லது எங்கேயாவது விளையாண்டு கொண்டிருக்கின்றாயா...? என்று சொன்னவுடன் “உள்ளதும்” சுத்தமாகப் போய்விடுகின்றது

அப்போது அந்த வாத்தியார் சொல்வது எல்லாம் கடுமையாகிப் போகும். அப்புறம் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்றால் இந்த உணர்வு குழந்தைக்கு என்ன செய்யும்…?
1.விளையாடுகின்ற பக்கம் போய்க் கொஞ்சம் வேடிக்கை பார்த்து
2.குண்டு விளையாடுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கும்.

வாத்தியார் பார்த்துவிட்டு... பையனைப் பார்த்தால் குண்டு விளையாடுகின்ற இடத்தில் இருக்கிறான் என்று உங்களிடம் வந்து சொல்வார்.

நாம் இவ்வளவு காசு கொடுத்துச் செலவு செய்து கொண்டிருக்கின்றோம். இவன் படிக்காமல் இப்படிச் சுற்றிக் கொண்டு இருக்கிறானா...? சரி இருக்கட்டும்... பார்க்கின்றேன்...! என்று முதலில் வித்து உங்கள் உடலுக்குள் விளைந்து விடுகின்றது.

விளைந்த பின் என்ன செய்யும்...? எட்டிப் பார்க்கும். டேய்...! இப்படி எல்லாம் செய்கிறாயேடா... அப்பா கண்டால் உன்னை உதைப்பார்..! என்று லேசாகக் கோபிப்பீர்கள்.

அடுத்தாற்போல அதையே மீண்டும் செய்தால் “தொலைந்து போகிறவனே...! இப்படிச் செய்கிறாயேடா...! என்று சொல்லி விட்டு உங்கள் பிள்ளையைச் “சொத்து...சொத்து...சொத்து...சொத்தென...! அடிப்பீர்கள்.

உன்னை நான் எப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தேன்...? இப்படி பண்ணுகிறாயேடா...! என்று பிள்ளையை அடித்துப் போட்டு அப்புறம் “புஸ்...புஸ்னு...” அழுகத் தொடங்குவீர்கள்.

தன்னை அறியாமலே அழுகை வந்து விடும். பிள்ளை மீது பாசமான நிலைகள் இருந்தாலும் இப்படி ஆகின்றது.

அதற்குத்தான் காளி கோவிலில் காளிக்கு முன்னாடி புலியை வைத்துக் காட்டியுள்ளார்கள். புலியை ஏன் வைத்தார்கள்..? புலி தன் பசியைப் போக்குவதற்காகத் தனக்கு முன்னாடி எது கிடைக்கின்றதோ அதை இரக்கமில்லாமல் அடித்துச் சாப்பிடும்.

இதைப் போன்றுதான் தன் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அவனை அடிக்க அடிக்க அந்த உணர்வின் வேகம் தீருகிற வரையிலும் போட்டு அடிப்பீர்கள்.

இப்படிப் பண்ணுகிறானே... அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ...? என்று சொல்லி உங்கள் கை வலித்தாலும் சரி... வேறு என்ன ஆனாலும் சரி... “சொத்து...சொத்து...சொத்தென..” போட்டு அடிப்பீர்கள்.

புலியைப் போன்று இந்தக் கோபமான உணர்வை எடுத்தவுடனே  உயிருக்குள் பட்டு அந்தக் கோப உணர்வின் சக்தியாகக் காளியாக வந்து விடுகின்றது.

சிவன் என்ன செய்கின்றான்...?

அந்தக் கோபமான காரத்தின் உணர்ச்சி இயக்கி “தொலைந்து போகிறவனே... அப்படிப் போகிறவனே... இப்படிப் போகிறவனே...” என்று இந்த உடலான சிவன் “ருத்ர தாண்டவம் ஆடி...!” சொத்து சொத்தென பையனை அடித்துப் போட்டுத் தாய் அழுகத் தொடங்கும்.

“சக்தியோ” தனக்குள் என்ன செய்யும்...? ஆவேசம் அடங்காதபடி பையனை நினைக்கும் போதெல்லாம் புஸ்...புஸ்னு இருக்கும்...! அந்த ஆத்திரம் வரும்...!

விநாயகருடைய வாகனம் எது...? மூஷிக வாகனா எலியைக் காட்டியிருப்பார்கள். ஆக பையனை அடித்து நொறுக்கி விட வேண்டும் என்ற இந்த உணர்வு அந்த ஆத்திரத்துடன் சேர்ந்து நம் நல்ல குணத்தை எலி வங்கு போட்ட மாதிரி வந்து விடுகிறது.

பன்றி என்ன செய்கிறது...? கெட்டதை நீக்கி நல்லதைப் பெற்றது. அதிலே சேர்த்து கொண்ட விளைவு மனிதனாகி நமக்குள் வரும் கெட்டதை நீக்கி விட்டு நல்லதைச் சமைத்துச் சாப்பிடுகின்ற சக்தியாகக் கிடைத்தது.

ஆக பையன் நல்லதாக வேண்டும் என்று நினைத்தோம். நம் ஆசைப்படி அவன் எண்ணவில்லை... அது சரியான முறையில் அவன் செய்யவில்லை என்றால் இப்படி வந்து விடுகின்றது. காளியாக மாறிவிடுகிறது.

அங்கே புலி இருக்கின்றது. இரக்கமற்று நாம் அவனை அடித்து விட்டோம்.
1.அவன் அலறுவதைப் பார்த்து ரசிப்போம்.
2.ரசித்த உணர்வுகள் உடலுக்குள் போனவுடனே நல்ல குணத்துடன் சண்டை போடுகின்றது.
3.நல்ல குணத்துடன் சண்டை போடும் போது அது தனக்குள் கிளர்ந்து தாங்க மாட்டாதபடி
4.அந்த உணர்ச்சிகள் பொங்கி தாய் நிச்சயம் அழுகும்.
5.இப்படிச் செய்கின்றானே என்று வேதனைபட்டு அழுகும்.
6.வேதனையான உணர்வு உள்ளுக்குள் போனவுடனே முதலில் நெஞ்சு வலி வரும்.
7.அப்புறம் இடுப்பு வலிக்கிறது மேல் வலிக்கிறது... இவனை நினைத்து நினைத்து எனக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது என்பீர்கள்.

அதே சமயத்தில் சுவாசித்த வேதனையான உணர்வுகள் விஷத்தின் தன்மை ஆகி அன்னக் குழாய்க்குள் சென்று அது எரிச்சல் ஊட்டி ஜீரணிக்கும் சக்தியைத் தடைப்படுத்தும்.

ஒரு காகம் வாயைத் திறந்து கொத்தி அது மூடிக் கொண்டு தன் இரையை எடுத்து மகிழ்ச்சியாகச் சாப்பிடுகிறது. ஆனால் அதற்கு வேண்டாததை வாயில் போட்டால் என்ன செய்யும்...? அது அள்ளித் துடிக்கிறது...!

அதைப் போல இந்த விஷத்தின் தன்மை இங்கே குடலில் பட்டவுடனே இது உதறித் தள்ளி அது உள்ளே ஜீரணிக்க முடியாத நிலை ஆகிவிடும்.

பின் இந்த விஷத்தின் தன்மை இரத்தக் குழாய்க்குள் போய் இரத்தத்துடன் கலந்து அதைச் சுத்தப்படுத்தும் பிஸ்டன் (இருதயம்) இரத்தத்தை இழுத்துக் கொண்டு போகும் பொழுது வேதனையான நிலைகளால் வீக்கமாகி இரத்தம் சரியாகக் கிடைக்காத நிலையில் அது திண்டாடும்.

எது...? இங்கே (இருதயம் – நெஞ்சில்) திண்டாடுகிறது மட்டுமல்ல. நல்ல குணத்துடன் சேர்ந்தவுடனே முதலில் நெஞ்சு வலிக்கிறது. அப்பறம் இடுப்பு வலிக்கிறது. பிடரி வலிக்கிறது. கண் வலிக்கிறது. தலை வலிக்கிறது. பாரமாக இருக்கிறது. ஒன்றுமே செய்ய முடியவில்லை இது எல்லாம் வரிசையாக வந்துவிடும்.

அப்பொழுதாவது நிறுத்துவோமா என்றால் இல்லை...! தொலைந்து போகிறவனை நினைத்து நினைத்து நினைத்து இப்படி ஆகிவிட்டது...! என்று இதைத்தான் சொல்கின்றோம்.

ஏனென்றால் பெரும்பகுதியான நிலைகள் நாம் சுவாசிக்கும்
1.அந்த உணர்வுக்கொப்ப தான் நம் பேச்சும்
2.அந்த உணர்வுக்கொப்பதான் செயலும்
3.அந்த உணர்வுக்கொப்ப தான் சொல்லின் நிலையும் கேட்போருடைய உணர்வும் அதுதான்.

பையனைப் பார்க்கும் போது வேதனை வந்து விடும். பையன் நம்மைப் பார்க்கும் பொழுது எல்லாம் வெறுத்துப் பேச ஆரம்பித்து விடுவான். தவறு யார் செய்தது...? நன்றாகச் சிந்தனை செய்து பாருங்கள்...!

வாழ்க்கையின் அத்தகைய சந்தர்ப்பங்களில் நல்லதைச் செய்ய ஆசைப்பட்டோம். அதன் வழி வரவில்லை என்கிற போது உங்களுக்கு வெறுப்பு வரும். அதே வெறுப்பின் தன்மை வரும் போது பையனும் உங்களை வெறுத்து விடுகின்றான்.

அப்போது அங்கே போர் முறை வருகிறது. ஆனால் அவன் எண்ணிய நிலைகளை நமக்குள் சேர்தோம் என்றால் நம் நல்ல குணமெல்லாம் சண்டை போடுகின்றது.

இதைப்போன்ற நிலைகள் எல்லாம் நமக்குள் வருகிறது என்று காட்டுவற்காகத்தான் காளிக்கு முன்னாடி புலியும் முருகனுக்கு முன்னாடி மயிலும் இங்கே விநாயகருக்கு முன்னாடி எலியும் போட்டுள்ளார்கள்.

எந்த நிலையை இணைக்கின்றாயோ
1.அது உனக்குள் வினையாகச் சேர்கின்றது.
2.வினைக்கு நாயகனாக உடலாக்குகின்றது.

எந்த நிலையை எண்ணுகின்றாயோ
1.அந்த வினைக்குத் தகுந்தவாறு அந்தக் குணம் இயக்குகின்றது
2.அது வினையாக விளைந்து வினைக்குத் தகுந்த அடுத்த சரீரமாகின்றது.

பிள்ளை மேலே பிரியமாக இருப்பார்கள். அப்படி இருக்கின்றான். இப்படி இருக்கின்றான் என்று குறையைப் பேசியிருப்பார்கள். அடுத்தாற்போல அம்மம்மா... ஐய்யய்யா.. இடுப்பு வலிக்கிறது... மேல் வலிக்கின்றது... என்னால் எழுந்திரிக்கவே முடியவிலை என்று வீட்டிலே பெண்கள் சொல்வதைப் பார்க்கலாம்.

தவறு யார் செய்தது...? உயிர் நாம் கொடுப்பதைப் படைத்துவிடும். இதைத்தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று தெளிவாகக் காட்டினார்கள் ஞானிகள்.

இதை எல்லாம் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறோம்.