ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 23, 2018

எண்ணத்தில் உயர்ந்தவனுக்கு முடிவு ஏது.....?


1.எண்ணும் எண்ணமே தான் மனிதன்.
2.எண்ணமே தான் மனிதன்... மனிதன் தான் எண்ணம்...!
3.எண்ணமும் மனிதனும் ஒன்று தான். தேவனும் மனிதனும் ஒன்று தான்.
4.எண்ணம் என்பது மனிதனின் பூர்வ புண்ணியப் பலன்.
5.ஒரு மனிதனை உயர்த்துவதும் அவன் எண்ணம் தான். மனிதனை இறக்குவதும் அவன் எண்ணம் தான்.
6.எண்ணத்தால் உலகையும் ஆளலாம். எண்ணத்திலிருந்து உறங்கவும் செய்யலாம்.
7.ஆனால் உறங்கிவிட்ட எண்ணத்திற்கு உலகமே இல்லை.
8.மனிதனின் எண்ணம் எல்லாம் பெரும் மலை போல் உயர்ந்திட வேண்டும்.
9.மடு போலக் குறுகியிருக்காமல் மலை போல் உள்ளவனுக்கே வாழ்க்கை எல்லாம் கிடைக்கும்.
10.எண்ணத்தைக் குறுக்கியவனுக்குக் குறுகிய வாழ்க்கையே அமையும்.
11.எண்ணத்தில் உயர்ந்தவனுக்கு முடிவேது…?
12.எண்ணத்தை உயர்த்தி உயிரான ஈசனை நினைத்துவிட்டால் அவன் வந்து வழி நடத்திடுவான்.

ஆகவே எண்ணும் எண்ணம் எல்லாம் உயர்ந்ததாக இருக்க வேண்டும்....! என்று சொல்லும் பொழுது எண்ணும் எண்ணம்... எனும் பொழுது
1.அதை நம்மால் செயல்படுத்த முடியுமா...? என்று எண்ணக் கூடாது.
2.எண்ணும் பொழுதே “அதைச் செய்திடுவோம்...!” என்றே எண்ண வேண்டும்.
3.எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஆசையுடனே செய்ய வேண்டும்.
4.ஆசையுடன் செய்திடும் பொழுது தான் அந்த எண்ணம் உயர்ந்து நிற்கும்.

மனிதனாகப் பிறந்தவன் எந்தக் காரியத்தையும் செய்யும் வலிமையான அருளைப் பெற்றுத்தான் பிறந்திருக்கின்றான். மனிதனாகப் பிறந்த அந்தப் பாக்கியத்தை மாற்றிடாமல் தன் எண்ணத்தைக் குறுக்கிவிடாமல் மலை போல் உயர்த்தி விட்டால் மாமனிதனாக வாழ்ந்திடுவான்.

எண்ணும் எண்ணமே இறைவன்... இறையின் செயலே தெய்வம்...! நாம் எண்ணுவதே தெய்வமாக உள் நின்று இயக்குகிறது. நல்ல எண்ணங்களை எண்ணி நல்ல சொல்களைப் பேசினால் நாவெல்லாம் இனித்திடும்... மனமெல்லாம் மணக்கச் செய்யும்.

நல்ல எண்ணங்களை எண்ணும் பொழுது மெய் ஞானிகளின்  அருளை எளிதில் பெறலாம். பெற்றுவிட்டால் அவர்களே நம்மை மெய் வழியில் நடத்திச் செல்வார்கள்.

அத்தகைய பேரின்ப நிலை பெற்றுவிட்டால் மனிதனே தான் தெய்வம்...!