ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 8, 2018

சாக்கடை என்றால்… “உன் எண்ணம் தான் சாக்கடையாக இருக்கின்றது…!” என்றார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி


குருநாதர் சில நேரங்களில் கோபிப்பார். கோபிப்பார் என்றால் சும்மா இருக்க மாட்டார். “டமார்...!” என்று என்னை (ஞானகுரு) உதைப்பார்.

கடையில் காபி வாங்கி வரச் சொல்லி சாக்கடையில் இருக்கின்ற மண்ணை அதில் அள்ளிப் போட்டு என்னைச் சாப்பிடச் சொல்கிறார்…! எப்படி இருக்கும் எனக்கு...?

சாமி... சாக்கடை...! என்கிறேன்.

நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா...! சாக்கடை என்றால்… “உன் எண்ணம் தான் சாக்கடையாக இருக்கிறது...!” என்கிறார்.

அப்பறம் பார்த்தால் ரோட்டில் போகிறவர்கள் எல்லாம் “நைனா” சாக்கடையில் போய் உட்கார்ந்து இருக்கின்றார். நல்ல பைத்தியம் பிடித்துப் போய்விட்டது என்று என் காது படப் பேசுகின்றார்கள்.

ஏதோ ஆசையில் போனார்... பைத்தியத்திடம் வசமாகச் சிக்கிக் கொண்டார் என்று எல்லோரும் கேலியும் கிண்டலுமாகப் பேசிக் கொண்டிருருந்தார்கள். சரி என்று சொல்லிவிட்டு அப்உறம் அந்தக் காபி டம்ளரைக் கொண்டு கடையில் கொடுக்கப் போனேன்.

சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்டுக் கொடுத்தால் அதை வாங்குவானா...? உங்கள் வீட்டிலேயே வைத்துக் கொண்டு காசைக் கொடுத்து விடுங்கள் என்றான். காசைக் கொடுத்தேன்.

வரும் போது நிலக் கடலைப் பருப்பு பொட்டுக்கடலை முறுக்கு வாங்கிக் கொண்டு வாடா…! என்றார். அதை எல்லாம் வாங்கி வந்ததும் சாக்கடையில் மூன்று கோடுகளைப் போடுடா…! என்று சொன்னார், போட்ட பின் அதிலே அந்த மூன்றையும் போடச் சொன்னார்.

அந்தப் பக்கமாகப் பன்றி வருகிறது. குருநாதர் அதைப் பாருடா...! என்றார். முகர்ந்து பார்த்துக் கொண்ட வருகிறது பன்றி. பொட்டுக் கடலையைச் சாப்பிடவில்லை.

முதலில் நிலக் கடலையைத் தின்றது. இரண்டாவது முறுக்கைத் தின்றது. மூன்றாவதுதான் பொட்டுக் கடலையைத் தின்றது.
1.நீ போட்டதை நாற்றத்திற்குள்ளே பன்றி எப்படிப் பிறக்குகின்றது...? என்று பார்த்தாயாடா...!
2.நீ என்னமோ... இதைச் சாக்கடை என்று சொன்னாய்…!

சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை ஆத்திரம் எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கிற பெரிய சாக்கடைக்கு மத்தியில் நீ சுவாசிக்கிறாய்.

எல்லா நிலையும் சாக்கடையாக இருந்தாலும் ஒவ்வொரு மரமும் அதது உணர்வைத்தான் அது எடுத்துக் கொள்கின்றது.
1.விஷம் கொண்ட செடியும் இருக்கின்றது.
2.நல்ல செடியும் இருக்கின்றது... எல்லாம் கலக்கின்றது...
3.இருந்தாலும் அந்தந்தத் தாவரம் தன் சத்தை மட்டும் எடுத்துக் கொள்கின்றது.

அதே மாதிரி உன்னிடம் நல்ல குணமும் இருக்கின்றது. மற்ற குணமும் இருக்கின்றது. நீ அந்த நல்ல குணத்தைக் கொண்டு எடுக்க வேண்டும் என்று தான் நான் சொல்கிறேன்.

ஏனென்றால்
1.அந்தப் பன்றி எப்படிச் சாக்கடையை எண்ணாமல்
2.நல்ல பருப்பை எண்ணுகின்றது… அந்த வலு பெறுகின்றது.
3.அப்படிச் சேர்த்துக் கொண்ட (சொத்தால் தான்) அந்த வினைகள் தான்
4.உன்னை இப்பொழுது மனிதனாக்கி இருக்கின்றது.
5.நீ இப்போது சாக்கடை என்று சொன்னால் அதை நீக்குவது எப்படி…?
6.இதைப் போன்ற நிலைகள் உனக்குள் இத்தனையும் இருக்கின்றது.
7.இதை எல்லாம் நீக்கியவன் அங்கே விண்ணிலே மகரிஷியாக இருக்கின்றான்.
8.அந்த மகரிஷிகளின் உணர்வை நீ எப்படிப் பெற வேண்டும் என்பதற்காகத்தான்
9.உன்னை இந்தச் சாக்கடைக்கு அருகில் வைத்து உபதேசம் கொடுக்கின்றேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அதைப் போன்று தான் இப்போது உங்களுக்கு என்ன..? உங்கள் வாழ்க்கையில் தீமையான உணர்வுகள் (சாக்கடை) வந்த பின் என்ன செய்வது…? ஏது செய்வது…? என்று தவித்துக் கொண்டிருக்கின்றீர்கள்..

எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது. இதெல்லாம் நிவர்த்தியாகி நல்ல நிலை வேண்டும் என்று எம்மிடம் (ஞானகுரு) கேட்பதற்குப் பதில்
1.நான் என்ன செய்தாலும்… என் கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கின்றது…!
2.இராத்திரியில் எனக்கு தூக்கமே வரவில்லை…. தூங்கவே விடமாட்டேன் என்கிறது…! என்று அதையே இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் மாற்றிப் பழக வேண்டும். மனிதருக்கு எப்படியும் நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்க வேண்டுமே தவிர “இப்படி ஆகிவிட்டதே…!” என்று துன்பத்தையும் துயரத்தையும் எடுக்கவே கூடாது.

உங்கள் வாழ்க்கையில் வரும் சிக்கல்களை மாற்றத்தான் குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவங்களை உங்களுக்குத் தெளிவாக உணர்த்திக் கொண்டே வருகின்றேன்.

துன்பங்களிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த உபதேசங்களைப் பதிவாக்கினால் நிச்சயம் உங்களுக்கு நல்ல உபாயங்களும் மன பலமும் கிடைக்கும். உங்களால் முடியும்…!

வராகன் என்றால் மிகவும் சக்தி வாய்ந்தது என்று பொருள். பூவராகன்…! அதாவது
1.இந்தப் பூவுலகில் வரும்…
2.இந்தப் பூவுடலில் வரும்… நஞ்சைப் பிளந்து
3.ஒளியாக மாற்றி ஒளிச் சரீரமாகி நாம் விண் செல்ல வேண்டும்.