ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 1, 2018

நம் உடலில் உள்ள “அணு செல்களின் இயக்கம்” – கை கால் வலி மூட்டு வலி இவை எல்லாம் எப்படி வருகின்றது…?


நாம் எப்படி நாடாக்களில் (TAPE) கெமிக்கலை முலாமாகப் பூசி அதில் பல நிலைகளைப் பதிவாக்கிக் கொள்கிறோமோ அதே மாதிரித் தான் நம் எலும்புக்குள் உள்ள “ஊனின்” இயக்க நிலைகளும்.

எலும்புகளுக்குள் காந்த சக்தி (MAGNET) இருக்கின்றது. நாம் கண்களால் உற்றுப் பார்ப்பது கேட்பது எல்லாம் “டக்..” என்று இழுத்து எல்லா செல்களிலும் பதிவாக்குகிறது.

அப்புறம் நாம் மறுபடியும் நினைக்கும் போது எல்லா செல்களும் காற்றிலிருந்து அந்தச் சக்திகளை எடுத்துக் குவித்துக் கொடுக்கும்.

குவித்த உணர்வலைகளை நாம் சுவாசித்ததும் அது உயிரிலே பட்டு அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உயிர் இயக்குகின்றது. அந்த இயக்கத்தின் தன்மை உடலில் போய் அந்தந்தக் குணங்களுக்குச் சத்தாகப் போய்ச் சேர்கிறது.

உதாரணமாக இந்தக் காற்றுக்குள் பரவி இருக்கும் கசப்பின் சத்தை வெப்ப மரம் எடுத்துக் கொள்ளும். ரோஜாப்பூ தன் இனமான சத்தைக் காற்றிலிருந்து எடுத்துக் கொள்ளும். இதைப் போல
1.இந்தப் பூமிக்குள் இருக்கும் செடி கொடி மரங்கள் அனைத்துமே
2.அதனதன் உணர்வு கொண்டு எது எது எதை வளர்த்துக் கொண்டதோ
3.தன் தன் இனமான சத்தினை இந்தக் காற்றிலிருந்து எடுத்துக் கொள்ளும்.

தபோவனத்தில் ஒரு சௌண்டால் மரத்தை வைத்தோம். அதற்குப் பக்கத்தில் வேப்ப மரத்தை வைத்தோம். சௌண்டால் சத்து அதிகமானதும் வேப்ப மரம் வளரவே இல்லை. அந்தச் சௌண்டால் மரத்தை வெட்டிய உடனே இதற்கு ஜீவன் கிடைக்கிறது. வேப்ப மரம் நன்றாக வளர்கின்றது.

இதைப் போல நமக்குள் தீய விளைவின் நிலைகள் ஓங்கி வளரும் போது நல்ல குணங்களை வளர விடாதபடி தடுத்துக் கொண்டே தீய குணங்களின் படரும் தன்மைகள் அதிகமாகிவிடும். அப்போது நமக்குள் நல்ல குணங்கள் அனைத்தும் வலு குன்றிவிடும்.

இந்தப் பூமியில் செடி கொடி தாவர இனங்கள் வளர்கிற மாதிரித் தான் நம் உடலுக்குள்ளும் குணங்கள் விளைகின்றது.

1.சந்தர்ப்பத்தால் நாம் எண்ணியது எதுவாக இருந்தாலும் (உணர்வின் வித்துக்கள்) அந்த உணர்வின் சக்தி உந்தப்பட்டு
2.நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும்
3.நம் உடலுக்குள் இந்தப் பூமிக்குள் படருவதைப்போல நம் இரத்தத்துடன் கலந்து
4.அணு செல்களாக ஆகி ஆவியாக மாறி
5.அதனதன் உணர்வுக்கொப்ப அது கூடி உறைந்து நமது தசைகளாக மாறி
6.அதிலே விளைந்த உணர்வின் சத்து வித்தாக அது வெளிப்படும்.

எப்படி ஒரு வித்தின் தன்மை ஆனவுடன் செடியாக மாறுகிறதோ அதில் வித்தைக் காண முடிவதில்லை. ஆனால் வித்தின் சத்து செடி ஆவது போல அதனின் முதிர்வுக்குத் தக்கவாறு பூ பூத்துப் பிஞ்சாகி காயாகி முதுமையாகும் போது அந்த வித்தின் தன்மையை நாம் கண்ணிலே பார்க்கின்றோம்.

இதைப் போலத் தான் நம் வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் எந்த வேதனையை நாம் கண்ணுற்றுப் பார்த்து அதைக் கேட்டுணர்ந்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அடிக்கடி அதை நாம் எண்ணும் போது சுவாசத்தின் வழியாக நம் உடலுக்குள் செல்கிறது.

உடலுக்குள் சென்று அதனின் செயலாக இரத்தத்திற்குள் இருந்து ஆவியாக மாறி அதனதன் வித்துக்களை அது விளைய வைத்து விடுகின்றது. விளைந்த பின் நமக்கு முதுமையாகும் போது கேன்சர் ஆஸ்துமா இரத்தக் கொதிப்பு கை காலில் புண் இதயத்தில் வீக்கம் இதைப் போன்ற நோய்களாக வந்துவிடுகின்றது.

1.எந்தெந்த உணர்ச்சிகள் நமக்குள் இயங்கும் போது
2.அந்தந்த உறுப்புகளின் இயக்க சக்திகளில் தேங்கி விடுகின்றதோ
(அதாவது எங்கே அதிகமாக அந்த அணுக்கள் படருகிறதோ)
3.எண்ணத்தின் தன்மை நாம் ஓங்கி வளர்க்கப்படும் போது உணர்ச்சிவசப்பட்டு
4.கோபத்துடன் ஒரு பொருளைத் தூக்கி ஆத்திரமும் வேதனையும் கொண்டு
5.”இரு நான் பார்க்கிறேன் அவனை…!” என்று குனிந்து நிமிர்ந்தீர்கள் என்றால்
6.அந்த உணர்ச்சிகள் உள்ளுக்குள் அழுத்தமாகி முழங்கால்களில் மூட்டுகளிலும் விஷத் தன்மை கூடிவிடும்.

பின் என்ன செய்வீர்கள்...? முதலில் ஒன்றும் தெரியாது. அங்கிருக்கக்கூடிய கை கால் மடக்கு இயல்பு நிலைகளில் இந்த விஷம் சேர்ந்து விடும். அடுத்தாற்போல் கையைத் தூக்கினாலோ காலை மடக்கினாலோ “ஆ..! வலிக்கிறதே…!” என்பீர்கள்.

ஏனென்றால்
1.மடக்கும் போது நல்ல இரத்தங்கள் பிரிந்து விடுகிறது.
2.அந்த உணர்ச்சியின் தன்மை “நீரை இழுத்து…” அங்கே வளர்த்துக் கொடுக்கும்.
3.இரத்தம் தங்குவதற்கு வழி இல்லை.
4.(சிலருக்குக் கால் வீக்கமாக இருக்கும். கேட்டால் “நீர்” என்பார்கள்)
5.பிறகு மூட்டு வலி அந்த வலி இந்த வலி எல்லாம் வந்துவிடும்.

வேதனையான உணர்வுகளை எண்ணி அந்த உணர்வின் சக்தி வரும் போது அங்கு எது வளர்த்ததோ அந்த உணர்வின் சக்தி தன்னாலே எடுத்துவிடும். நாம் தப்புப் பண்ணவில்லை.

ஏனென்றால் நம் உயிரின் இயக்கங்கள், அந்த உணர்வுக்குத் தக்க இந்தப் பூமியில் எப்படி நடக்கிறதோ அதைப் போல நம் உடலில் சேர்ந்து விடுகிறது. இதை நீக்குவது யார்...?

அதை நீக்குவதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்தி மீண்டும் மீண்டும் மீண்டும் அந்த மெய் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம்.

மாமகரிஷிகள் தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாறி பேரானந்த நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் அருளாற்றலை உங்களுக்குள் பதியச் செய்கிறோம்.
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
2.உங்கள் உடலில் சேர்த்து அதை விளையச் செய்து
3.மகரிஷிகளைப் போன்று உணர்வை ஒளியாக மாற்றுங்கள்…!