ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 7, 2018

தீமைகளையும் துன்பங்களையும் தடுக்க குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்த முறை எது...? என்னுடைய சுயநலம் எது...?


பௌர்ணமி எப்படி முழுமையாகப் பிரகாசிக்கின்றதோ அதைப் போன்று நாம் இந்த மனித வாழ்க்கையில் முழுமை அடைய வேண்டும்.

இல்லையென்றால் இந்த உடலை விட்டுப் போனவுடனே அமாவாசை போல மீண்டும் இன்னொரு இருண்ட உடலுக்குள் தான் செல்ல வேண்டும்.

அப்படித் தேய்ந்து அந்த நிலை ஆகிவிடக்கூடாது என்பதற்குத்தான் இந்த உபதேசமே. உயிர் எப்படி ஒளியாக இருந்து ஒரு பொருளை அறிவிக்கின்றதோ அதைப் போன்று
1.பேரொளியாக இருக்கும் அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து உனக்குள் அதை நிலையாக்கு....
2.எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று எண்ணு...!
3.நீ அதுவாகு...! என்று தான் குருநாதர் சொன்னார்.
4.இது என் (ஞானகுரு) சுயநலம்.

எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நான் எண்ணும் போது நான் அதுவாகிறேன். “என் சுயநலமாகிறது...!” மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு அப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்.

1.மக்கள் அவர்களை அறியாமல் வந்த இருள்கள் எல்லாம் மாய வேண்டும்.
2.மகரிஷியின் அருள் ஒளி மக்கள் எல்லோரும் பெற வேண்டும்.
3.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து இருக்க வேண்டும் என்று  நீ எண்ணினாய் என்றால் “நீ அதுவாகிறாய்...!”
4.உயர்ந்த ஆற்றல்களை நான் உனக்குக் கொடுத்தேன் என்றால்
5.அவர்கள் அதைப் பெற வேண்டும் என்று நீ எண்ணு.
6.அவர்கள் மகிழ்வதைப் பார்த்து... அந்த மகிழ்ச்சியைக் கண்டு “நீ மகிழ்ச்சியாக இரு...!”
7.அவர்கள் சந்தோஷப்படுவதைப் பார்த்து நீ சந்தோஷமாக இரு என்றார் குருநாதர்.
8.அவர் சொன்ன கட்டளைப்படித்தான் இன்று வரை செய்து கொண்டிருக்கின்றோம்.

இவ்வளவு தூரம் குருநாதர் காட்டிய நிலைகளை யாம் தெளிவாகச் சொன்னாலும் திடீரென்று ஒரு கேள்வியைக் கேட்டு விடுவார்கள். சாமி திடீரென நம்மைக் கோபிக்கின்றாரே...! ஏன்...?

ஏனென்றால் உங்கள் கஷ்டம் என்னிடம் போகாதபடி தடைப்படுத்தும் பொழுது அது நரசிம்ம அவதாரமாக வந்துவிடுகிறது.

அந்த மகரிஷியின் அருள் சக்தி நான் (ஞானகுரு) பெறவேண்டும் என்று வானை நோக்கி எண்ணும் போது என் உடலுக்குள் அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் வந்துவிடுகின்றது. அந்த உணர்வுடன் உங்களைப் பார்க்கின்றேன்.

அப்படிச் சக்தி வாய்ந்த நிலைகள் வரும் பொழுது நீங்கள் வீரியமாகப் பார்த்தவுடனே அந்த நல்ல வாசனைகள் வரும். அந்த நேரத்தில்...
1.நீங்கள் துன்பப்பட்டுச் சொல்கிற வார்த்தை இங்கே வராதபடி
2.”டபார்....!” என்று பிளந்து தள்ளிவிட்டு அந்த மகரிஷியின் அருள் ஒளி உங்களை இயக்கத் தொடங்கும்.

அப்பொழுது நான் சொல்கிற வார்த்தை - திடீரென நீங்கள் கோபித்துக் கொண்டாலும் இந்த உணர்வு உங்களுக்குள் போய் என்ன செய்கின்றது...? உங்கள் துன்ப அலையைப் போக்கி விடுகின்றது.

அப்பொழுது யாம் பாய்ச்சிய மகரிஷிகளின் உணர்வின் சக்தி உங்களுக்குள் வந்தவுடனே கவலையை விட்டுவிட்டு... “அதைத் திரும்பச் சொல்லக்கூடாது...!” என்று நினைப்பு வரும். அதற்காக வேண்டிதான் இந்த உணர்ச்சியைத் தூண்டுவது.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா...!

தங்கத்தில் செம்பும் பித்தளையும் வைத்து நாம் நகையாகப் பற்ற வைக்கின்றோம். அடுத்தாற்போல திரவகத்தை வைத்து நீக்கிவிட்டு
1.புடம் போட்டு வைத்தவுடனே சுத்தமான தங்கமாகின்றது.
2.மீண்டும் அடுத்த நகையைச் செய்கின்றோம்.

இதைப் போல நம் வாழ்க்கையில் எத்தகைய கெட்டதைப் பார்த்தாலும் அந்த அழுக்கை நீக்கி விட்டு இந்த உணர்வின் சத்தை நாம் என்ன செய்ய வேண்டும்...?

அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் போட்டு அந்த தீயவினைகளைப் புடம் போட்டு ஒளியின் உணர்வாக நாம் மாற்றிட வேண்டும். பேரொளியாக மாறி அந்த மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்குப் போக வேண்டும். அவ்வளவு தான்...!