ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 27, 2018

“அஷ்டதிக்கு…!” – எட்டுக் கோளையும் சமப்படுத்தும் மகத்துவம்


அஷ்ட திக்கிலிருந்தும் வரும் அதாவது எட்டுக் கோளிலிருந்து வரும் உணர்வுகளை சூரியன் எடுத்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றிக் கொள்கின்றது.

எட்டுக் கோள்களின் சக்தியை ஒவ்வொரு மனிதனும் ஏற்றத் தாழ்வாக வைத்திருப்பார்கள், அதாவது
1.ஒருவர் நான்கு கோளின் தன்மையை அதிகரித்திருப்பார்.
2.ஒருவர் ஒரு கோளின் தன்மையை அதிகமாக முன்னணியில் வைத்திருப்பார்.
3.இன்னொருவர் மூன்று கோளின் தன்மையை முன்னணியில் வைத்திருப்பார்.
4.அதே சமயத்தில் மற்ற உணர்வுகள் தணிந்திருக்கும்.

அந்த உணர்வின் தன்மைகள் மாறும் போது உடற் கூறிலே மாற்றமும் உடலிலே அதனின் தன்மை அதிகமாகப் பெருகி வருகின்றது.

நம் பிரபஞத்தில் இருக்கும் இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை எட்டுக் கோள்கள் கவர்ந்தாலும் ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு சுவை கொண்டதாக ஒவ்வொரு குணங்கள் கொண்டதாகத்தான் அதனுடைய வளர்ச்சிகள் உண்டு.

அதே போல் நம் பூமிக்குள் இருக்கும் தாவர இனச் சத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியும் எட்டுக் கோள்களின் சத்தும் கலந்துள்ளது.

ஒவ்வொரு மனிதனும் தாவர இனத்தை (சமைத்து) உட்கொள்வதன் மூலமாக அது எந்தெந்த உணவை உட்கொண்டு பழகுகின்றார்களோ அதற்குத் தகுந்த சத்தின் குணம் கொண்ட உடலின் அமைப்புகளும் உணர்வின் அறிவாற்றலும் அமைகின்றது.

உதாரணமாக ஒரு தாவர இனச் சத்திற்குள் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்றால் அது மற்றொன்றை அறிந்திடும் அறிவாக வளர்த்திடும் உணர்வின் எண்ணங்களாக வளர்கின்றது.

இதைப் போன்று தான் இந்த இருபத்தேழு நட்சத்திரத்தின் கலவைகளில் முதன்மையான நிலைகள் வரும் நிலையில்…
1.மனிதன் ஆறாவது அறிவு கொண்ட மனிதனாகப் பிறக்க வேண்டும்
2.அறிவின் ஞானமாக தொடர வேண்டும் என்றால்
3.அந்த கார்த்திகை நட்சத்திரத்தின் இயக்கம் முன்னணியில் இருக்க வேண்டும்.

உதாரணமாக கார்த்திகை நட்சத்திரமும் ஒரு ரேவதி நட்சத்திரமும் இணைந்த நிலையில் சிவசக்தியாக உயிரின் தன்மை பெற்று அதனுடைய வளர்ச்சியில் வந்தாலும் மற்ற மற்ற வேதனை உணர்வுகளை நுகரும் பொழுது ஒளி மங்கும் நிலைகள் வருகின்றது.

அவ்வாறு எடுத்துக் கொண்ட அந்த வேதனை உணர்வுகளுக்கொப்ப மற்ற மற்ற சரீரங்களை எடுத்தாலும் வேதனையிலிருந்து மீட்டிடும் உணர்வுகள் வளரப்படும் போது தான் ஒளியின் கதிராக அறிவாக வளர்ந்து மனிதனாக வருகின்றது.

ஆனால் மனிதனாக வளர்ந்த பின்னும் மீண்டும் மற்ற வேதனை உணர்வுகளை அதிகமாகத் தனக்குள் சேர்த்துக் கொண்டால் அந்த ஒளி பெறும் நிலைகள் மங்கி எல்லா அணுக்களிலும் இது சேர்க்கப்பட்டு இருள் சூழும் நிலைகளுக்கே மீண்டும் அனுப்பி விடுகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் அறிவின் தன்மை மனிதனுக்குள் வந்தாலும் அறிவின் தன்மை தெளிவாக்கி
1.உடலில் வந்த தீமைகளை மகரிஷிகளின் ஒளி கொண்டு நீக்கி
2.மெய்ப் பொருள் கண்டுணர்ந்த அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பெருக்கியே ஆகவேண்டும்.

இவர் என்ன சொல்கிறார்...? சொல்வது ஒன்றும் அர்த்தம் புரியவில்லை என்று யாரும் எண்ணி விடாதீர்கள்…! உங்களுக்கு அர்த்தமாக வேண்டும்…! என்பதற்குத்தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

ஒவ்வொரு நொடியிலும் உங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களோ மற்ற இன்னல்களோ வரப்படும் போது இப்போது பதிவு செய்த நிலைகள் உங்கள் நினைவுக்கு வந்து உங்களை இயக்கத் தொடங்கும்.

அந்த இயக்கத்தின் தன்மை நினைவூட்டும் போது அதனின் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கவும் அருள் ஞானத்தின் உணர்வைப் பெருக்கவும் உதவும்.

அதற்குத் தான் இதை உங்களுக்குள் சொல்வது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மிடம் அவர் முதலில் சொன்னது எனக்கும் அர்த்தமே புரியவில்லை.

1.பின் எனக்குள் இருள் சூழ்ந்த நிலைகள் வரும் போதெல்லாம்
2.அவர் எனக்குள் செய்த பதிவுகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைவுக்கு வந்து
3.அதனால் சிந்தித்து செயல்படும் தன்மையும் இருளை நீக்கும் ஆற்றலும் பெருகி
4.பேரொளியாகப் பெருக்கிக் கொண்டு வளர்ந்த நிலை தான் எம்முடைய நிலை (ஞானகுரு)…!

எமக்குள் வளர்த்துக் கொண்ட அதே வழியில் தான் குருநாதர் பாய்ச்சிய உணர்வினை உங்களுக்குள்ளும் பதியச் செய்து அந்த உணர்வின் ஆற்றலை பெருக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.

பதிவு செய்த இந்த உபதேசத்தின்பால் உங்கள் நினைவாற்றல் உந்தப்படும் போது இந்த உணர்வின் நினைவே உங்களுக்குள் வரும்.

உதாரணமாக வேதனைப்படும் உணர்வுகள் படர்ந்து விட்டால் வேதனை  வேதனை…! என்ற சொல்லும் குறை உணர்வுகள் வளர்ந்து விட்டால் குறை சொல்லும் உணர்வும்... தனக்குள் நிறைவு பெறாத செயல்களைத்தான் செயல்படுத்தச் செய்யும்.

அதைப் போன்றே அருள் ஞானத்தின் உணர்வுகளை (உங்களுக்குப் புரியவில்லை என்றாலும்) உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்யும் போது
1.இருளைப் போக்கிப் பேரொளியைக் காணும் நிலைகளாக
2.மெய்ப் பொருள் காணும் திறன் நீங்கள் பெற்று
3.எந்தத் திக்கிலிருந்து தீமைகள் வந்தாலும் அதை வெல்லும் ஆற்றலாகப் பெறுவீர்கள்…!
4.அழியா ஒளியின் சரீரம் பெற்று என்றென்றும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து மகிழ்ந்து வாழ்வீர்கள்…!