ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2018

ஞானப் பாதையில்... ஒரே சீராகச் செல்ல நாம் கையாள வேண்டிய முறை


அன்பு ஆசை என்ற பிணைப்பான நிலைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு
1.அதிக அன்பினால் வரும் வினையையும்
2.அதிக ஆசை கொண்ட பேராசைக் குணத்தையும் வழிப்படுத்திடாமல்
3.தீமை செய்யும் குணத்தின் ஆணிவேரைச் சமப்படுத்தும் பக்குவத்தைப் பெறும் நிலையாக நம்முடைய தியானம் அமைதல் வேண்டும்.

அன்பே தெய்வம்…! அன்பே சத்தியம்…! என்ற அன்பு வெறிக்கு அடிமைப்பட்டாலும் நமக்குள் ஞானத்தின் நிலை கூடுவது கடினம். அதாவது நம் எண்ணமெல்லாம் இந்த உலகுடன் கலந்துள்ள அலைகளில் உள்ள
1.நல்ல அலைகளை மட்டும் சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
2.தீய அணுக்கள் என்று ஒதுக்கியும் வெறுத்தும்
3.நான் நல்லவன்…! என்ற ஒரே வெறி கொண்ட நிலை பெற்றாலும்
4.நம் ஆத்ம சக்தி வளர்வது கடினம் தான்.

பல நாட்களாக நாம் தியானித்து எதிர் நிலையான உணர்வின் இயக்கங்களைத் தடைப்படுத்தி வைத்து நாம் சீராக இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

பிறருடன் நண்பராகப் பழகும் பொழுது அவருடன் நம் உணர்வுகள் ஒத்துப் போனாலும் மற்றொருவர் செய்யும் தவறை இவர் சுட்டிக் காட்டும் பொழுது அவர் சுவாசித்த அந்தத் தவறின் உணர்வுகளை நாமும் சுவாசிக்க நேர்கின்றது.

அப்பொழுது
1.நாம் தடைப்படுத்துப் பழகிய உணர்வுகளின் இயக்கம் மாறி
2.அந்த எதிர் அலையின் உணர்வுகள் சாடி
3.நம்மையும் அதே உணர்வுடன் (தவறின்) நம்மைப் பேசச் செய்யும்.

அப்பொழுது நாம் எடுத்த தியானம் என்ன ஆனது...?

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் முதலில் நாம் பிறர் வெளிப்படுத்தும் சொல்லுக்கோ எண்ணத்திற்கோ நம் நினைவினை அடிமைப்படும் நிலையாக அடிபணியச் செய்து விடக்கூடாது.

ஞானத்தின் பாதையில் பரிபக்குவ நிலையில் சீராகச் சென்று கொண்டிருந்தாலும்
1.மற்றவர்கள் நம்மிடம் சொல்லக் கூடிய நிலையை வைத்தோ
2.அல்லது அவர்கள் செய்வதைப் பார்த்தோ
3.அல்லது அதைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட நிலையை வைத்தோ
3.அந்த உணர்வுகள் நம் மீது மோதும் நிலையில் நம் எண்ணத்தைச் சிதற விடக் கூடாது.

ஏனென்றால் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் சுவாச நிலை எடுத்து வெளிப்படுத்தும் நிலைகளில் அந்தந்தச் சுவாசத்திற்கொப்ப உணர்வின் அலைகளாக
1.உயிரில் உராய்ந்து கொண்டே தான் உள்ளது.
2.அதை உயிர் அதை இயக்கிக் கொண்டே தான் இருக்கும்
3.நமக்கு அதை உனர்ச்சிகளாக உணர்த்திக் கொண்டே தான் இருக்கும் என்பதனை நாம் உணர வேண்டும்.

நாம் புதிய வீட்டை அழகாக கட்டியிருந்தாலும் அதைத் தினசரி தூய்மைப்படுத்துகின்றோம். அதே போல சில காலங்கள் கழித்து பராமரிப்பு வேலைகளும் செய்ய வேண்டியது உள்ளது.

அதைப் போல நம் மீது (உயிரிலே) மோதும் உணர்வுகளை அப்படியே இயக்கவிடாது
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அதனுடன் இணைத்து
2.அதை நம்முடன் நல்லதாகச் சேர்த்து ஆக்கபூர்வமானதாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
3.இது மிகவும் முக்கியம்...!