ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 8, 2018

தியானம் செய்வதற்கு ஏற்ற இடமும் காலமும் எது…?


கேள்வி:-
தியானத்தில் இருக்கத் தனிமையான இடமும் சோலைகள் அடர்ந்த அமைதியான இடமும் பிற சப்தங்கள் வராத இடமும் தான் ஏற்ற இடமா..?

விளக்கம்:-
1.எந்த நிலையிலும்…
2.எங்கு இருந்தாலும்…
3.எவன் ஒருவன்… ஒரு நிமிடமாவது
4.புருவ மத்தியில் இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம்
5.மனதை (நினைவை) ஐக்கியப்படுத்துகின்றானோ அதுவே தியானத்திற்கு ஏற்ற இடம்.

யோகிகள் சந்நியாசிகள் போல் உலகப் பற்றை விட்டு விட்டுத் தியானத்தில் இருந்தால் தான் “தியான நிலை” என்பதல்ல. எல்லோரும் சந்நியாசிகளாக ஆக முடியாது.

அவரவர்கள் ஏற்றுக் கொண்ட கடமைகளைச் செய்து கொண்டே உயிரான ஈசனை வேண்டித் தியானிப்பவர்கள் அனைவருமே அந்த அருளையும் சக்தியும் ஆற்றலும் பெறுகின்றார்கள்.

கணவன் மனைவி இருவரும் எங்கள் குழந்தைகளுக்குக் கல்யாணம் முடிந்து கடமைகள் முடிந்த பிற்பாடு தெய்வீக வழியில் ஈடுபடுகிறோம் என்று நினைப்பீர்கள்.

கல்யாணம் முடிந்ததும் கடமை தீர்ந்துவிடுமா…? தீராது.

நீங்கள் இருக்கும் வரை நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும் என்று நினைக்கின்றீர்கள். நினைப்பது எல்லாம் நடக்குமா…? நீங்கள் இருக்கும் வரை கடமைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இப்பொழுது இருக்கும் நிலையிலேயே…
1.கடமை பந்தம் பாசம் ஆசைகளை விட்டுவிடலாம் என்று நினைக்காமல்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா…! என்ற எண்ணைத்தில்
4.இந்தத் தியானத்தைச் செய்து கொண்டே வாருங்கள்.

கடமைகள் தீர்ந்த பிற்பாடு தான் தியானத்தில் ஈடுபாடு வைக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகளே நம்மை எல்லா வழியிலும் வழி நடத்திச் செல்வார்கள்.

மகரிஷிகளின் அருள் என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.