ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 5, 2018

இறந்த தாய் தந்தையர்களோ நம் முன்னோர்களோ கனவில் வந்தால் நாம் என்ன நினைக்கின்றோம்...?


அம்மா அப்பா அல்லது மூதாதையர்கள் இறந்தார்கள் என்றால் அவர்கள் நினைவாக இன்று என்ன செய்கிறார்கள்...?

கறியைச் சாப்பிட்டவர்கள் என்பதால் கறியை வைத்தேன். வெண்டைக்காயைச் சாப்பிட்டார்கள் என்றால் வெண்டைக்காயை வைத்தேன். சுண்டைக்காய் சாப்பிட்டார்கள் நான் சுண்டைக்காயை வைத்தேன். நீ

நீங்கள் உடுத்திய துணிகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொள்கின்றேன். “நீ எங்கேயும் போகாதே...!” என்று சொல்லிச் சொந்த பந்தம் என்று எல்லாரையும் கூப்பிட்டு கும்பிட்டுக் கொள்கின்றோம். இப்படித்தான் நினைவு நாளில் செயல்படுத்துகின்றோம்.

இப்படிக் கும்பிட்ட பின் அப்பாவோ அம்மாவோ யாராவது கனவில் வந்து விட்டால் என்ன சொல்கிறார்கள்...?

தினம் தினம் கனவில் வருகின்றார்கள். அதனால் நான் சீக்கிரம் போய்விடுவேன். எங்கள் அப்பா (அல்லது அம்மா) இருக்கிற இடத்திற்கு கூப்பிடுகின்றார்கள்...! என்று இப்படி ஒரு சாஸ்திரம் உருவாகிவிட்டது.

கடைசியில் என்ன செய்வோம்...? கனவில் வராமல் இருப்பதற்காக வேண்டி எங்கெங்கெயோ ஓடி அலைந்து காசைக் கொடுத்துச் செலவழித்து
1.இப்படி வருகின்றார்... அப்படி வருகின்றார்... என்று இரவெல்லாம் புலம்பி
2.ஐய்யய்யோ...! நான் போய்விடுவேனே போய்விடுவேனே...! என்று சொல்லிக் கொண்டு
3.பல துன்பங்கள் வருவதால் அவர்கள் கனவில் வரக்கூடாது...
4.வந்தால் நம்மைக் கூட்டிக்கொண்டு போய்விடுவார்களே...! என்ற இந்தப் பயம்.
5.ஆனால் பிடித்தமானது எல்லாவற்றையும் வைத்து “அவர்களைக் கூப்பிடுவது நாம் தான்...!”

அதற்காக வேண்டிப் பிண்டத்தை வைத்துக் கொடுத்தால் அவர்கள் போய்விடுவார்கள் என்று ஒரு சாங்கியத்தைச் செய்வார்கள்.

இறந்தவர்கள் சுடுகாட்டிலே எரிக்கும் பொழுதோ அல்லது புதைக்கும் பொழுதோ இடது கையால் வைத்துச் செய்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்துவிட வேண்டும். இல்லை என்றால் திரும்பி வந்து விடும்...! அதனால் அந்த நினைப்பை விட்டுவிடாதே...! என்று இப்படி எல்லாம் சாங்கியத்தைச் சொல்லி நம்மைச் சிந்திக்கவிடாமல் செய்து வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் நம்மைப் பெற்று வளர்த்து நமக்காக வேண்டிப் பாடுபட்டவர்களின் உயிராத்மாக்களை உயர்ந்த நிலை பெறச் செய்து ஒளியின் சரீரமாமாக்கி அவர்களை விண்ணிற்குச் செலுத்தும்படி ஞானிகள் காட்டியிருந்தாலும் அந்த முறைப்படி யாருமே செய்யவில்லை.

இறந்தவர்களை அழைத்துச் சாப்பாடு போடவேண்டும் என்பார்கள். ஆனால் எந்தச் சாப்பாட்டைப் போட வேண்டும்...?
1.கிடைப்பதற்கு அரிய பொக்கிஷமான ஞானிகளின் உணர்வுகளை
2.அந்த அருள் ஞான உணர்வை உணவாகக் கொடுக்க வேண்டும்.
3.இப்படிச் செய்தால் “ரிமோட் கண்ட்ரோல்...! (REMOTE CONTROL)

இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு சிறு பொம்மையைக் கூட ரிமோட் (REMOTE) மூலம் இயக்கிக் காட்டுகின்றார்கள்.
1.ஒரு பட்டனைத் தட்டியவுடனே என்ன செய்கிறது...?
2.பொம்மைக்குள் இருக்கக்கூடிய மேக்னட்
3.நாம் எண்ணியவுடனே “இங்கே போ...! என்று சொன்னால் அவ்வாறு இயங்குகின்றது.
4.”நில்...!” என்று சொன்னால் அது நிற்கின்றது.
5.உணர்வின் ஒலி அலைகளுக்குத் தக்க பொம்மையைச் செய்து ஆட வைக்கின்றான் விஞ்ஞானி.

அன்றைய மெய் ஞானிகளோ முன்னோர்களை விண் செலுத்தி அவர்களைப் ஒளிச் சரீரம் பெற்ச் செய்து அவர்கள் மூலம் விண்ணின் ஆற்றலை ரிமோட் சக்தியாகப் பெறுவதற்கு நமக்கு வழிகாட்டினான்.

விண்ணின் ஆற்றலை வளர்த்து அந்த மெய்ஞானி உணர்வைக் கொண்டு
1.இதை உன்னுடைய கண்ட்ரோலிற்கு (CONTROL) கொண்டு வந்து
2.”பிறவா நிலைக்குக் கொண்டுபோ...! என்று தெளிவாக்கியுள்ளான்.

குழந்தை இல்லாதவர்கள் நரகலோகம் போவார்கள் என்று ஒரு சாஸ்திரத்தை எழுதி வைத்தான். இறந்தபின் உயிராத்மாவை உந்தி மேலே விண் செலுத்தவதற்குக் குழந்தை வேண்டும்.
1.அருள் உணர்வுகளை வினையாகச் சேர்த்து
2.விண்ணுக்குச் செலுத்த அன்று அப்படிச் சொன்னான் ஞானி
3.அதை மறந்துவிட்டோம்.

ஆனால் இப்போது குழந்தை இருக்கின்றவர்களுக்கு பெரிய நரகலோகமே இருக்கின்றது. ஏனென்றால்
1.குழந்தை என்ன செய்கிறானோ...? எங்கே போனானோ...?
2.நம் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறானே...?
3.நான் சம்பாதித்த காசைப் பார்ப்பானா...? பார்க்க மாட்டானா...?
4.இப்படி இருக்கின்றானே...? அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ...?
5.இப்படி அவனை நினைத்து நினைத்துக் கை கால் குடைகின்றது என்று வேதனையைப் பட்டுப் பட்டு அவஸ்தைப்படுகின்றோம்
6.அவனையும் நரகலோகமாக ஆக்கி விடுகின்றோம்.
7.கடைசியில் நாமும் அங்கேதான் போய் விடுகின்றோம்.

இதிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத்தான் அன்று அந்த மகா ஞானிகள் விநாயகர் தத்துவத்தைக் கொடுத்து நீ எந்த வினையைச் சேர்க்க வேண்டும்...? என்று கேள்விக் குறி போட்டுக் காட்டியுள்ளார்கள்.

அவர்கள் காட்டிய தத்துவப்படி நல்ல வினைகளை நமக்குள் நாம் சேர்க்கின்றோமா...? நம் முன்னோர்களைப் பிறவி இல்லா நிலை பெறச் செய்தோமா...? நம் குழந்தைகளை அந்த அருள் வழியில் வழி நடத்துகின்றோமா...? என்று சிந்தித்துப் பாருங்கள்.

காசைக் கொடுத்து விலைக்கு வாங்குவதில் தான் நாட்டம் செலுத்துகின்றோமே தவிர யாரோ செய்து கொடுப்பார்கள் என்று தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோமே தவிர ஞானிகள் சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் இல்லை...!