ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 4, 2018

பாழடைந்த கட்டிடமாக இருந்தாலும் காற்றிலிருக்கும் நீரைக் கவர்ந்து வளரக் கூடிய அரசைப் போன்று... “நல்ல உணர்வுகளை நாமும் ஓங்கி வளர்க்க முடியும்...!”


அரசையும் வேம்பையும் இங்கே விநாயகருக்கு முன்னாடி வைத்துக் காட்டியுள்ளார்கள். ஏன்...?

உதாரணமாக ஒரு குருவியோ அல்லது மற்ற பட்சியோ அரசம் பழத்தைத் தனக்குள் உணவாக உட்கொண்டு அதனின் மலத்தை எங்கோ ஒரு இடத்தில் விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

1.அந்த மலத்திலிருந்து வெளிப்பட்ட அரச வித்து விழுந்த இடம்
2.ஒரு பாழடைந்த இடமாக நீரைக் கண்ணிலே பார்க்க முடியாத இடமாக இருக்கின்றது
3.இருந்தாலும் காற்றிலே கலந்துள்ள காந்தத்திற்குள்
4.அந்த நீரின் சத்தைக் கவர்ந்திருந்தால் அதைப் பருகித்
5.தன் உணர்வின் சக்தியைத் தனக்குள் சேர்த்து அந்த அரச வித்து மரமாக வளரத் தொடங்குகின்றது.

எதையும் எதிர்பார்க்காது எந்தத் தீய வினையும் தன்னை அணுகாது தனக்குள் உணர்வின் சக்தியை ஓங்கி வளரும் நிலைகள் பெற்றது அந்த அரச மரம்.

1.நம் வாழ்க்கையில் வந்த வெறுப்பின் தன்மையை விடுத்து
2.கசப்பான உணர்வுகளைச் சிறுக்கச் செய்து
3.அந்த அரச மரத்தைப் போன்று நாமும் நல்ல உணர்வுகளை ஓங்கி வளரச் செய்யவேண்டும்.

இதை நினைவு கூறுவதற்காகத்தான் அரச மரத்தை வைத்து  விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கில் பார்க்க வைத்தார்கள் அன்றைய ஞானிகள்.

ஏனென்றால் மனித வாழ்க்கையில் வந்த இருள் சூழ்ந்த உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பாழடைந்த துருவத்தின் (நம் பூமியின் வட துருவம்) அருகிலே நின்று இங்கே வரும் உணர்வின் சத்தைத் தனக்குள் அந்த ஒளியின் சிகரமாக வளர்த்து
1.ஒளியின் அலைகளாகத் தான் வீசி
2.உணர்வின் வேகத்தின் நிலைகள் விழுதுகளாகப் பாய்ச்சி
3.என்றும் நிலையாக இருந்து கொண்டிருப்பவர் அகஸ்தியர்.

அந்த அகஸ்திய மாமகரிஷி துருவத்தின் சக்தியாக துருவ மகரிஷியாக
1.துருவ நட்சத்திரமாக ஆனது போல் நாமும் ஓங்கி வளர்ந்து
2.பாழடைந்த நிலைகளில் வரும் அந்த விஷத்தின் தன்மையை முறித்து
3.ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக இருக்க முடியும்... இருக்க வேண்டும்... இருந்திட வேண்டும்...!

இந்த நிலையை நாம் பெறுவதற்காகத்தான் விநாயகனை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கே பார்த்து வணங்கச் செய்தனர் அகஸ்தியனுக்குப் பின் வந்த ஞானிகள்.