ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2018

ஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி...!


பசிக்கு உண்ணுகின்றோம். அதற்குகந்த “காலம் வரட்டும்” என்று பசித்திருப்பவர் காத்திருப்பதில்லை.

அதே போல் எந்தச் செயல் செய்பவராக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் சிக்குண்டிருந்தாலும் உடலில் இயற்கையாக வெளிப்படும் கழிவை வெளியேற்றக் “காலம் வரட்டும்” என்று பொறுத்திருக்க முடிகின்றதா...? இல்லை…!

இப்படி உடலுக்காக உண்டு கழித்து வாழும் நாம் இந்த உடலுக்குப் பின் அடைய வேண்டிய நிலையை அந்த உயர் ஞானத்தைப் பெறுவதற்காக மட்டும் கால நிலையையும் வயது வரம்பையும் நீட்டிக் கொண்டே வருகின்றோம்.

கடைசியிலே பெறாமலே மீண்டும் வேதனைப்பட்டே வாழும் இன்னொரு உடலுக்குள் தான் போகின்றோம். பேரின்பப் பெரு வாழ்வு எனும் அழியாத நிலையாகப் பிறவியில்லா நிலை அடைவதில்லை.

அந்த நிலையைச் சாதாரணமாகவே பெறுவதற்காகத்தான் உங்கள் எண்ன நிலையைச் சீராக்கி
1.இந்த வாழ்க்கையில் வாழும் காலத்தில்
2.அவ்வப்பொழுது மோதும் ஒவ்வொரு எண்ணத்திலும் ஒவ்வொரு உணர்விலும்
3.மகரிஷிகளின் அருள் உணர்வைச் சேர்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்...! உங்கள் வாழ்க்கையே தியானமாக்குங்கள்...! என்று சொல்லிக் கொண்டே வருகிறோம்.

ஒரு நிமிடத்திற்குள்ளேயே இந்தச் சக்தியை எடுத்துக் கொள்ளலாம். அமைதியான இடமோ பூஜை அறையோ ஒன்றும் தேவையில்லை.

நீங்கள் எந்த இடத்தில் எந்த நிலையில் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும்
1.புருவ மத்தியில் ஈஸ்வரா...! என்று உங்கள் உயிரை எண்ணுங்கள்
2.பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே நினைவைச் செலுத்துங்கள்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் தலையிலிருந்து கால் வரை நினைவைச் செலுத்துங்கள்.
5.சர்குலேசன் (CIRCULATION) மாதிரி திரும்பத் திரும்ப இதைச் செய்யுங்கள்.
6.ஒரு நிமிடத்திற்குள் எத்தனையோ தடவை இந்த மாதிரிச் செய்து  ஆன்மாவையும் மனதையும் உடலையும் தூய்மைபடுத்த முடியும்.

இதைப் பழக்கப்படுத்திக் கொண்டாலே போதுமானது. உங்களுக்கு வேண்டிய மன பலம் கிடைக்கும் மன அமைதி கிடைக்கும். மகிழ்ச்சி தன்னாலே வரும்.

பிறகு பசி வந்ததும் உணவை உட்கொள்வது போல் துன்பமோ துயரமோ கஷ்டமோ தீமைகளோ மற்ற எது வந்தாலும் உடனடியாக நீங்கள் எடுத்துப் பழக்கப்படுத்திய துருவ நட்சத்திரத்தின் நினைவுகள் முன்னாடி வந்து நிற்கும்.

அந்தச் சக்தியை அதிகமாகக் கவரச் செய்யும். உயர் ஞானம் உங்களுக்குள் விளையத் தொடங்கும். நீங்கள் அதுவாக மாறுவீர்கள். உடலுக்குப் பின் அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாவது நிச்சயம்.