ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 14, 2018

ஆறாவது அறிவை... “ஏழாவது ஒளியாகக் கூட்ட வேண்டுமே தவிர ஐந்திற்கு வரக்கூடாது...!”


குருநாதர் காட்டிய அருள் வழியில் தீமைகள் அகற்றிய ஞானியின் உணர்வை உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டே வருகின்றோம்.

நமக்குள் நன்மை செய்யும் உணர்வுகள் உண்டு. தீமை செய்யும் உணர்வுகளும் உண்டு.
1.தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் இல்லை என்றால் தீமையைப் பற்றி அறிய முடியாது.
2.நன்மை செய்யும் உணர்வுகள் நமக்குள் இல்லை என்றால் நன்மை செய்யும் நிலைகளை நாம் செயல்படுத்த முடியாது.
3.நன்மையும் தீமையும் நமக்குள் உண்டு.
4.எந்தெந்த உணர்வின் நினைவாற்றல் நமக்குள் வருகின்றதோ அந்த உணர்வின் இயக்கமாகத் தான் நாம் இயக்குகின்றோம்.

இதைப் போன்று நமக்குள் இருப்பினும் நாம் பெற வேண்டியது எது…?

பிறவா நிலை என்ற அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும். அருள் மகரிஷியின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் சுவாசித்து அதை நமக்குள் உருபெறச் செய்து வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கி மெய்ப் பொருள் காணும் நிலைகளாக அதை நாம் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால் ஐந்தறிவு கொண்ட மற்ற உயிரினங்கள் எதை உணவாக உட்கொண்டதோ அதனின் ஞானத்தைக் கொண்டே அது வாழும்.

ஆனால் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து ஆறு அறிவு கொண்ட மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ளோம்.

இருந்தாலும் மனிதனாக இருக்கும் நாம் விஞ்ஞானத்தில் எவ்வளவோ இன்று முன்னேற்றம் கண்டிருந்தாலும்
1.அஞ்ஞான வாழ்க்கையாகத்தான் வாழ்கின்றோம்.
2.நம்முடைய அந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோமா...?

ஆகவே இதைப் போல நாம் வாழாது அருள் மகரிஷியினுடைய நிலைகளைப் போன்று ஏழாவது நிலையான ஒளி நிலை அடைய வேண்டும்.

அந்த மகரிஷியின் அருள் உணர்வுகளை நமக்குள் ஒன்று சேர்த்த வலுவாகச் சேர்க்க வேண்டும். ஆறை ஏழாகக் கூட்ட வேண்டுமே தவிர ஆறை ஐந்தாகக் குறைக்கக் கூடாது.

ஏனென்றால் நம்மை போன்று மனிதனாகத் தோன்றியவர்கள் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஒளியின் நிலைகள் பெற்றவர்கள் தான் சப்தரிஷிகள்.

அந்தச் சப்தரிஷிகளைப் போன்று “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்...!” என்ற நிலையில் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு  ஏழாவது நிலை அடைந்து பிறவா நிலை என்ற பெருநிலை அடைந்து “என்றுமே ஒளியின் சரீரமாக நாம் நிலை பெற வேண்டும்...!”