ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 19, 2018

நம்மை அழகாக வைத்துக் கொள்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது...!


1.கண்ணாடியில் படிந்துள்ள தூசியைத் துடைத்தால் தான் நம் முகம் தெளிவாகத் தெரியும்.
2.இருட்டில் உள்ள பொழுது வெளிச்சத்தைக் காண முயல்கிறோம்.
3.வெயிலில் உள்ள பொழுது தான் நிழலுக்காக ஏங்குகின்றோம்.

ஆனால் இந்த நிலை பெற்ற பிறகு உண்மையின் நிலையிலேயே உள்ளோமா...? தன்னிச்சைப்படி இந்த வழித் தொடரின் வாழ்க்கையிலே தான் சுழன்று கொண்டுள்ளோம். அதே போல் நம் வாழ்க்கையில் பல நிலைகளை நம் உடலுக்குள் கூட்டிக் கொண்டுள்ளோம்.

இந்த நிலையை மாற்றி உண்மையான ஒளியைக் காண முயல்கின்றோமா...? சற்றுச் சிந்தியுங்கள்...!

கண்ணாடியில் உள்ள தூசியை அகற்றிவிட்டுத் தெளிவான உருவைக் காண ஆசைப்படுகின்றோம். ஆனால்
1.நம் உடலிலுள்ள அசுத்த அலைகளையும் தீமையான எண்ணங்களையும் மாற்றிவிட்டு
2.நம்முடைய உண்மையான அழகைக் காண விரும்புவதில்லை...!

நம்மிடம் உள்ள அசுத்த அலைகளை அகற்ற “நாம் ஆசைப்படாமல்...!”
1.கடவுள் வந்து தானாக அகற்றுவான்......! என்று
2.தெய்வத்திடம் வேண்டி அக அழகைக் காண விரும்புகின்றோம்.

ஒரு செம்பில் உள்ள அசுத்த நீரில் அதற்கு மேல் நல்ல நீரை ஊற்ற ஊற்ற நல்ல நீரும் அசுத்த நீரும் சேர்ந்து வெளிப்பட்டுப் பிறகு அனைத்துமே நல்ல நீராக மாறுகின்றது.

இதைப் போன்று தான் நம்மிடம் உள்ள தீய அணுக்களையும் அசுத்த உணர்வுகளையும் அகற்ற
1.நாம் எடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியின் ஈர்ப்பினால்
2.மேலும் மேலும் சேமிக்கப்படும் நல் உணர்வின் அலை அதிகப்படும் பொழுது
3.தீய அணுக்கள் எல்லாம் பல ரூபத்தில் நம்மிடமிருந்து வெளிப்பட்டுச் சென்றுவிடும்.

அதே சமயத்தில் நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் ஆக்ரோஷமான ஆன்மா ஏறியிருந்தாலும் தீமையான உணர்வுகள் நம்மிடமிருந்து வெளிப்படும் பொழுது அந்த ஆன்மாவிற்குகந்த ஆகாரம் கிடைக்காததால் அதன் பாதிப்பான உணர்ச்சியின் தூண்டுதலும் நம்மை ஒன்றுமே செய்ய முடியாது.

இதை நீங்கள் உணர்ந்து கொண்டால் தான் உங்களுக்குள் வளர்ச்சியின் தன்மை கூடும். ஏனென்றால்
1.இந்தப் பிரம்மாண்டமான அண்டசராசரங்களில் உள்ள
2.அனைத்து சக்திகளையும் அறியும் ஆற்றல் மனித ஆன்மாவிற்குத்தான் உண்டு.
3.மனித ஆன்மாவினால் முடியாத சக்தி எந்தச் சக்திக்குமில்லை.

ஆகவே இந்த உடலில் நாம் வாழும் காலத்தில் உயர் ஞானத்தின் சக்திகளைச் சேமித்து உயிரான்மாவிற்கு அதை ஊட்டமாகக் கொடுத்து மெய் ஞானத்தின் வீரிய சக்தியாக நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.

உங்களை நீங்கள் நம்புங்கள். மெய் ஒளியான அக அழகைக் காண முயலுங்கள். பேரருள் பெற்று பேரொளியாக நிச்சயம் மாறுவீர்கள்...!