
ராம ராஜ்யம்
ஒருவன் குற்றம் செய்தால் அவனைத் தண்டிக்கின்றோம்.
இது அரசர்கள் காட்டிய வழி. ஒருவன் ஒரு தவறு செய்கின்றான் அல்லது பிறருக்கு இம்சைகளைச்
செய்கிறான் என்றால் அவனுக்கு இம்சை தரக்கூடிய தண்டனைகளையே தந்தனர் அன்றைய அரசர்கள்.
ஆனால் மகரிஷிகளோ…
1.ஒருவர் உடலில் அறியாது
புகுந்த தீமை விளைவிக்கக் கூடிய உணர்வினை நீக்கி
2.உயர்ந்த கருத்தினை அவரினுள் செலுத்தி அவர்தம் உடலில் வரும் தீமையினை அடக்கி அதற்குத் தண்டனை அளித்து
3.இணைந்து செயல்படும் உணர்வினை வளர்த்துக் கொண்டார்கள்.
அதையே மக்களுக்கு உணர்த்தினார்கள்.
மகாத்மா காந்தி
நம்மை இயக்கும் தீய உணர்வுகளில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்று சொன்னார். அதே சமயம் “ஆங்கிலேயர்களும் நம்
சகோதரர்களே” என்று சொல்லி அவர்களிடம் இருக்கும் “மற்றவர்களை அடிமைப்படுத்தும் உணர்வைத்தான் விலக்க வேண்டும்” என்று பாடுபட்டார்.
1.உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து
2.அந்த உடலில் இருக்கும் நல்ல உணர்வின் தன்மையை
3.சகோதர உணர்வுடன் பாவிக்க
வேண்டும் என்பதைத்தான் “ராம ராஜ்யம்” என்றார்.
நாம் எடுக்கும் உயர்ந்த குணங்கள் எதுவோ அது மகிழ்ந்திடும்
நிலையாக நமது செயல் இருக்கும் பொழுது… நம் உடலில் இருக்கும்
சலிப்பு, சங்கடம், கோபம், குரோதம் போன்ற உணர்வுகள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வுகளில்
நாம் எண்ணும் பொழுது நமக்குள் அது ஒருக்கிணைந்து நம்மை மகிழ்விக்கச் செய்கின்றது.
இது தான் ராம ராஜ்யம்.
வான்மீகி மகரிஷி கொடுத்தருளிய இராமாயணக் காவியத்தின்
உண்மையின் தன்மை கொண்டுதான் காந்திஜி தமது உயிர் உடலை விட்டுப் பிரியும் கடைசி நொடி வரையிலும் வாழ்ந்தார்.
1.எல்லோரையும்… எல்லாவற்றையும் காக்கும்
பல உணர்வுகளுடனும் பிறரைத் துன்புறுத்தா நிலைகளிலும்
2.அஹிம்சைத் தத்துவத்தைக் கடைப்பிடித்துத் தென்னப்பிரிக்காவில்
வாழும் மக்களுக்கு நீதி பெற்றுத் தந்தபின்
3.இந்திய நாட்டைக் காக்க வேண்டும் என்ற ஆசை காந்திஜிக்கு வந்தது.
இந்திய மக்கள்
அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் பல உயிர்கள் பலியாக
வேண்டியிருக்கின்றது என்ற உணர்வினை காந்திஜி
உணர்ந்து… சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் மக்களை நல்வழிப்படுத்தினார்.
அதாவது… அன்னிய நாட்டிடமிருந்து நமது மகரிஷிகள் வெளிப்படுத்திய
உணர்வினை மீட்டு அதை மக்களுக்குக் கிடைக்கச் செய்து மக்களை நல்வழியில் வாழச் செய்ய வேண்டுமென்ற முடிவை காந்திஜி தமக்குள்
எடுத்து இந்திய மக்களைப் பண்படும்படி செய்தார்.
1.காந்திஜி “உலக மக்கள் அனைவரும்
நம் சகோதரர்” என்பதை தமது எண்ணம் சொல் செயலில் வைத்து
2.இந்திய மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள பகைமை உணர்வுகளை நீக்கி
3.அனைவரையும் அரவணைக்கும்
தன்மை பெற வேண்டும் என்று எண்ணி
4.இந்திய மக்களைச் சீர்படுத்த
வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மன உறுதி கொண்டு செயல்படுத்தினார்.
இதனால் காந்திஜி உலக அரங்கில் அனைவருடைய உள்ளத்திலும் இடம் பிடித்தார்.
காந்திஜி “எதிரிகளையும்” கடவுளாக மதித்தார். அவர் தனக்குள் பகைமை உணர்வுகள் இயக்காதபடி தடுத்து… சாந்தம் ஞானம் விவேகம் எனும் நல்லுணர்வுகளைத் தமது உடலுக்குள் சுதந்திரமாக்கினார்.
ஞானத்தின் வழி கொண்டு நல் உணர்வுகளைத் தமக்குள் சுதந்திரமாக்கி அனைவரையும் அன்புடன்
அரவணைக்கும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைக் காந்திஜி தனக்குள் ஓங்கி வளரச் செய்தார்.
1.காந்திஜியின் உணர்வுகளை
நாம் நுகர்ந்தோம் என்றால் உலகைக் காத்திடும்
பேரருளை நாம் அனைவரும் பெறுவோம்.
2.காந்திஜியின் வழியில்
சென்றோம் என்றால் நமது குடும்பத்தில்
பகைமையை அகற்றி ஒன்றுபட்டு வாழும்
தன்மை பெற முடியும்.
காந்திஜி மதங்கள் இனங்கள் என்ற பேதமில்லாது நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றும் “சீதாராமா”என்றும் சொல்லத் தொடங்கினார்.
“சீதாராமா”என்று நாம் மகிழ்ச்சியான
உணர்வை நுகர்ந்தால் நம்மிடம் மகிழ்ச்சியின் தன்மை வெளிப்படுகின்றது. மகிழ்ச்சியான சொல் வெளிப்படும்
பொழுது கேட்போர் உணர்வுகளிலும் மகிழ்ச்சி அடைகின்றது.
இதைத் தான், காந்திஜி “ஹரே… ராமா…” என்று அடிக்கடி சொன்னார்.
1.“பிறரைத் துன்புறுத்தி வாழ்வதைக் காட்டிலும்
2.அனைவரையும் இன்புறச் செய்து வாழ வேண்டும்” என்ற உணர்வை ஓங்கி
வளர்த்தவர் காந்திஜி.
எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்தால் அதன் உணர்ச்சிகள் நமது
உடலுக்குள்ளும் நல்லதாகச் செய்யும்… மக்களுக்கும் நல்லது
செய்யும் என்று காந்திஜி எண்ணினார்.
அதன் வழி அவருடைய சொல்லும் அவருடைய செயலும் ஒன்றாக இருந்தது.
மக்கள் ஏகோபித்த நிலையில் தவறு செய்யும் நிலை வரும் பொழுது காந்திஜி உண்ணாவிரதம்
இருந்தார். காரணம் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம்
1.மக்களிடையே தம் மீதான பாசத்தை
வரவைத்து
2.அதன் வழியில் மக்களுக்கு உண்மைகளைப் புரிய வைத்து
3.பிறருக்குத் தீங்கு செய்யாத நிலைகளையும்
4.தீண்டாமை என்ற நிலைகளை மறக்கச் செய்து அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மையும் பெற வேண்டும் என்ற
5.“உறுதி கொண்ட உணர்வை” மக்களுக்கு ஊட்டினார்.
நாம் ஒவ்வொரு ஞானியரையும் போற்றித் துதிக்கின்றோம்... காந்திஜியையும் போற்றித் துதிக்கின்றோம். ஆனால் அவர்கள் காட்டிய அற வழிகளை நமது வாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை.
ஒவ்வொரு காலத்திலும் மகான்கள் தோன்றுகின்றனர். ஆனால் மகான்கள் இருக்கும்
வரை போற்றுகின்றோமே தவிர அவர்கள் மறைந்த பின் அவர்களைச் சுத்தமாக மறந்து விடுகின்றோம்.
இன்று மனிதர் ஒவ்வொருவரும் தனக்குச் செல்வத்தைத்
தேட எத்தனையோ வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். செல்வத்தைச் சேர்த்தபின்… அவர்களின் குடும்பத்திற்குள்
செல்வத்திற்காகப் போரிட்டுக் குடும்பத்திற்குள் ஒற்றுமையற்ற நிலை உருவாகிச் செல்வத்தைச் சீரழிக்கச் செய்யக்கூடிய நிலையே நடக்கின்றது.
இது போன்ற நிலை
பெரிய செல்வந்தர்கள் வீடுகளில் இப்பொழுதும் இருப்பதைக்
காணலாம். இப்போர் முறைகளினால் செல்வம் கரைகின்றது. அந்த உணர்வுகள் வளர்கின்றன. அன்பு பண்பு என்ற நிலைகள்
மறைகின்றன.
இது போன்ற நிலைகள் உலகம் முழுவதற்கும் இருக்கின்றது.
இவையெல்லாம் யாம் ஏன் சொல்கிறோம் என்றால் நமது நூற்றாண்டில்
வாழ்ந்த காந்திஜி ஒரு மகான் என்பதை விட "ஒரு ரிஷி" என்றே சொல்லலாம்.
உலக மக்கள் அனைவரும் தெளிந்த நிலைகள் கொண்டு சகோதர தத்துவத்துடன்
வாழ வேண்டுமென்று ஒரே நிலையில் இருந்தவர் காந்திஜி.
காந்திஜியே ஒரு சமயம் “அன்னியனே வெளியேறு...!” என்று சொல்லும் தன்மை வந்து விட்டது. சாந்தமும் விவேகமும் காந்திஜி கொண்டிருந்தாலும் அன்னியருடைய ஆட்சி மிகவும் கடுமையான நிலைகளில் வரும் பொழுது காந்திஜி எல்லா மக்களையும்
ஒன்று திரட்டி, “அன்னியனே வெளியேறு” என்ற கோஷத்தை எழுப்பினார்.
அன்னியன் என்றால்
1.தீமை செய்வோர் தீமை செய்யும் சக்திகளை எல்லாம் வெளியேற்றி
2.அன்புடன் அரவணைக்கும் நிலையினை
நமது நாட்டில் உருவாக்க வேண்டும் என்று காந்திஜி கூறினார்.
காந்திஜி யாரையும் அன்னியமாக எண்ணவில்லை. மற்றவரை யார் பகைமை உணர்வுடன்
பார்க்கின்றனரோ அவர்கள் தான் அன்னியர் ஆகின்றனர். இந்த அன்னியத்தில் இருந்துதான் விடுபட வேண்டும்
என்று “அன்னியர்கள் வெளியேற வேண்டும்” என்று சொன்னார்.
நாம் அனைவரும் காந்திஜியின் கொள்கைகளை நமது வாழ்க்கையில்
கடைபிடிக்க வேண்டும். நாட்டைக் காக்கும் பண்புகள் நமக்குள் வளர வேண்டும்.
நாட்டில் அன்பு கலந்த உணர்வுகள் வளர வேண்டும் என்ற அருள் உணர்வுகளைத் தங்களிடத்தில் வளர்க்கும்
அன்பர்கள் அனைவரும்
1.மகாத்மா காந்திஜியின் அருள் சக்தி பெற்று… அனைவரையும் அரவணைத்து
வாழும் அருள் சக்தி பெற்று
2.இந்த வாழ்க்கையில் சாந்தத்துடன்
ஞானத்துடன் விவேகத்துடன் வாழ்ந்து
3.தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்றுப் பேரானந்த பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.