ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 24, 2018

மன உறுதி நமக்கு எப்படிக் கூடுகிறது...? மன உறுதி எதனால் இழக்கப்படுகிறது...? மன உறுதியை நாம் எதிலே கூட்டிக் கொள்ள வேண்டும்...?


செல்வங்கள் எவ்வளவு தேடி வைத்திருப்பினும் செல்வம் வைத்திருக்கும் குடும்பங்களில் பார்க்கலாம். இன்று “எத்தனை துயரங்கள்...! எத்தனை தொல்லைகள்...! எத்தனை எதிர்ப்புகள் அடைகின்றார்கள்...! என்று பார்க்கலாம்.

அதே சமயத்தில் செல்வம் இல்லாதவர்களும் இது கிடைக்கவில்லையே...! அது கிடைக்கவில்லையே...! என்று இந்த வேதனையின் உணர்வுகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

1.செல்வம் இல்லாத போது...
2.உடலில் வேதனைப்பட்டாவது செல்வத்தைத் தேட வேண்டும் என்று வலிமை வருகின்றது

ஆனால் செல்வம் வந்த பின்
1.செல்வதைக் காக்க உணர்வுகள் வலிமை குறைந்து
2.வேதனையைத்தான் வளர்க்க நேருகிறது.
3.அப்பொழுது தேடிய செல்வதைப் பாதுகாக்கும் உணர்வுகளை இழக்கின்றோம்.

செல்வம் உள்ள பொழுது வேதனை என்ற உணர்வினை நம்மால் மீட்க முடியும். ஆகவே செல்வம் இல்லாதவருக்கு எப்படியும் செல்வம் தேட வேண்டும்...! என்ற ஆர்வம் வருகிறது.

அந்த ஆர்வத்தின் நிலைகள் கொண்டு கடினமான உடல் உழைப்புகளைச் செய்வதும் அப்பொழுது தன் கஷ்டங்களை எண்ணாது “எப்படியும் தான் இந்த வாழ்க்கையை உயர்த்த வேண்டும்...!” என்று மன உறுதி கொண்டு வளருகிறது.

மன உறுதி கொண்டு வளர்ந்தாலும் கடைசியில் நாளைக்கு உணவு இல்லையென்றால் எப்படியாவது நாளைக்கு உணவைத் தேட வேண்டும் என்ற மன உறுதி வருகிறது.

ஆனால் கூட நான்கு நாட்களுக்குத் தேவையான உணவு இருந்தால்... “சரி விடு... போ... பார்க்கலாம்...!” என்று தோன்றும். அந்தத் தேடி சேமிக்கும் நிலையும் குறைந்துவிடும்.

இப்படி மனிதனின் வாழ்க்கையில் மனப் போர் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எது எப்படி இருந்தாலும்...
1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்கி
2.நமது நல்ல உணர்வுகளை உயர்வாக்கி
3.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லா நிலையை அடைதல் வேண்டும்
4.அதற்காகத்தான் தான் யாம் உபதேசிக்கும் இந்தத் தியானமே தவிர
5.சொத்து வேண்டும்... சுகம் வேண்டும்... கௌரவம் வேண்டும்... புகழ் வேண்டும்...! என்ற நிலைக்காக அல்ல.

ஆகவே அழியாச் சொத்தான அந்த அருள் ஞானப் பேரின்பச் சொத்தைத்தான் நாம் தேட வேண்டும். நம்முடைய மன உறுதி இதிலே தான் இருக்க வேண்டும்.