ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 25, 2018

குருவுக்கும் நம் உயிருக்கும் கொடுக்க வேண்டிய காணிக்கை எது...?


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் (ஞானகுரு) அருள் ஞான வித்தைப் பதிவு செய்தார். அவர் காட்டிய வழியைச் சீராகக் கடைப்பிடித்து அதன் வழி நடக்கப்படும் போது அருள் வித்துகளை உருவாக்க முடிகிறது.

அதுவே சொல்லாக வரும் போது அதை நீங்கள் பதிவாக்கினால் உங்களுக்குள்ளும் ஞான வித்தாக உருவாகின்றது. நீங்கள் எடுத்து அதை வளர்த்துக் கொண்டால் தீமைகளை அகற்றும் உணர்வாகக் குருவாக நின்று அது உங்களைக் காக்கின்றது.

1.என்னை நீங்கள் குருவாக மதித்தாலும்
2.என்னை நீங்கள் போற்றித் துதித்தாலும்
3.எனக்கு மாலை மரியாதைகள் செய்தாலும்
4.எனக்குச் செல்வத்தைக் கொடுத்தாலும்
5.அதுவெல்லாம் குருவுக்குச் செய்யக்கூடிய காணிக்கை அல்ல.

அருள் ஒளி கொண்டு மெய் ஞானிகளின் உணர்வை நீங்கள் நுகர்ந்து பகைமையை நீக்கிடும் அருள் சக்தியை நீங்கள் எப்போது பெறுகின்றீர்களோ அது தான் குருவுக்குக் கொடுக்கக்கூடிய காணிக்கை ஆகும். நீங்கள் மகிழ்ந்து வாழ்வதே என்னை மகிழச் செய்யும் நிலை ஆகும்.

அதைப் போல நீங்களும் மற்றவர்களுக்கு அந்த மகிழ்ச்சியின் உணர்வை ஊட்டி அவரைக் கண்டு நீங்களும் மகிழும் தன்மை வந்தால் அதுவே குருவாகி உங்களுக்குள் நல்லதாகும்.

இருளை அகற்றி அருள் ஞானத்தை வளர்த்திடும் நிலையாக உயிரான குருவுக்குச் சேர்க்கும் காணிக்கையும் அது தான்.

ஆகவே அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்ப்போம் என்றால்
1.அருள் குருவின் தன்மையாக
2.”உயிர்...” நமக்குள் என்றும் அருள் உணர்வாக இயக்குகின்றான்.
3.அறிவாக இயக்குகின்றான்... தெளிவாக்குகின்றான்... ஒளியாக மாற்றுகின்றான்...!
4.இதனின் நிலையை ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.

நான் இப்பொழுது சொல்லும் சொல் இலேசாக இருக்கும். “இதில் எத்தனையோ... கடின நிலை இருக்கும்...!”
1.கடுமை என்று எண்ணினால் கடுமைகள் உண்டு.
2.ஆனால் இதை எப்படியும் பெறுவோம் என்று உறுதி பெற்றால் அந்தக் கடுமையை நீக்கிடலாம்.
3.நமக்குள் அருள் ஞானத்தைப் பெருக்கலாம். இருளை அகற்றிடும் வலிமை பெறலாம்.
4.இவ்வுலகில் இனி எதிர்ப்பில்லாத உணர்வாக நமக்குள் வளர்க்கலாம்.
5.என்றும் ஏகாந்த நிலை என்று நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் பெறலாம்.

நமது குரு காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்வதற்காகத்தான் யாம் இந்தத் தியானத்தைக் கொடுக்கின்றோம்.

என்னமோ தினமும் வரிசையில் சொல்லிக் கொண்டே வருகிறேன் என்றால் பொருள் தெரியாது.
1.பொருளின் தன்மைகளை ஒரு சமயம்...
2.அது அது காலம் வரும் போது தான் உணர்த்துகின்றோம்.
3.இப்பொழுது யாம் உபதேசிப்பதை ஆழமாகப் உங்களுக்குள் பதிவாக்கி விட்டால்
4.மீண்டும் நினைவு அந்தத் தக்க சமயத்தில் அருள் ஞானத்தைப் பெருக்கும் வலிமையாக உங்களுக்குள் நிச்சயம் வரும்.