ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 30, 2018

கஷ்டத்தையும் வேதனையையும் பதிவு (RECORD) செய்யும்போது துயரமான வாழ்க்கையாகின்றது - அதை மறக்க என்ன செய்ய வேண்டும்...?

விஞ்ஞான அறிவு கொண்டு இப்போது கம்ப்யூட்டரில் (RECORD) பதிவு செய்து வைத்துக் கொள்கின்றார்கள். தட்டி விட்டவுடனே அதனுடைய இயல்பைத் தெரிந்து கொள்கின்றார்கள்.

அதே போல் தான் மனிதர்கள் நாம் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைப் பதிவாக்கிக் கொள்கின்றோம். சண்டை போடுவதை எண்ணியவுடனே நமக்கும் கோபம் வந்து விடுகின்றது. நம் நல்ல காரியத்தைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

கோவிலுக்குப் போய் நாம் தெய்வத்தை வணங்குகின்றோம். வணங்கி வரும் பொழுது நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால்
1.“நடக்கவில்லையே... நடக்கவில்லையே...!” என்று எண்ணி
2.என்னத்தைச் சாமியைக் கும்பிட்டு என்ன பண்ணுவது…? என்று இதைப் பதிவு செய்து விடுகின்றோம்.

(இந்த ரிக்கார்டைத் தட்டியவுடன்) அதாவது சோர்வாக எண்ணியவுடன் நல்லதை எடுக்க முடியாமல் போய்விடுகின்றது. ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வுகள் எல்லாமே
1.நம் எலும்புக்குள் எண்ணிலடங்காத நிலைகளில்
2.ரிக்கார்டு பண்ணி வைத்துக் கொள்கின்றது.
(விஞ்ஞானி இதையெல்லாம் எலெக்ட்ரானிக் சாதனங்களின் மூலம் அந்தப் பதிவின் இயக்கங்களை (ELECTRONIC CONTROL) நிரூபித்துக் காட்டுகின்றான்.)

உதாரணமாக தன் குழந்தையை எண்ணி
1.எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தனம் தான் பண்ணுகின்றான்
2.யாரிடம் சொன்னாலும் கேட்க மாட்டான்... அவன் அப்படித்தான் செய்வான்...! என்று பதிவு வைத்துக் கொள்வார்கள்.

அதே போல் மனைவி மேல் கணவனுக்கு வெறுப்பு வந்து விட்டால் அதைப் பதிவு செய்து கொள்வார்கள். கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாம்மா... என்று மனைவியைக் கூப்பிடுவார்கள். ஆனால் அவர்களோ வேலையில் கவனமாக இருப்பார்கள். கணவன் சொன்னது சரியாகக் காது கேட்டிருக்காது.

பாருங்கள்... எப்போது பார்த்தாலும் நான் கூப்பிட்டால் சரியாகக் கவனிப்பதே இல்லை...! என்று அடுத்துக் கோபமாகப் பேசுவார்கள். அதே மாதிரி இப்போது கணவரின் கோபத்தைப் பார்த்தவுடனே மனைவி என்ன செய்வார்கள்.
1.ஏதாவது ஒன்று என்றால் கொஞ்சம் கூடப் பொறுத்துச் சொல்லாதபடி
2.எப்பொழுது பார்த்தாலும் “என்னைக் குற்றவாளியாக்குகின்றாரே...!” என்பார்கள்
3.ஆக இத்தகைய வெறுப்பான உணர்வுகள் தான் குடும்பத்தில் வளர்கின்றது.

நீங்கள் சங்கடமாக இருக்கும் போது உங்களுடைய செயல்கள் எப்படி இருக்கிறது என்று மட்டும் பாருங்கள். உதாரணமாக ஒரு துணியை வாங்க ஜவுளிக் கடைக்குப் போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் உங்கள் குழந்தை ஏதாவது ஒன்றைக் கேட்டு அடம் பிடிக்கிறது. அப்பொழுது என்ன சொல்வீர்கள்...?

ஏன்டா வெளியிலே போகும் போது இப்படிப் பண்ணுகின்றாய் என்ற சங்கடம் வரும். அடுத்து வெறுப்பு உணர்வு வரும். அப்புறம் கோபம் வரும். இத்தனையும் எடுத்துக் கொண்டு நீங்கள் கடைக்குள் போகின்றீர்கள். அந்த நேரத்தில் வெறுப்பு உணர்வு தான் உங்கள் கண்ணிலே வரும்.

நல்ல துணிகளாக எடுத்துக் காண்பிப்பார்கள். எதைப் பார்த்தாலும் இது வேண்டாம்... அது வேண்டாம்... என்று சொல்லிக் கடைசியில் வெறுப்பின் உணர்வு கொண்டு சடைத்துப் போய் “சரி இதையாவது கொடுங்கள்...!” என்று ஒன்றை எடுத்துக் கொண்டு வருவீர்கள்.

வீட்டுக்கு வந்தவுடன் துணியை எதிர்பார்த்துச் சந்தோஷமாக இருப்பவர்கள் இந்தத் துணியைப் பார்த்ததும்... “என்னங்க...! போயும் போயும் இந்தப் புடவையைத் தான் எடுத்து வந்தீர்களா...!” என்பார்கள்.

இல்லை...இல்லை... இந்தத் துணிக்கு என்ன குறைச்சல்...? என்பீர்கள். அவர்கள் உங்களிடம் நன்றாகப் பாருங்கள்...! என்பார்கள். ஏனென்றால் அன்றைக்குத் தெரியாது.

மறுநாள் காலையில் பார்த்தீர்கள் என்றால் நல்ல துணி இல்லை என்று தெரிய வரும். “சனியன்...! நான் போகும் போது குறுக்கே வந்துவிட்டது. அடம் பிடித்து நமக்கு இத்தனை தொல்லை கொடுத்து விட்டான் சனியன் பிடித்த பயல்...!” என்று மீண்டும் அந்தச் “சனியன்” என்று தான் சொல்வோம்.

யாரை...? இந்த உணர்வுகள் தன் குழந்தையைப் பார்க்கும் பொழுது அந்த வெறுப்பு வருகின்றது. அவனை எண்ணிக் கொண்டு நீங்கள் சமைக்கச் சென்றாலும் சரி... காயை அறுக்கும் பொழுது நேராக அறுப்பதற்குப் பதில் சாய்த்துப் பிடிக்க வைக்கும். கையில் பட்டுவிடும்.

ஆ,..! என்று சொல்லி வெறுப்பாகி இன்னும் கடுமையான வார்த்தைகளைச் சொல்லிப் பையனைத் திட்டுவீர்கள். வேதனை இன்னும் அதிகமாகும். இதையெல்லாம் நீங்கள் பார்க்கலாம். இது எதைச் செய்கின்றது...? சந்தர்ப்பங்கள் தான் செய்கின்றது.

இப்படி மற்றவர்கள் சண்டை போடுவதையும் குடும்பத்தில் வரும் கஷ்டங்களையும் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். அந்தப் பதிவின் நிலைகளை எண்ணும் பொழுது அதன் வழியிலே தான் உங்களை அது வழி நடத்துகின்றது.

ஆனால் இந்தக் கஷ்டத்திலிருந்து எப்படி மீள்வது...? என்று நாம் திகைப்போம்...! இருந்தாலும்... அதை நாம் மறந்து (அந்தப் பதிவை இயக்கவிடாது)
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று
2.இந்த உணர்வை எடுத்தால் நமக்குள் அருள் சக்திகள் பெருகுகின்றது
3.சிந்திக்கும் ஆற்றலையும் நமக்குக் கொடுக்கின்றது
4.சிரமங்களிலிருந்து நம்மை மீளச் செய்கின்றது - நமது எண்ணம் தான்...!

நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்று இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றார்கள் ஞானிகள்.

நம் ஆறாவது அறிவு என்ன செய்கின்றது…? அது இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. எதன் மேல் நாம் இச்சைப்படுகின்றோமோ அது கிரியையாகி அதன் ஞானமாகத்தான் வருகின்றது.

வாழ்க்கையில் நாம் எதை ஞானமாக உருவாக்க வேண்டும் என்ற நிலையில் ஞானிகள் ஆலயங்களிலே தெய்வீகப் பண்புகளைக் காட்டி அதைப் எல்லோரும் பெறும்படி செய்தார்கள். அந்த உணர்வினை நுகர்ந்தால் நாம் தெய்வமாகின்றோம்.
1.சிலையை உருவாக்கி அந்தச் சிலை வடிவில் ஞானத்தை ஊட்டி
2.நாம் தெய்வமாக எப்படி மாற வேண்டும்...?
3.நம் சொல்லும் செயலும் எப்படித் தெய்வீக நிலையாக மாற வேண்டும்...? என்று
4.நம்மைத் தெய்வமாக்குவதற்காகத் தான் அவ்வாறு காட்டினார்கள்.

இந்த உடலில் எத்தனை காலம் நாம் வாழுகின்றோம்…? வாழும் இந்தக் குறுகிய காலத்திற்குள் உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் அத்தகைய தீமைகளை நீக்குவதற்காகத்தான் அருள் மகரிஷிகளின் உணர்வினை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றேன். 
1.நீங்கள் எந்த அளவுக்குக் கூர்மையாகப் பதிவு செய்து கொள்கின்றீர்களோ
2.அந்த அளவிற்குத் திரும்ப எண்ணும் போது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் மகரிஷிகள் உணர்வைப் பெற்றேன்.
4.அதே உணர்வின் தன்மையை இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
5.இந்தப் பதிவின் நினைவை நீங்கள் எடுத்துக் கொண்டால் போதும்.
6.நாம் தெய்வ சக்திகளைப் பெறுகின்றோம். ஞானிகள் மகரிஷிகளுடன் ஒன்றுபடுகின்றோம்.