ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 14, 2018

ஆதிசங்கரர் யாகங்களையும் வேள்விகளையும் பற்றித் தெளிவாக உணர்த்தியது என்ன…?

மசூதிகளுக்கு ஒரு நல்லவருடைய பேரை வைத்து இன்னார் இன்ன மசூதி என்று வைக்கின்றார்கள். சர்ச்சுகளை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு சர்ச்சிற்கும் ஒவ்வொரு பேரை வைக்கின்றார்கள்.

ஒவ்வொரு கோயிலுக்கு நாம் ஒரு பெயரை வைப்பது போன்று ஒவ்வொரு குணத்திற்குத் தக்கவாறு சர்ச்சுகளிலேயும் மசூதிகளிலும் பெயரை வைக்கின்றார்கள்.

அன்று ஞானிகள் வகுத்துக் கொடுத்த நிலைகள் வேறு. ஆனால் ஞானிகள் காட்டிய நிலைகளை அவர்களுக்கு மாறான நிலைகளில் அரசர்கள் தனக்குச் சாதகப்படுத்திக் கொண்டார்கள். அரசர்கள் எதைச் சாங்கிய சாஸ்திரங்களாக உருவாக்கினார்களோ அதைத்தான் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.

எந்தக் கோயிலை எடுத்துக் கொண்டாலும் கண ஹோமம் செய்ய வேண்டும் என்ற நிலைகளில் பல பொருள்களை நெருப்பிலிட்டுப் அதை ஆவியாக மாற்றப்பட்டு மந்திரங்களைச் சொல்வார்கள்.

யாகங்கள் செய்தால் நோய்கள் போகும்… என்றும் ஆயுள் ஹோமம் செய்தால் உனக்கு ஆயுள் கூடும்… என்றும் இப்படித் தவறான நிலைகள் கொண்டு செயல்படுத்தி விட்டார்கள்.

யாருக்குமே... ஆயுள்...
1.இந்த உடலுக்கு ஆயுளா…?
2.இந்த உணர்வுக்கு ஆயுளா…?
3.நம் உயிரின் தன்மையே நீடித்த ஆயுள்...!
4.ஆனால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அதற்குத்தக்க உடலின் உறுப்பின் செயல்கள் ஆகின்றன.

காசைக் கொடுத்து அடுத்தவர்களை வைத்து யாகத்தை வளர்க்கின்றோம். எல்லாம் செய்த பின் நான் யாகத்தைச் செய்து விட்டேன் இதனால் எனக்கு நல்லதாகும் என்றால் ஒன்றும் கிடைக்காது. ஏனென்றால் அப்படி ஒரு எண்ணத்தை நமக்குள் ஆசையாக ஊட்டி விட்டார்கள். 

துன்பத்தைப் போக்குவதற்காக வேண்டிச் செல்வத்தைச் செலவழித்து யாகத் தீயிலே பல பொருளைப் போட்டு எரிப்பதால் எந்தச் சக்தியும் வருவதில்லை என்ற இந்த நிலையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதிசங்கரர் தெளிவாகக் காட்டினார்.

ஆண்டவன் தனித்து இயங்குகின்றான். ஒவ்வொரு தெய்வமும் தனித்து இயங்குகின்றது. வேள்விகள் செய்து அதை நிறைவேற்றினால் தான் உனக்கு நல்லது நடக்கும் என்று காசி கங்கைக் கரையில் அன்று துவைதவாதிகளுக்கும் ஆதிசங்கரருக்கும் சர்ச்சையாகி வாதிட்டுக் கொள்கிறார்கள்.

கடைசியில் அந்தத் துவைதவாதிகள் ஆதிசங்கரருக்கு ஏவல் செய்து  வயிற்று வலியை வர வைத்து விட்டார்கள். வயிற்று வலியை நிவர்த்திக்க வேண்டும் என்றால் இந்த யாகத்தை நீ செய்து தான் ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள்.

அப்போது ஆதிசங்கரர்
1.ஒவ்வொரு நிமிடமும் தனக்குள் இருக்கக்கூடிய ஈசனை எண்ணி
2.அந்தச் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளி வரக்கூடிய மெய் ஒளியைச் சுவாசித்து
3.இவர்கள் செய்த தீய வினையின் நிலையே அந்த ஏவலை மாய்த்துத் தன் வயிற்று வலியை நீக்கிக் காட்டினார்.
4.இப்படித் தெளிவுபடுத்திக் காட்டியபின் தான் அங்கே போர்க்களமாக மாறுகின்றது.

ஏனென்றால் அன்றைய அரசர்கள் தன் அரசை நிலை நாட்டுவதற்காகப் பக்தியின் மார்க்கங்களிலே மதத்தை அடிப்படையாக வைத்து அவர்கள் யாகங்களையும் வேள்விகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் அப்படி இல்லாமல் உயிரான ஈசனை எண்ணி மெய் ஒளியை ஒவ்வொருவரும் ஏங்கிப் பெறும் நிலை வந்துவிட்டால் அரசனை யாரும் மதிக்க மாட்டார்கள்.

மனிதன் அவன் ஞானியானாலும் அரசர் காலங்களில் இத்தகைய பேருண்மைகளைச் சொன்னால் அவன் தலை நிற்காது. ஏற்கும் நிலை இருக்காது. அதை வெளிப்படுத்தாத வண்ணம் தடுத்து விடுவார்கள்.

அதைப் போன்ற நிலையில் தான் எதிர்ப்பு நிலையாகி காசியில் கங்கைக் கரைக்குப் பின் ஆதிசங்கரர் என்ன ஆனார்…? என்றே தெரியாது. இங்கே கேரளாவில் காலடியிலே இருக்கிறார்.

ஆதிசங்கரர் சிலையை வைத்து அதன் வழிகளிலே இன்று வந்த பீடாதிபதிகள் பலர். அன்று ஆதிசங்கரர் சொன்னது…
1.உன் எண்ணத்திலே சூட்சம நிலைகள் அனைத்தும் இருக்கின்றது
2.அந்தச் சக்தியின் சொரூபத்தை நீ சுவாசித்து உன் உடலுக்குள் நல்லதை உருவாக்கு...! என்று தான் சொன்னார்.

ஐகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்திதே...!
மனித உடலுக்குள் ஆயிரத்தெட்டு குணங்கள் உண்டு. அதில் எந்தக் குணத்தின் தன்மை நாம் ஒலிபரப்பு செய்கின்றோமோ அதே குணத்தை எடுக்கப்படும் போது அந்த உணர்வுகள் இங்கே வருகின்றது.

எந்தக் குணத்தின் அடிப்படையில் நாம் ஒலிபரப்பு செய்து பேசியிருக்கின்றோமோ அதே குணத்தை எடுத்துப் பேசும் போது அந்த உணர்வுகள் தான் நமக்குள் வருகின்றது.

ஆக நாம் எந்தக் குணத்தை எடுக்க வேண்டும்...? எந்தக் குணத்தின் அடிப்படையில் பேச வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நிலையாகத்தான் கோவிலில் தெய்வச் சிலையை உருவமாக்கி வைத்துள்ளார்கள் ஞானிகள்.

அந்தத் தெய்வத்தைக் கண் கொண்டு பார்த்த பின்
1.இந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.இதை அருளிய அந்த மகரிஷியின் அருள்சக்தி் நாங்கள் பெற வேண்டும் என்ற
3.அந்த உணர்வின் தன்மை சுவாசிப்பதற்கு அன்று மெய் ஞானிகள் கொடுத்தனர்.

மகரிஷிகள் தங்கள் உடலிலே வந்த தீமைகள் அனைத்தையும் மாய்த்துத் தங்கள் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி விண் சென்றவர்கள். துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் இருக்கின்றார்கள்.

ஆகவே தியானம் எடுத்துக் கொண்டவர்கள் நீங்கள் தியானிக்க வேண்டியது எது…? எந்தக் கோயிலுக்குச் சென்றாலும்
1.அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.அந்தத் தெய்வ குணத்தை நமக்கு உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்.
3.இது எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் ஈஸ்வரா என்று கண்களை மூடி உடலுக்குள் செலுத்த வேண்டும்

வாழ்க்கையில் சந்திக்கும் எத்தகைய சம்பவங்களாக இருந்தாலும் அதைப்  பார்த்த அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உடலுக்குள் செலுத்தும் போது பயமோ ஆத்திரமோ கோபமோ வேதனையோ போன்ற உணர்வுகள் இயங்காத வண்ணம் தடைப்படுத்தி உடலுக்குள் தீமைகள் உருவாகாதபடி அதைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றோம்.

ஆலயத்தின் பண்புகளே அது தான்…!