ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 9, 2018

நரி தந்திரமாகச் செயல்படுவது போல் தான் இன்றைய பெரும் பகுதி மனிதரின் செயலாக்கங்கள் “மற்றவரை ஏமாற்றும் நிலையாக...” இருக்கின்றது


இன்று உலகம் முழுவதற்கும் விஷத்தினுடைய தன்மை பரவி விட்டது. அதனால் மனிதன் சிந்தனை இழக்கச் செய்யும் தன்மையாகி
1.தன்னைக் காத்திடும் உணர்வின் தன்மை தான் இருக்குமே தவிர
2.நண்பனைக் காக்கும் நிலை இல்லை.

நண்பனைக் காப்பது போல நமக்குள் இருக்கும். ஆனால் தன்னைக் காத்துக் கொள்ள நரித் தந்திரம் போன்ற நிலையிலே தான் செயலாக்கங்கள் இருக்கும்.

உதாரணமாக ஒரு நரி நம் கையிலே சிக்கிவிட்டால் அது அப்படியே பேசாமல் இருக்கும். “எப்பொழுது… இவன் ஏமாறுவான்…!” என்ற நிலையிலேயே தான் அதனுடைய எண்ணம் எல்லாம் இருக்கும்.

ஒரு சமயம் காட்டுக்குள் சென்று எம்மை நரியைப் போல் கூவும்படி (ஊளையிட) சொன்னார் குருநாதர். நரியின் தோலையும் போர்த்திக் கொள்ளச் சொன்னார். நரியைப் போல் கூவிய பின் நரி அருகிலே வருகின்றது.

அருகிலே வந்தபின் “நீ அதனின் காலைப் பிடித்துக் கொள்…!” என்று சொன்னார். காலைப் பிடித்துக் கொண்டேன். காலைப் பிடித்துக் கொண்டவுடனே ஒன்றுமே என்னைக் கடிக்கவில்லை. பேசாமல் இருக்கின்றது.

 ஏமாற்றுகின்ற நிலையில் தான் அது இருக்கின்றதே தவிர கடிக்கின்ற நிலையில் இல்லை. எப்படா... நான் விடுவேன்... என்று பார்த்துக் கொண்டிருக்கின்றது.

நீ லேசாக உன் கையைத் தளரவிடு…! என்றார் குருநாதர். தளர்ச்சியின் தன்மை கொடுத்த பின் அது எப்படி “சடக்…” ஓடுகின்றது என்று பார்...! உன்னைக் கடிக்கவில்லை. ஆனால் தப்பிக்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால் உன்னைக் கடிக்கும் நிலை வந்தால் நீ அதை அடிக்கும் நிலை வரும் என்று அதற்குத் தெரிகின்றது. ஆனால் அதற்குள் இந்த உணர்வின் தன்மையை அது எப்படிச் செயலாக்குகின்றது...? என்பதனைத் தெளிவாக்கினார் குருநாதர்.

இதே போலத்தான் மனித வாழ்க்கையில் ஒன்றுக்கொன்று மாற்றியமைக்கும் உணர்வுகளாக “ஏமாற்றுதல்...” என்ற நிலை பெரும் பகுதி மக்கள் மத்தியில் பரவி விட்டது.

இன்று உங்களிடம் ஒரு உதவி பெற வேண்டும் என்றால் மிகவும் வேண்டிக் கேட்பார்கள். உதவியும் பெற்றுக் கொள்வார்கள்,
1.ஆனால் உதவி பெற்ற பின்... உங்களால் அவர்கள் வலு பெற்ற பின்
2.என்ன செய்துவிட்டான் பெரிதாக…! என்று
3.அடுத்தாற்போல் உங்களையே எதிர்க்கும் நிலை வருகின்றது.
(நடைமுறையில் இன்று எல்லா இடங்களிலும் இதை நீங்கள் பார்க்கலாம்)

அமெரிக்காவினுடைய நிலையோ “தான் ஒரு போலிஸ்காரன்...!” என்ற நிலைகள் கொண்டு ஒவ்வொரு நாட்டுக்கும் அவன் பொருளாதாரத்தைக் கொடுத்து அதன் வழி உள்ளே ஊடுருவுகின்றான்.

நரி எப்படித் தந்திரம் செய்கின்றதோ இதைப் போல மக்கள் மத்தியில் தந்திரத்தைச் செய்து மதம் இனம் மொழி என்ற நிலையில் ஒருவருக்கொருவர் போர் முறையைத் தூண்டி இவர்களை வலுவிழக்கச் செய்து அதன் வழியே செயல்படுத்திக் கொண்டிருக்கின்றான்.

விஞ்ஞானத்தைத் தனக்குள் வெளியிலே வைத்துக் கொண்டு லேசர் இயக்கம் என்ற நிலையில் ஒவ்வொரு நாட்டிலே நடக்கும் நிலைகளை இன்று கண்டறியும் தன்மைக்கு வந்துவிட்டான்.

அப்படி வந்து வான் வீதியிலே லேசர் இயக்கத்துடன் கலந்து கதிரியக்கப் பொறிகளைத் தூவி பயிரினங்களையும் அழித்திடும் சக்தியாகச் செயல்படுத்துகின்றான்.

இவ்வாறு விஷத் தன்மை கொண்டு அவன் நம்மை அழிக்க நேர்ந்தாலும்
1.எந்த விஷத்தைப் பரப்பினானோ
2.அவைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
3.அவன் நாட்டுக்கே மீண்டும் அதை அழைத்துச் செல்லும் என்ற நிலைகளை அறிய மறந்து விட்டான்.

ஆகவே விஷத் தன்மைகள் சூழ்ந்து இன்று மனித இனமே இழந்திடும் நிலை உருவாகி விட்டது. இத்தகைய விஞ்ஞான உலகில் தான் நாம் வாழ்கின்றோம். நம்முடைய ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும்.

இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது வந்து கொண்டிருக்கும் இதைப் போன்ற தீமைகளிலிருந்து மீளும் சக்தியாக அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் பெற்றாலொழிய இதிலிருந்து தப்பும் வழி இல்லை.