ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 12, 2018

போகர் தன் உயிராத்மாவை வைரமாக மாற்றியது போல் நம் உயிராத்மாவைப் பேரொளியாக நாமும் மாற்ற முடியும்…!


நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ஒளிக் கற்றைகள் நேரடியாக நம் பூமிக்குள் பதிந்து விட்டால் சில தாவர இனச் சத்துக்களுடன் இணைந்து மண்ணுக்குள் கருவாகி அது வைரக் கற்களாக விளைகின்றது. இது பூமிக்குள் உருவாகும் நிலை.

நாகம் அது எடுத்துக் கொண்ட விஷத்தின் தன்மைகளைத் தன் உடலுக்குள் சேர்த்துத் சேர்த்து அதனின் சேமிப்பாக அந்த உணர்வின் தன்மை நாக மாணிக்கமாக உருப் பெறச் செய்கின்றது. இது உடல் உறுப்புக்குள் இந்த நிலை உருவாகின்றது.

இதைப் போன்று விஷத்தின் தன்மை கொண்ட ஒவ்வொரு உடலுக்கும் இந்த நிலைகள் உண்டு. உயிரின் சுழற்சிக்குப் பக்கம் தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப யானைக்கும் அந்தக் கற்கள் உருவாகும். “யானை மதக்கல்” என்று அதைச் சொல்வார்கள்.

அதே போல சில மிருகங்கள் அதிக நாள் நீடித்து வாழ்ந்தால் அதற்குள் இருக்கக்கூடிய விஷத்தின் தன்மை உறைந்து அந்த வைரத்தின் தன்மையே காட்டும். நரிக்கும் நரிக் கொம்பு என்று சொல்வார்கள்,

ஏனென்றால்
1.எந்த நட்சத்திரத்தின் உணர்வின் நிலைகள் கொண்டு
2.அந்த உயிரின் துடிப்பின் நிலைகள் கொண்டு உணர்வை இயக்கக் கூடிய ஆற்றல் பெற்று
3.ஒரு உயிரணுவாகத் தோன்றியதோ அதன் வரிசையிலே அது வளர்ந்து வரப்போகும் போது
4.அந்த நட்சத்திரத்தின் உணர்வுகள் அதற்குள் உறையப்பட்டு
5.அந்த விஷத்தின் ஆற்றல் அது ஒரு உடலின் தன்மை பெறும் போது
6.இதைப் போன்ற ஒரு விஷக்கற்கள் (வைரம்) உண்டாகும்.

இதைப் போன்று மனிதனுக்கும் இந்த உணர்வின் தன்மை நீடித்த நாள்கள் இந்தச் சரீரத்திலே தான் வாழ்ந்த காலங்களிலே வளர்க்கப்படும் போது
1.உயிரை ஒட்டிய நிலைகள் கொண்டு (புருவ மத்தியில்)
2.இந்த உணர்வுகள் உச்சியிலே வைரக் கல்கள் அது விளையும்.

இதைப் போன்று போகன் பல ஆயிரம் ஆண்டுகள் உடலிலே இருந்து பல உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்துத் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றினான்.

ஒளியாக மாற்றிய நிலைகள் கொண்டு தன் உயிராத்மாவினுடைய நிலைகளை ஆற்றல்மிக்க வைரமாகப் பேரொளியாக விளைய வைத்து அந்த உணர்வின் அலையையே தனக்குள் ஆற்றலாகப் பெற்று விண் சென்றார்.

சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் அவர் திகழ்ந்து கொண்டிருக்கின்றார். அவர் அவ்வாறு திகழ்வதற்குத் தான் கண்டுணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மைகள் பல பல.

அந்த மெய் ஞானிகள் உணர்த்திய அருள் வழிகள் எல்லாம் நீங்கள் புத்தக வடிவில் படிக்கிறதென்பது மிகக் கடினம். ஏனென்றால் முந்தைய காலங்களில் எழுத்தறிவு கிடையாது.

அக்காலங்களில் சொல் வடிவில் அந்த ஞானிகள் வெளிப்படுத்தியிருந்தாலும் அவருக்குப் பின் அதை ஒவ்வொருவரும் அவரவர் நிலைகளுக்கொப்ப மாற்றித் தன் உடல் வாழ்க்கைக்குத் தான் பயன்படுத்திக் கொண்டார்கள்.
1.உடலுக்குப் பின் உயிராத்மா அடைய வேண்டிய நிலையை
2.அந்த உண்மையை உணரவும் இல்லை... உணர்த்தவும் இல்லை…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் எமக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாக உணர்த்திய பின்பு தான் அக்காலங்களில் மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உண்மை நிலைகளை உணரவும் முடிந்தது. அந்த நிலையை அடையவும் முடிந்தது.

அதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.