ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 29, 2018

மழை பெய்வதை ஐந்தறிவு கொண்ட ஒரு தவளை ஆனந்தமாக ஏற்றுக் கொண்டு சப்தமிட்டு வரவேற்கின்றது – ஆறு அறிவு கொண்ட நாம் “சனியன் பிடித்த மழை...” என்று அதைத் திட்டிப் போகச் சொல்கின்றோம்

தேர்தல் நேரத்தில் பய உணர்வு கொண்டு அங்கே இப்படிச் செய்கிறார்கள்… இங்கே இப்படி எல்லாம் செய்கிறார்கள்…! என்று இப்படிப்பட்ட மனித எண்ணங்கள் அங்கே கலந்தவுடனே ஒரு முழுமையான நிலை இல்லாதபடி ஊரே கலங்கிப் போய்விடுகிறது.

ஏனென்றால் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இப்படி ஆகின்றது.

பதினெட்டாம் பெருக்கு என்றால் முன்பெல்லாம் ஆறுகளில் குளங்களில் தண்ணீரைப் பார்க்கலாம். மகிழ்ச்சியான எண்ணங்களைப் பரப்பி நல்ல மழை பெய்ய வேண்டும் என்று அந்தக் காலத்தில் சொன்னார்கள்.

அதனால் அப்பொழுது மழையும் பெய்தது. அப்பொழுது அவர்கள் எண்ணங்கள் அனைத்தும் வானை நோக்கிப் பார்த்துப் பேரானந்தப்பட்டார்கள்.

உதாரணமாக தவளை என்ன செய்கிறது…? மழை இல்லாத காலங்களில் தண்ணீர் இல்லை என்றால் சேற்றுக்குள்ளே போய் ஒளிந்து கொள்கிறது. அப்படி ஒதுங்கித் தனக்குள் எடுத்துக் கொண்ட ஜீவ சத்து கொண்டு மேல் தோலை மூடிக் கொள்கின்றது. ஏனென்றால்
1.தன் உடலில் இருக்கக்கூடிய அந்த நீர்ச் சத்து முழுவதும் போய்விடாதபடி
2.அதற்குள்ளேயே (உள்ளேயே) தங்கிக் கொள்கின்றது.

அடுத்து மழை பெய்தது என்று சொன்னால் பெரிய பெரிய தவளை எல்லாம் நீங்கள் பார்க்கலாம். ஆனால் மழை இல்லாத காலத்தில் பாருங்கள். தவளைகள் ஜாஸ்தி இருக்காது. நீங்கள் பார்க்க முடியாது.

மழை பெய்தவுடனே தவளை எங்கிருந்து தான் வருகிறது என்று தெரியாதபடி குர்ரான்…குர்ரான்… குர்ரான்…குர்ரான்… ஆனந்தமான சப்தத்தை எழுப்பிக் கொண்டு வெளியே வருகிறது.
1.மழை நீரைப் பார்த்துத் தன் உடலில் இருக்கின்ற தோலை உறித்துக் கொண்டு
2.ஆனந்தமாக வெளியில் வருகிறது.

மழை நீருக்காகப் பல நாள் ஒளிந்திருந்து அந்தக் குளிர்ச்சியான நிலைகளான பின் வெளியில் வந்து மீண்டும் தன் இனத்தின் கருவை வெளியிட்டுத் தன் இனத்தை அதிகமாகப் பெருக்குகின்றது.

ஐந்தறிவு கொண்ட தவளை மழை பெய்வதற்குச் சப்தத்தைக் கொடுத்துக் கொண்டு வருகிறது. ஆனால் இன்றைய மனிதர்கள் நாம் மழை பெய்தாலே நாம் என்ன சொல்கிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள்...!

தான் உடுத்தியிருக்கும் துணி அழுக்காகிவிடும். வெளியிலே காயப்போட்ட துணியோ மற்ற எந்தப் பொருளானாலும் ஈரமாகிவிடுகின்றது என்று இப்படி எத்தனையோ காரணங்களைச் சொல்லி
1.சனியன் பிடித்த மழை இந்த நேரத்திலா வர வேண்டும் என்று
2.திட்டி அதைப் போகச் சொல்கின்றோம்.

இப்படிப்பட்ட மனிதனுடைய எண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மழை பெய்வதைத் தடுத்து விடுகிறது. ஆனால் இப்படித் தடுத்தாலும் அதெல்லாம் ஒரே இடத்தில் ஒன்று கூடி பேய் மழையாகப் பெய்து ஊரையும் மக்களையும் வெள்ளக்காடாக மாற்றி அழித்தும் விடுகிறது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொண்டு அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து பழகுதல் வேண்டும்.