ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2018

துன்பங்களை நீக்கக்கூடிய “கடுமையான ஆயுதம் தான்…!” யாம் கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற வாக்கு…!


வாழ்க்கையில் சங்கடம் வரப்போகும் போது என்ன செய்யும்...? சங்கடம் வந்து விட்டாலும் பரவாயில்லை..! அடுத்து வேதனை வந்துவிடுகின்றது.

வேதனை வந்து விட்டது என்றால் எல்லாமே விஷமாக மாறிவிடுகிறது. நாம் சம்பாதித்த சொத்தெல்லாம் கரையத் தொடங்குகிறது.

அதாவது நாம் சுவையான பதார்த்தத்தைச் செய்து வைத்திருந்தாலும் அதில் விஷத்தைப் போட்டால் விஷம் என்ன செய்கிறது...? பதார்த்தத்திலுள்ள அதனுடைய ருசி சத்து எல்லாவற்றையும் அது கவர்ந்து கொள்கிறது. விஷம் வலுவாகின்றது. அதை மாற்ற வேண்டுமா இல்லையா…!

போகமாமகரிஷியின் சரித்திரத்தை எடுத்துக் கொண்டோம் என்றால்
1.ஏழ்மையில் வாடப்படும் போது
2.அவருடைய ஏக்க உணர்விற்குள் தான் விண்ணின் ஆற்றல் சிக்கியது அதனால் உண்மையை அறிய முடிந்தது.
3.ஒவ்வொரு சக்தியும் அவருடைய சந்தர்ப்பத்தால் தான் அறிந்து கொண்டார்.

இராமலிங்க அடிகள் ஞானத்தைப் பெற்றதும் சந்தர்ப்பம்தான். வியாசர் வான்மீகி ஆதிசங்கரர் திருமூலர் ஏனைய ஞானிகள் ஞானத்தைப் பெற்றதும் சந்தர்ப்பம் தான்.

ஆகவே யாரும் தெரிந்து கொண்ட பிற்பாடு ஞானத்தை எடுக்கவில்லை. அதே மாதிரியான சந்தர்ப்பத்தைத் தான் இப்போது உங்களிடம் இப்போது ஊட்டுகின்றோம்.

கஷ்டம் என்று வந்து விட்டால் அந்த சமயத்தில் அதை விட்டு விட்டு ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்தக் கஷ்டமான சந்தர்ப்பத்தில் இதை எடுத்தால் அந்த ஞானிகளைப் போன்று மெய் ஞானத்தைப் பெறும் சந்தர்ப்பமாக இது மாறிவிடுகிறது.

ஆனால் அந்தக் கஷ்டத்தையே எண்ணிக் கொண்டு அந்தச் சங்கடத்திலேயே நீங்கள் இருந்தால் நல்ல எண்ணம் எது இருந்தாலும் அது விஷத்திற்குள் போய்ச் சிக்கிக் கொள்கிறது.

சங்கடம்… கஷ்டம்…! என்று வரும் பொழுதெல்லாம் அதை மாற்றும் சக்தியைப் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் (ஞானகுரு)
1.”பன்னிரண்டு வருட காலம்... உருட்டி...உருட்டி உருட்டி...உருட்டி உருட்டி...உருட்டி
2.அதாவது பலவிதமான இன்னல்களைச் செயற்கையாக உண்டு பண்ணி
3.அதிலிருந்து மீட்டிடும் அனுபவத்தைப் பெறச் செய்து
4..மெய் ஞானிகளின் ஆற்றலைப் பெறச் செய்தார்.
5.அப்படி அனுபவபூர்வமாகப் பெற்றதைத்தான் ஆத்ம சுத்தி என்ற வாக்காக ஆயுதமாகக் கொடுக்கின்றோம்.

ஆரம்பத்தில் யாருக்கும் இதைப் பயன்படுத்தவே இல்லை.

(1987-88க்குப் பிற்பாடு தான்) ஆத்ம சுத்தி என்ற அந்த வாக்கைக் கொடுத்து அதை ஏற்றுக் கொள்ளும் நிலைகள் வரும் போது அதற்குள் பல ஆற்றல்களைச் செருகி வைத்து நீங்கள் ஆத்ம சுத்தி செய்யும் போது அந்தப் பவர் (POWER) கிடைக்கும்படியாகச் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆத்ம சுத்தி என்கிற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்து விட்டுத் தான் அந்த மகரிஷிகளின் ஆற்றல்களை எல்லாம் உங்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றோம்.

1.பல இன்னல்களைத் தாங்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி
2.அந்த ஒவ்வொரு இன்னலையும் நீக்குவதற்கு
3.பேரண்டத்தின் ஆற்றலையும் மகரிஷிகளின் உணர்வலைகளையும் சுவாசித்து
4.அதை உங்கள் உடலுக்குள் அணுக்களாக மாற்றுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.

ஒரு துன்பம் வரும் பொழுது, “ஓம் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா... அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா...! என்ற உணர்வைச் சுவாசிக்க வேண்டும்.

அப்படிச் சுவாசிக்கும் பொழுது அந்த மெய் ஞானிகள் விளைய வைத்த ஞானத்தின அருள் ஒளிகள் நீங்கள் நினைத்த மாத்திரத்தில் சுலபத்தில் வரும். அத்தகைய தன்மைதான் யாம் கொடுக்கும் இந்த வாக்கு இந்த ஆத்ம சுத்தி என்பது.

இது துன்பங்களை நீக்கக்கூடிய கடுமையான ஆயுதம்.

இதை நீங்கள் எடுக்கும் பொழுது துன்பம் நீங்கும்… நோய்கள் நீங்கும்… பகைமைகள் அகலும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கூடும்…! இந்த மனித வாழ்க்கையில் நீங்கள் புனிதம் பெற முடியும்.

தயவு செய்து இதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்...!