ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2018

சில குழந்தைகள் எல்லோரையும் அடிப்பதற்குக் காரணம் என்ன...? “நச்சு...நச்சு” என்று அழுவதற்குக் காரணம் என்ன...?


ஒரு தாய் கருவுற்றிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாய் கருவுற்ற அந்தச் சமயத்தில் மற்றவர்கள் சண்டையிடுவதைச் சந்தர்ப்பத்தால் பார்க்க நேர்கின்றது.

தன் குடும்பத்தில் சண்டை இல்லை என்றாலும் அடுத்த குடும்பத்தில் சண்டை இடுவதை இவர்கள் என்ன பேசுகின்றார்...? அவர் என்ன பேசுகிறார்...! என்று வேடிக்கையாகப் பார்ப்போம்.

ஒருவருக்கு ஒருவர் ஏசிப் பேசி அழித்திடும் உணர்வு கொண்டு பழித்திடும் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அதை உற்று நோக்கிக்  கூர்ந்து கவனிக்கும் தாயின் கருவிலிருக்கும் குழந்தைக்குள் இது பட்டுவிடுகின்றது. இந்த உணர்வு குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

1.தாய் சண்டையிடுபவர்களைக் கூர்ந்து பார்க்கும் பொழுது
2.சண்டையிட்ட உணர்வுகள் தாய் உடலில் ஊழ்வினையாகப் பதிவாகின்றது
3.அதுவே குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகின்றது.

“பூர்வம்” என்றால் கருவிற்குள் இருக்கும் போது அது செய்த புண்ணியத்தின் நிலைகள் அதாவது
1.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் தாய் செய்த தவத்தின் பலனே
2.நல்லதோ கெட்டதோ அது பூர்வ புண்ணியமாகக் குழந்தைக்கு அமைகிறது.

இந்த உணர்வின் தன்மை குழந்தை உடலில் சிறுகச் சிறுக வளர்ந்து பிறந்தவுடனே ஒன்றும் புரியாது. ஆனால் அவர்கள் எப்படிச் சண்டை போட்டார்களோ இதே மாதிரி நச்சு.. நச்சு... நச்சு.. நச்சு... என அழுக ஆரம்பித்து விடும்.

தாய் குழந்தையைத் தொட்டுக் கொஞ்சி குலாவப் போனால் “பட்...பட்...” என்று போட்டுக் கையை வைத்துத் தாயை பரலும். ஏனென்றால் அந்த உணர்வு அந்தக் குழந்தைக்குத் தெரியாது. அந்த உணர்வை இயக்குவது உயிர்.

தாயின் ஊழ்வினைப் பயன்படி அது வேடிக்கையாகப் பார்த்த நிலைகள் கொண்டு அவர்கள் எபப்டிச் சண்டை போட்டார்களோ அதே மாதிரி அடுத்த குழந்தையுடன் இந்தக் குழந்தை சண்டைக்குப் போகும்.

யாரிடம் போனாலும் வம்புக்குப் போகும். இன்னொரு குழந்தையைக் கண்டால் வெடுக்... வெடுக்... என்று இழுத்துப் போடும்.

சில குழந்தைகளைப் பார்க்கலாம். ஒரு பிள்ளை அது சும்மா நின்று கொண்டிருந்தாலும் அதைக் “குபீர்...!” என்று தள்ளி விட்டுச் சிரிக்கும். திடீரென்று அவ்வாறு செய்யும்.

இதற்கெல்லாம் காரணம் தாய் கருவிலிருக்கும் பொழுது அந்தக் குழந்தை பெற்ற பூர்வ புண்ணியம் தான். ஆகவே நல்ல குழந்தைகளை உருவாக்க நாம் எந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்...?

ஒரு குடும்பத்தில் கர்ப்பமாகி விட்டார்கள் என்று தெரிந்து கொண்டாலே
1.அதை ஒரு “புனித நாள்” என்று எண்ண வேண்டும்
2.அருள் ஒளி பெறக் கூடிய அந்த ஞானக் குழந்தை வளர வேண்டும்,
3.உலகைக் காத்திடும் அருள் ஞானி வளரவேண்டும் என்று அந்தத் தாய் எண்ண வேண்டும்.

கர்ப்பமான அந்தத் தாய் அருள் உணர்வு பெறவேண்டும். உலக ஞானம் பெறும் தகுதி கருவில் வளரும் குழந்தை பெறவேண்டும், நஞ்சை வென்றிடும் அருளாற்றல் பெறவேண்டும், அகஸ்தியன் பெற்ற பேருண்மைகள் அனைத்தும் அந்தக் குழந்தை பெறவேண்டும்,

அகஸ்தியன் கண்ட உண்மைகளை உலகுக்கு அவன் எடுத்துக் காட்ட வேண்டும் என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் இவ்வாறு எண்ண வேண்டும். இப்படித் தியானித்து அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்கிடல் வேண்டும்.

குழந்தை பிறந்தபின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குழந்தை உடல் முழுவதும் படரவேண்டும். உலக ஞானம் பெற வேண்டும், கல்வியில் உயர்ந்த தரமும் சிறந்த ஞானமும் பெற வேண்டும், கருத்தறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்ற உணர்வுகளைத் தாய் தந்தையர் பாய்ச்சிப் பழக வேண்டும்.

இந்த முறைப்படி செய்து பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் குடும்பத்தில் உள்ளோரை ஒற்றுமையுடன் வாழச் செய்யும் அறிவாற்றல் கொண்ட ஞானக் குழந்தையாக உருவாகும்.

செய்து பாருங்கள்...!