ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 8, 2018

எதிர்பாராத நிலைகளில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்


இந்த வாழ்க்கையில் வரும் கடும் தீமைகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்மைத் தாக்குகின்றது. நாம் தவறே செய்ய வேண்டாம். ரோட்டிலே செல்கின்றோம்.

ஒரு பக்கம் ஒரு விஷத்தின் தன்மைகளைக் காய்ச்சப்படும் போது ஆவிகள் அதிலிருந்து வெளிவருகின்றது. சூரியனின் காந்தப்புலன் அதைக் கவர்கின்றது. அலைகளாகப் பரவச் செய்கிறது.

அந்த அலைகளைக் கண்டு சாந்த குணம் கொண்ட அணுக்கள் எல்லாம் நகர்ந்து ஓடுகிறது. அப்போது காற்று வேகமாக வீசும்.

காற்று வேகமாகச் செல்லப்படும் போது இந்த உணர்வின் தன்மை இடைமறித்து மனிதன் ஊடே சென்றால் இந்த விஷத்தின் தன்மையை நுகர்ந்து மனிதன் மயக்கப்பட்டுக் கீழே விழுகின்றான்.

அதற்கு முன்னாடி சென்ற மனிதனோ நல்ல அலைகளை நுகர்ந்து நல்ல வாசனை கண்டு அவன் தப்புகின்றான். அவன் சென்றபின் அதே பாதையில் அடுத்த மனிதன் செல்லும் பொழுது சந்தர்ப்பம் விஷத்தின் தன்மையைச் சுவாசித்ததும் மயங்கிக் கீழே விழுகின்றான்.

திடீரென்று போனான்… மயக்கப்பட்டான்… இறந்துவிட்டான்…! என்றால் இது எல்லாம் இன்னொரு பக்கம் விளையும் விஷத்தின் தன்மைகளை நுகரப்படும் போது யாரும் அறியாமலேயே ஏற்படக்கூடிய செயல்கள்.

அந்த விஷத்தின் தன்மை பட்ட பின் விஷ அணுக்களாக மாறி நோயாகி சிந்தனை குலைந்து மடிந்த பின் மனிதனுடைய உடலையே மாற்றி பாம்பினமாகப் பிறக்கின்றான்.

ஆகவே
1.பரிணாம வளர்ச்சியில் இந்த உயிர் எதை நுகர்கின்றதோ
2.அந்த உணர்வுக்கொப்ப உடலை அமைப்பதையும்
3.அந்த உணர்வுக்கொப்ப அழைத்துச் சென்று அடுத்த உடலுக்குள் புகச்செய்வதும்
4.அந்த உணர்வை உடலாக்குவதும் தான் உயிருடைய வேலை.

ஆனால் மனிதனின் ஆறாவது அறிவு இதை மாற்றிடும் சக்தி பெற்றது. இதை மாற்றத் தவறினால் நாம் அடுத்த நிலைகள் இப்படித்தான் இருக்கும்.

காசை கொடுத்து விட்டு மந்திரத்தைச் செய்தால் எல்லாம் சரியாப் போகும் என்பார்கள். அந்த மந்திரங்களைச் சொல்லிக் சிறிது காலம் வாழ்ந்தாலும் மீண்டும் நாம் செத்த பின் இதே மந்திரத்தைச் சொன்னால் அடுத்தனுக்கு அடிமையாகி நம் ஆன்மா இன்னொருவனைக் காக்கப் போகும்.

அந்த உடலுக்குள் சென்று மீண்டும் விஷத் தன்மைகள் கூடி இந்த உணர்வின் தன்மை மனிதன் அல்லாத நிலையாகத் தான் பிறக்க முடியுமே தவிர மனிதனாக மீண்டும் வருவதற்குப் பல கோடி ஆண்டுகளாகும்.

அதைப் போன்ற நிலைகள் ஆகாதபடி நாம் அனைவரும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறுவோம்.
1.மகரிஷிகளின் உணர்வை நம் ஆன்மாவில் பெருக்கி அதை வலிமையாக்கி
2.பாதுகாப்புக் கவசமாக அரணாக நாம் அமைத்துக் கொள்வோம்.
3.எதிர்பாராத நிலைகள் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபடுவோம்.