ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 11, 2018

மகரிஷிகளின் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் இரத்த ஓட்டமாகக் கொடுக்கின்றோம் - ஆத்ம சுத்தி செய்யும் வலுவைப் பெறுங்கள்


அன்று வாழ்ந்த மெய் ஞானிகள்
1.தாவர இனத்தினுடைய சத்துக்களைத் தன் சுவாசத்தில் எவ்வாறு ஈர்த்துக் கொண்டார்கள்...?
2.அதனின் துணை கொண்டு விண்ணின் ஆற்றல்களைத் தங்கள் புலனறிவால் எவ்வாறு நுகர்ந்தார்கள்...?
3.விண்ணின் ஆற்றலைப் பெருக்கி ஒளியாக மாறி எவ்வாறு விண்ணுலகம் சென்றார்கள்..? என்ற இந்தப் பேருண்மைகளை உணர்வதற்காக வேண்டி
4.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைக் (ஞானகுரு) காட்டிலே சுற்றச் சொன்னார்.

உன் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உன்னை அறியாது வரும் இன்னல்களிலிருந்து விடுபட விண்ணுலகம் சென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வை நீ எவ்வாறு எடுக்க வேண்டும்...? என்ற அந்தப் பழக்கத்தையும் ஏற்படுத்தினார்.

5300 ஆண்டுகளுக்கு முன் போகன் புவனேஸ்வரி என்ற நிலையில் இந்தப் பூமி தனக்குள் உருவாக்கும் சக்திகள் அனைத்தையும் (கல் மண் உலோகங்கள் தாவர இனங்கள்)
1.அதாவது இந்தப் புவனத்தின் சக்தியைத் தனக்குள் எப்படி மோகித்தானோ
2.அந்த உணர்வின் ஆற்றலை அவனுக்குள் எப்படிப் பெருக்கிக் கொண்டானோ
3.அவனைப் போன்றே அந்த மோகத்தின் தன்மைகள் உங்களுக்குள்ளும் ஊடுருவி 
4.மெய் ஒளியின் தன்மையாக அது ஓங்கி வளர வேண்டும்.

இவைகளையெல்லாம் உங்களுக்குள் ஏன் இவ்வளவு தூரம் சொல்கிறோம் என்றால் நீங்கள் தெரிந்து எடுப்பதற்கல்ல...!
1.இந்த உபதேசத்தின் உணர்வுகளை நீங்கள் எந்த அளவுக்குக் கூர்ந்து கேட்டு ரசித்து
2.அந்த மெய் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஆவலில் வருகின்றீர்களோ
3.உங்களுக்குள் அந்த மெய் ஞானிகளின் வித்து பதிந்துவிடும்.
4.இரண்டு தரம் மூன்று தரம் கேட்டுக் கொண்டே இருந்தீர்கள் என்றால் அந்த உணர்வு ஆழமாகப் பதிவாகிவிடும்.

அடுத்து நீங்கள் ஓ...ம் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரான ஈசனை எண்ணினீர்கள் என்றால் மகரிஷிகளின் அருள் ஒளி கலந்த உணர்வுகள் உங்களுக்குள் தூண்டப்படும்.

அவ்வாறு தூண்டப்பட்டு மகரிஷிகளின் ஒளியான உணர்வுகளை நீங்கள் சுவாசிக்கும் போது எவ்வளவு கவலையாக இருந்தாலும் சரி “டக்...” என்று அதை மாற்றிக் கொடுக்கும். அப்பொழுது உங்கள் எண்ணத்தின் வலுவை அனுபவத்தில் பார்க்கலாம்.

ஏனென்றால் பிறர் மேல் பிரியம் கொண்டு வாழும் நிலையில் சந்தர்ப்ப வசத்தால் வேதனையும் சங்கடத்தையும் சந்திக்கும்போது அந்த உணர்வுகள் நம்மைச் சோர்வடையச் செய்து விடுகின்றது.

அதைப் போன்று வரும் தீமைகளை ஒவ்வொரு நிமிடத்திலும் தடுத்துக் கொள்ளும் பழக்கத்தை உங்கள் அனுபவத்திற்குக் கொண்டு வருவதற்குத் தான்
1.இந்த உபதேச வாயிலாக மகரிஷிகளின் உணர்வுகளை இரத்த ஓட்டமாகக் கொடுத்து
2.அதை ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாக... வாக்காகக் கொடுக்கின்றோம்.

இந்த வாக்கின் வன்மையின் நிலைகளைக் கொடுக்கப்படும் பொழுது மகரிஷியின் எண்ண ஓட்டத்தை உங்களுக்குள் செருகச் செய்து உங்கள் முந்தைய அழுக்குகளையும் போக்கச் செய்து விஞ்ஞானத்தால் வரக்கூடிய எத்தகைய விஷத்தின் தன்மையையும் மாய்க்கச் செய்யப் பழக்கிக் கொடுக்கின்றோம்.

பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!