ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 12, 2024

இலட்சக் கணக்கான ஞானிகளை நாம் உருவாக்குவோம்

இலட்சக் கணக்கான ஞானிகளை நாம் உருவாக்குவோம்

 

வீட்டிலே கர்ப்பம் என்று தெரிந்தாலே குடும்பத்தில் உள்ள அனைவரும் “விரதம்” போன்று இருக்க வேண்டும். சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ கோபமோ வராதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

1.கருவில் வளரும் குழந்தை அகஸ்தியன் பெற்ற அருளைப் பெற வேண்டும்
2.அவன் துருவனான அந்தப் பேரருளைப் பெற வேண்டும்
3.துருவ நட்சத்திரமான பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
4.உலக இருளை அகற்றிடும் அருள் ஞானியாக வளர வேண்டும்
5.அவன் பார்வையில் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும்
6.அவன் சொல்லும் செயலும் மற்றவரைப் புனிதமாக்கும் நிலை பெற வேண்டும்
7.அந்த அருள் ஒளி பெறும் அருள் ஞானி உருவாக வேண்டும் என்று பத்து மாதமும் மற்றதெல்லாம் விட்டு விட்டு இதை எண்ணிப் பழகுங்கள்.

காலையில் ஐந்தரையிலிருந்து ஆறரைக்குள் இந்த மாதிரி எண்ணுங்கள் எல்லோரும் ஒரு விரதமாக இருந்து நாம் கோபிக்கக் கூடாது வெறுப்படையக் கூடாது சலிப்படையக் கூடாது சங்கடப்படக் கூடாது என்ற இந்த உணர்வை எடுத்து… மற்ற தீமையான உணர்வு வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

என் குழந்தை அருள் ஞானம் பெற வேண்டும் என்று எண்ணினால் பிறப்பிலிருந்தே அவனுடைய பார்வையால் உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய சர்வ தோஷங்களும் போய்விடும்… உலகையும் காப்பான்.

1.அன்று ஒரு அகஸ்தியன் இந்தப் பூமியைத் திருப்பிச் சமப்படுத்தினான்... அதனால்தான் நாமும் இன்று சுகமாக வாழ முடிகின்றது.
2.அதைப் போன்று இப்பொழுது நாம் பல லட்சம் அகஸ்தியர்களைத் தோன்ற வைக்க வேண்டும்.

அவனைப் போன்று ஞானக் குழந்தைகளை உருவாக்கினால் தான் விஞ்ஞான அறிவால் வரும் கடும் விஷத்தன்மைகளை மாற்றும் தன்மை வரும்.

தங்கத்தில் திரவகத்தை விட்டால் செம்பும் பித்தளையும் எப்படி ஆவியாகப் பிரிகின்றதோ இதைப் போல நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று நஞ்சினைப் பிரிக்க வேண்டும்.

ஏனென்றால் அது நஞ்சினை வென்றது அந்த உணர்வுகளைக் குழந்தைகள் உடலிலே பெருகச் செய்து “ஆயிரக்கணக்கான குழந்தைகளை” நாம் இப்படி உருவாக்குதல் வேண்டும்.

அத்தகைய ஆற்றல்மிக்க உணர்வுகள் இந்தப் பூமியிலே படர்ந்தால் தான்
1.விஞ்ஞானத்தினால் வந்த விஷத்தன்மைகளையும்
2.மனிதனுக்குள் ஆசை நிமித்தம் உடலை விட்டுச் சென்று தீய விளைவுகளாகப் பேயாக ஆட்டிப்படைக்கும் நிலைகளையும்
3.சிந்தனையற்ற நிலையில் இயக்கும் தீய நிலைகளையும் மாற்றி அமைக்கும் சக்தி பெற முடியும்.

இதை நீங்கள் அலட்சியப்படுத்தாதபடி செய்து பாருங்கள்.

உங்கள் குடும்பத்தில் அறியாது வந்து சேரும்
1.சாப அலைகள் தீய அலைகள் பூர்வ ஜென்ம அலைகள்
2.கஷ்டம் நஷ்டம் நோய் துன்பம் துயரம் பரம்பரை நோய்கள் எல்லாம் அடியோடு அற்றுப் போய்விடும்.
3.உங்கள் குழந்தை குடும்பத்தைக் காக்க்க் கூடிய சக்தியாக அவன் வருவான்.

“எங்கெங்கோ அலைவதற்குப் பதில்” கர்ப்பிணிக்கு இந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று ஏல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள் அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தும் அந்தக் கருவிலே விளையத் தொடங்கும்.

குழந்தை வளர வளர குடும்பத்தில் பல அதிசயங்களும் நடக்கும்… விவசாயம் செழிக்கும். உங்கள் குடும்பத்தில் செல்வச் செழிப்புடன் நீங்கள் வாழ முடியும் ஞானத்தை எல்லோருக்கும் போதிப்பவனாக அவன் வருவான் அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்லும் அருள்ஞானியாக அவன் வளர்ந்து வருவான்

குருநாதர் இட்ட கட்டளைப்படி இத்தகைய நிலைகளை நாம் இன்று செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.