ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 15, 2024

தேவர்களுடன் தேவர்களாக நாம் ஐக்கியப்பட வேண்டும்

தேவர்களுடன் தேவர்களாக நாம் ஐக்கியப்பட வேண்டும்

 

இன்றைய உலகம் பெரும் விஷத்தன்மை வாய்ந்த உலகமாக மாறிக் கொண்டு வருகின்றது… நல்ல பாம்பின் விஷம் கொடும் விஷம் என்கிறார்கள்,

அந்த நல்ல பாம்பிற்கு… அந்த நாக தேவனுக்கு அவ்விஷம் எங்கிருந்தப்பா வந்தது…?
1.இக்காற்றினில் கலந்திருக்கும் கடுமையான விஷ நிலையை…
2.தன் சுவாச நிலைக்குk கடும் விஷத்தை ஈர்த்துத் தன் ஆகாரமாக ஏற்று… அவ்விஷத்தையே உண்டு…
3.பல நூறு ஆண்டு கணக்குகள் தான் சுவாசித்த விஷ அணுக்களைத் தன்னுள்ளையே பல ஆண்டுகள் அடக்கி
4.விஷத்தையே மேலும் மேலும் ஈர்த்து அவ்விஷத்தைக் கொண்டு பெரும் மாணிக்கமாக
5.அதைத் தன் ஜீவன் முடியும் காலத்தில் கக்கி வெளிப்படுத்துகின்றது.

நல்ல பாம்பு… விஷத்தைத் தன் தொண்டைக்குழி இடத்தில் சிறுகச் சிறுகப் பல ஆண்டுகள் சேமிக்கிறது. அச்சூரியனின் சக்தி அந்த நல்ல பாம்பின் மேல் படும்பொழுது அதன் பார்வையைக் கொண்டு தன் நிலைக்கு நேராக ஈர்த்து…
1.தான் எடுக்கும் சுவாச நிலை… மேல் நோக்கி…
2.அச்சூரியனின் சக்தியிலிருந்து தன்னுள் ஈர்ப்பதாக இருக்கின்றது.

இந்நிலை கொண்டு அப்பாம்பு இக்காற்றில் கலந்துள்ள விஷமான காற்றைத் தன் சுவாசத்திற்கு ஈர்த்துக் கொடிய விஷத்தைக் கொண்டே தான் சேமித்து வைத்திடும் விஷத்தையே மாணிக்கக் கல்லாகப் பெறும் பாக்கியத்தைப் பெற்றுள்ளது அந்த நல்ல பாம்பு.

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன.
1.தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி
2.அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்நிலையில்…?

நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்… நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…! இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி… எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனைதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதுவே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.நம் உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.