ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 16, 2024

ஒரே நிலை கொண்ட ஈர்க்கும் சக்தி பெற வேண்டும்

ஒரே நிலை கொண்ட ஈர்க்கும் சக்தி பெற வேண்டும்

 

மிருகங்கள் தன் ஆகாரத்தைத் தேடிச் செல்லும் பொழுது ஆகாரம் இருக்கும் இடத்தைத் “தன் சுவாச நிலையால் உணர்ந்து” அந்த இடத்தை அணுகி ஆகாரத்தை எடுத்துக் கொள்கின்றது.

அதே நிலையில் அது செல்லும் பொழுது “தன் எதிரி உள்ளது” என்பதையும் தன் சுவாச நிலையில் உணர்ந்துதான் தப்பிச் செல்கின்றது. அதே போல… தன் கூட்டமும் எதிரிகளிடமிருந்து விலகிச் சென்று விடுகின்றது.

இந்நிலை மனிதர்களுக்கு இல்லை.

இதைப் போலவே தன்னுடைய ஆகாரத்தைத் தேடிப் போகும் பொழுது தன்னுடைய சுவாச அலைகளைக் கொண்டு தன் ஆகாரம் இருக்கும் இடம் ஈர்த்து அந்த இடத்தை நோக்கிச் செல்கின்றது.

அதே சமயம் அது தான் ஆகாரத்தை எடுக்கச் செல்லும் பொழுது
1.தன் எதிரி வருகிறான் என்று உணரும் பொழுது
2.தான் நாடிச் சென்ற ஆகாரத்தையும் எடுக்காமல் அது திரும்பிச் செல்கின்றது.

பட்சியின் தன்மையில் அதன் ஒளியை கொண்டே அது தன் ஆகாரத்தை எடுக்கும் சக்தி நிலை பெற்றது. அந்த ஒளி ஆகாரத்தின் மேல் பாய்ச்சும் பொழுது
1.அந்த இடத்தில் உள்ள சப்த அலைகளைக் கொண்டு உணரும் தன்மை பெற்று
2.அங்கு எதிரி வரும் தன்மையை அப்பார்வையின் ஒளியினாலேயே அவ்வெதிரியின் சுவாச நிலை அறிந்து
3.ஆகாரத்தை எடுக்காமல் பறந்து செல்கின்றது.

மற்ற ஜெந்துக்களுக்கு மிருகங்கள் பட்சிகள் (ஊரும் ஜந்துக்கள் அல்ல) முன்கூட்டியே மழை இடி பூகம்பம் போன்ற பல ஆபத்தான நிலைகளின் சப்த அலைகளைப் பூமியின் ஈர்ப்பு நிலை கொண்டு அதன் சுவாச நிலைக்கு ஈர்க்கும் தன்மை பெற்று “முன்கூட்டியே” இந்நிலையை அறியும் நிலை அதற்கு உள்ளது.

1.மனிதனுக்கு உள்ள அறிவு சக்தியை விட மிருகங்களுக்கு இயற்கையிலேயே “ஒரே நிலை கொண்ட ஈர்க்கும் சக்தி உள்ளது…”
2.அந்நிலையை மனிதன் பெற வேண்டும் என்றால் தியானத்தால் தான் பெற முடியும்.

இயற்கையிலேயே ஒவ்வொரு மிருகத்திற்கும் இப்படிப்பட்ட சக்தி இருந்தாலும் அதைச் செயல்படுத்த அதற்கான அங்கங்கள் கருவிகள் அதனிடத்தில் இல்லை. எழுதி வைத்தோ செயல்படுத்தவோ முடியாத உடலமைப்பைக் கொண்டது.

மனிதன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தன் எண்ண அலைகள் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு மூன்று மாத காலம் பேசாமல் இருந்துவிட்டு பிறகு பேச முயற்சிக்கும் பொழுது சில சமயம் பேச முடியாத நிலையில் சைகை மூலமாகச் சொல்லும் பொழுது அதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

தனக்கு எவ்வளவோ எண்ண அலைகள் வந்தாலும் கூட தன்னால் சொல்ல முடியாத நிலையில் மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

மிருகங்களுக்கோ பட்சிகளுக்கோ எண்ண உணர்வுகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாமலும் செயல்படுத்த முடியாமலும் போய்விடுவதினால் அதற்கு நம்மை ஒத்த அறிவு இல்லை என்று சொல்லிவிட முடியாது.

நம்மைக் காட்டிலும் மேலான அறிவு நிலை பெற்ற பல மிருக ஜந்துக்களும் பட்சிகளும் உள்ளன. அது உண்ணும் உணவிலே தனக்குத் தேவைக்கு மேல் ஒரு அணுவையும் அதிகமாக எடுத்துக் கொள்ளாது.

மனிதனுக்கு அறிவு மிருகத்தை விட அதிகம் என்று சொல்கின்றோம்.
1.ஆனால் உண்மையில் மிருகத்தின் அளவு மனிதனுக்கு அறிவு உண்டா…? என்பதுதான் சந்தேகம்.
2.மனிதனை விட மிருகத்துக்கே அறிவு அதிகம் என்று கூடச் சொல்லலாம் “இன்று மனிதன் இருக்கும் நிலையை வைத்து…”

அன்றைய சித்தர்கள் எந்த நிலை கொண்டெல்லாம் பல உண்மை நிலைகளை அறிந்தார்களோ அந்நிலை கொண்டெல்லாம் சில மிருகங்கள் நாய் நரி பறவைகள் இன்னும் பல மிருகங்கள் பல ஆவி நிலைகளை அறிந்திடும் நிலையில் உள்ளன.

ஒரு வீட்டில் ஏதாவது உடலை விட்டு ஆவி பிரியும் நாள் வருவதற்கு முதலிலேயே… மிருக நிலைக்கு அதன் சுவாச நிலை கொண்டு அதை அறியும் நிலை உள்ளது.

அந்நிலையில் தான் நாயும் நரியும் பூனைகளும் உள்ளன.
1.ஆவி பிரியும் நிலையில் பூனைகள் அங்கும் இங்கும் ஓடுவதைப் பார்த்திடலாம்.
2.ஆவி பிரியும் நிலையில் பூனைகள் அங்கு இருக்காது. அதன் சுவாச நிலைக்கே அது தெரிந்திடும்.

ஆவி நிலை மட்டுமல்ல பெரும் வெள்ளம் வருகிறது என்றாலும் பூனை நாய் நரி இப்படிக் கூரிய அறிவுடைய மிருக ஜந்துகளுக்கு சுவாச நிலையில் எல்லா நிலையுமே அறியும் தன்மை உள்ளது.

இம்மாதிரி மிருகத்தின் நிலைக்குத் தான் கடந்த கால சரீரங்களின் இன்ப துன்ப நிலைகளும் தன்னைச் சுற்றியுள்ள ஆவி நிலைகளும் மனிதனின் எண்ணமும் சுவாச நிலையும் ஒவ்வொன்றும் அறியும் தன்மை மிருகங்களுக்கும் சில பட்சிகள் நிலைக்கும் உள்ளன.

இந்நிலையில் இருந்து எல்லாம் மாறுபட்டு வாழும் நிலை கொண்டவன் தான் மனிதன். இருந்தாலும்
1.மனிதனுக்கு அச்சக்தி நிலை கொண்டு கிடைத்த பாக்கியத்தைச் சிதறவிட்டு
2.மனிதனுக்கு ஆறு அறிவு என்ற அளவை வைத்துப் பிறரிடம் ஜோசியம் கேட்டு
3.அந்த ஜோசியத்தின் நிலை கொண்டே தன் எண்ணத்தை மாற்றிப் பல நூல்களைப் படித்து
4.பல எண்ணத்தைத் தன்னுள் சிதறவிட்டுத் தனக்குள்ள சக்தி நிலையையே மாற்றிக் கொண்டு
5.தன்னைத்தானே நரகமாக்கி வாழுகின்றான் ஆறறிவு படைத்த இன்றைய மனிதன்.