ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 7, 2024

ஈசனின் சக்தி

ஈசனின் சக்தி

 

ஆடும் ஆட்டத்தைப் பார்த்தாயா…? எல்லா உயிரினங்களின் உடலிலும் இந்நிலை உள்ளதப்பா. “அருள் வருவதும்… மருள் வருவதும்” இதுவேதானப்பா… இந்நிலையே தானப்பா.

இந்நிலையை இன்று உனக்கு உணர்த்திடவே பாட நிலையில் இருந்து செயல் நிலையில் காட்டிட்டேன் பார்த்தாயா…! இந்நிலையில் உள்ள பொழுது ஓங்கார இசையை எழுப்பும் பொழுது பல பல வாசனைகளை… வாசனைப் புகைகளை எழுப்பும் பொழுது அவ் உடலில் உள்ள ஆவிக்கு நாம் ஆகாரம் கொடுத்த நிலை வருகின்றது.

இந்நிலை நீடித்தால்… தான் பார்த்த நிலையை தன் எண்ணத்தில் மறைத்து வைத்திருக்கும் நிலையை எல்லாமே செப்பிடுவார்கள்… இந்நிலை வந்தவர்கள்.

இவர்களின் நிலையை வைத்துத் தான்
1.பல பல சாமியார்கள் எல்லாம் ஆண்டவனின் பெயரை வைத்து மனிதர்களை மயக்குகின்றார்கள்.
2.இன்று பார்த்தாயல்லவா மறைந்த உண்மை வெளி வந்ததை.
3.இவ்வாவிகள் தான் வருகின்றது அருள் என்ற வடிவினிலே…
4.இனி சிறிது நேரம் இருந்திருந்தால் அவ்ருளின் தன்மை உன் மகளுக்கும் வந்திருக்கும்.

ஆண்டவன் என்பது யார் என்று புரிந்ததா…? இப்பொழுது எல்லா உடல்களிலும் இவ்வணுவின் வேலை உள்ளது.
1.பக்தி கொண்ட ஒருவரின் “ஆவி”
2.அக்குழந்தையின் மேல் உள்ளதால் “ஆண்டவன்” என்று செப்புகிறது.

இந்நிலையில் வந்த சாமியார் ஒருவர் “நானே கடவுள்… நானே தெய்வம்” என்கின்றான். அவ்விடம் உள்ள கருவின் வேலை இருக்கும் வரை தான் அவன் வேலையெல்லாம்.

ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனை கடவுள்…” என்று சொல்லுகின்றான்.
1.ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது.
2.அக்கருவையே அவன் ஆண்டவன் என்கிறான்.

நேற்று இங்கு நடந்த நிலைதான் அவன் நிலையும். இந்நிலையை நீடிக்க வைத்துப் பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்கள் கடந்த கால நிலையும் கண்டிடலாம்.

இந்நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள்… கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது… எல்லாமே. இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவையெல்லாம்.

மை போட்டுக் கேட்கின்றார்கள் ஆண்டவனிடம் பூ கேட்கின்றார்கள் என்பதெல்லாம் என்னப்பா…? “இவ்வாவிகளின் வேலைதான் அது எல்லாம்...” அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாம் இந்நிலைக்கு வருகின்றது.

இவ் எல்லா ஆவிகளுமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில். ஆயிரத்தில் கோடியில் ஒன்றுதான் உடனே மறு ஜென்மம் எடுக்கின்றது.

அவசரத்தில் எடுக்கும் மறு ஜென்மத்தினால் அங்கயீனமுடன் குறையாகப் பிறப்பது… குறைப் பிரசவம்… குறையுடன் பிறக்கும் குழந்தைகள்… எல்லாமே இவைகளின் நிலை எல்லாம் அதுதான்.
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை ஆவி உலகில் இருந்தும்
2.அறிந்திட அவகாசம் இல்லாமல் வந்து பிறக்கின்றது குறையுடன்.

நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத் தான் பிறக்கின்றது.

முதலிலேயே செப்பி உள்ளேன் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி… “எந்நிலையில் எப்படிப் பிறக்கின்றன…?” என்று. குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகத்தில் உள்ள வரை அவ்வாவிகளுக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.

ஆவி உலகில் உள்ள பொழுது “எந்நிலையில் பிறக்கலாம்…?” என்று தான் தெரியும்.
1.பிறந்த பின் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்திடாது.
2.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகின்றது.
3.இந்நிலையில் தான் ஈசனின் சக்தி விளையாடுகிறது.
4.பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை.

இன்று பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகின்றான் மனிதன்.

இவ் ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அச்சக்தியின் நிலை தெரிந்திருந்தால்… இக்கலியில் வந்த மனிதர்கள் அதையும் தன் வழிக்கு உண்ணக் காசாக்கி இருப்பார்கள்.

அதனால் தான் ரிஷிகள் நிலையில் தன்னையே… தன் உடலையே அச்சத்தின் அருளுக்கு அடிபணிய வைத்து
1.அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…?
2.எந்நிலையில் சக்தி அருளைப் பெற்றிடலாம்…?
3.எந்நிலையில் அச்சக்தியின் அருளைப் பெற்று இம்மக்களுக்கு அருளிடலாம்…? என்று செயல்படுகிறார்கள்.

நம் போகரின் நிலை எல்லாம் அப்படி வந்தது தானப்பா…!