ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2024

குருவை நினைத்து நாம் தியானிக்கும் போது “குருவிற்கு அது தெரிந்து” நமக்கு ஆசி வழங்குகின்றார்

குருவை நினைத்து நாம் தியானிக்கும் போது “குருவிற்கு அது தெரிந்து” நமக்கு ஆசி வழங்குகின்றார்

 

பல நாள் தவம் இருந்து தியான நிலை என்றால் என்ன…? என்று தெரியாமலே பல தியான முறைகளை நாம் எல்லோருமே கையாளுகின்றோம்.
1.தியானத்தில் எப்படி அமர்வது…?
2.சுவாச நிலையை எப்படி ஒருநிலைப்படுத்துவது…?
3.தன்னை மறந்து அமரும் நிலை தான் தியான நிலை என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
4.தியானத்தில் அமர்ந்த பின் எண்ணத்தில் சிதறல்கள் வரும் பொழுதெல்லாம்
5.அந்த எண்ணத்திலேயே ஊன்றிடாமல் எப்படி இருப்பது…? என்ற எண்ணத்திலும் உள்ளார்கள் பலர்.

இப்படிப் பல நிலைகள் சொல்லி உள்ளதால் தனக்கு எது உகந்தது…? எதை எடுத்துக் கொள்ளலாம்…? என்ற எண்ணத்திலேயே இன்னும் பலர் இருக்கிறார்கள்.

வாழ்ந்திடும் காலம் எல்லாம்… வாழ்க்கை வாழ்ந்து விட்டு
1.தன் வயதான காலத்தில்தான் ஜெப நிலையில் இருக்க வேண்டும்…
2.என் மனம் இன்னும் ஒருநிலைப்படவில்லை…! என்றெல்லாம் இன்றையப் பெரியவர்கள் பலர் உள்ளார்கள்.

ஜெபம் என்றால் என்னப்பா…? ஜெபித்திடும் பொருள் என்னப்பா…?

என் (ஈஸ்வரபட்டர்) வழியில் ஜெபம் என்பதெல்லாம் நம் ஜெபத்துடனே கலந்து
1.நம் நினைவிலும்…
2.கனவிலும்…
3.எந்த நிலையிலும்..
4.எந்த நிலை எனும் பொழுது - நம் வாழ்க்கை நிலையிலும் நாம் செய்யும் வேலை நேரத்திலும்
5.நம்முடனே அந்த ஆண்டவன் உள்ளான் என்ற எண்ணத்தில்…
6.அதாவது அந்த எண்ணம் மட்டும் அல்ல… “இருக்கிறான்…!” என்ற எண்ணத்தில்
7.ஒரே நிலையில் நாம் எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதானப்பா நமக்குகந்த ஜெபம்.

பூஜை செய்வது… கோவிலுக்குச் செல்வது… இவை எல்லாம் நம் மனதை அமைதிப்படுத்த வேறு நிலையிலிருந்து நம் எண்ணத்தை அந்த ஆண்டவனையே நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்காகத்தான்…!

ஜெப நிலையில் நீங்கள் இருக்கும் பொழுது
1.உங்கள் எண்ணத்தை ஈர்க்கும் நிலை அந்தச் சித்தர்களின் நிலைக்கு வருகிறதப்பா..!
2.அந்நிலையில் அவர்களுடைய பரிபூரண ஆசிகளைப் பெறுகின்றீர்கள்.
3.ஜெப நிலையில் இருக்கும் பொழுது நாம் விடும் மூச்சும் நல் மூச்சாக வெளிப்படும்.
4.உயர்ந்த அணுக்களுடைய நிலைகள் நம்முடைய மூச்சிலும் கலக்கப்படுகிறது… நல்ல அணுக்களாகக் கிடைக்கப் பெறுகின்றது.
5.அந்நிலையில் சிறுகச் சிறுக நாம் ஈர்க்கும் மூச்சில் நம்முடைய உயிரில் அது சேர்க்கப்படுகின்றது.
6.அது சிறுகச் சிறுக அந்த உணர்வுகள் சேர்க்கப்பட்டவுடன் நம் உயிர் நிலை உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றது.
7.அந்நிலையில் உயர்ந்த சுவாச நிலைகளை அடிக்கடி அந்தச் சுவாச நிலையில் நம் உயிரணுவிற்கு உயிருக்குக் கிடைக்கப் பெறுகின்றது.

இந்நிலையில் அந்த உயிருக்கு நாம் பெற்ற சக்தி அந்த ஆத்மாவிற்கு ஊட்டமளித்திருப்பதனால் எந்தத் தீய அணுக்களும் தீய சொற்களும் நம்மை வந்து அணுகாது.

1.நம் சுவாச நிலையிலேயே நம் ஜெப நிலையில் இவ்வருளைப் பெற்றிருப்பதனால்
2.ஆயிரம் அணுகுண்டுகளைப் போட்டாலும் அதலபாதாளத்தில் நம்மை அடைத்து வைத்திருந்தாலும்
3.சுவாச நிலையில் நாம் இந்நிலை பெற்றிருக்கும் பொழுது எந்தத் தீய சக்திகளும் நம்மை வந்து தாக்கிடாது.

இந்த நிலை பெறத்தான் இந்தப் பாட நிலை எல்லாமே…!

ஒவ்வொருவரும் இதில் உள்ள உண்மையை உணர்ந்து உருவமில்லா ஆண்டவனை எண்ணிக் கொண்டே பல கோடி ஜெபங்களை ஜெபித்துப் பல மந்திரங்களைச் சொல்லி கால நிலையைக் கடத்திடாமல்
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று புருவ மத்தியில் உயிரான ஈசனை எண்ணி
2.விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தியானத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.
3.எண்ணத்திலும் செயலிலும் உண்மை நிலையைக் கடைப்பிடியுங்கள்
4.காலத்துடன் கலந்திடுங்கள் கூட்டு நிலையில் கூடித் தியானியுங்கள்.
5.தன் வழிக்கு தெரிந்த உண்மைகளை உன்னத உண்மைகளைப் பிறருக்கு நல்வழி புகட்டித் தியான நிலைக்கு அழைத்திடுங்கள்.
6.நாம் ஜெபிப்பதின் பொருளை உணர்ந்து அச்சக்தியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

அவ்வீஸ்வர சக்தியின் அருளை மாலையில் குறிப்பிடப்பட்ட காலநிலையில் அமர்ந்து தியானம் இருங்கள் என்பதைப் பலர் பல நிலையில் எடுத்துக் கொண்டு இதில் எல்லாம் ஏதோ சித்து வேலைகள் உள்ளன என்ற சில பல எண்ணங்களை எண்ணிக் கொள்கிறார்கள்.

வாழ்க்கை நிலையில் அன்றைய நம் செயல்களை எல்லாம் முடித்துவிட்டு நாம் அமர்வதற்கு அதுதான் உகந்த நேரம். நம் சுவாச நிலைக்கு ஏற்ற நேரமும் அதுதான்.

நாம் ஜெபிக்கும் பொழுது நாம் எண்ணிடும் சித்தர்களின் நிலையில் இருந்து… சித்தர்களின் நிலை மட்டுமல்ல… தியான நிலையில் உள்ள எல்லோருக்குமே நாம் ஒருவரை ஒருவர் எண்ணித் தியானிக்கும் பொழுது அவர்கள் நமக்காக ஜெபித்திட முடியுமப்பா.

ஜெப நிலை ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது நமக்கு குரு வேண்டுமல்லவா. குருவின் நிலையை நாம் எங்கிருந்து தியானம் இருந்தாலும் அவரின் நிலையிலிருந்து நாம் ஆசி பெறத் தான் இந்த நிலை.

எப்படி நாம் நம் வீட்டில் இருக்கும் பொழுது விக்கல் எடுத்திட்டால் யாரோ நம்மை எண்ணுகிறார்கள் என்று எண்ணுகின்றோம். எண்ணுபவர்கள் நினைத்திட்டால் இருவரும் ஒரே நிலையில் எண்ணும் பொழுது அந்த விக்கல் நின்று விடுகின்றது என்கிறோம்.

அதே போல் தான் தியான நிலையிலும் நாம் நினைத்து தியானிக்கும் பொழுது
1.நாம் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்நிலை உடனே அவர்களுக்குத் தெரிந்து
2.அவர்களின் ஆசியை நாம் பெறுகின்றோம்.

ஆகவே இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவரும் தியான நிலையில் இருந்திடுங்கள். ஓம் ஈஸ்வரா என்ற ஒரே நிலையில் சுவாச நிலையை எடுத்து நீங்கள் தியானிக்கும் பொழுது உங்கள் ஜெபத்திற்கு உயர்ந்த சக்திகள் கிடைக்கும்

1.தியானத்தில் இருக்கும் பொழுது உங்கள் ஜெபத்தில் பல நறுமணங்கள் கூடும்
2.உங்கள் தியானத்திற்கு அருளை அளித்திடுவார் அவ்வீஸ்வரர்.

நாம் நம் ஆத்மாவிற்கு நல்ல மணங்களை அளித்துத்தான் ஊட்ட நிலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.