ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 28, 2024

சகல தேவர்களுடனும் ஐக்கியப்படுங்களப்பா…!

சகல தேவர்களுடனும் ஐக்கியப்படுங்களப்பா…!

 

சமமான நிலை நிலைக்க வாழும் வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள். சமமான நிலையின் வாழ்க்கை ஏன் நமக்கு ஆண்டவன் அருளவில்லை…? என்று எண்ணி வாழ்ந்திடாமல்
1.நாம் இப்புவியில் இப்புண்ணிய பூமியில் அச்சக்தியின் அருள் பெற்று
2.நமக்குத் தந்த இச்சந்தர்ப்பங்கள் எல்லாம் நம் நிலையை நாம் சமமாக்கி வாழ்ந்திடலாம்
3.சகல தேவரையும் கண்டிடலாம் என்ற பேராவலுடன் நாம் செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு பிறவியிலும் அடுத்த பிறவியிலாவது நம் வாழ்க்கையைச் சமமாக்கி நல் நிலை பெறலாம் என்று இருந்தாலும்… பிறவி எடுத்து நிறைவு பெற்ற சமமான வாழ்க்கையை எடுத்திட முடியாமல் தான் “இன்று இவ்வுலகில் உள்ள பாமரர்களின் வாழ்க்கை உள்ளது…”

பிறவி எடுத்த நாளிலேயே ஏழு பிறவிக்கு நம் ஆத்மாவை அலைய விட்டிடாமல்
1.“ஒரே பிறவியிலேயே தன் நிலை உணர்ந்து… சமமான நிலை எய்தி”
2.சகல தேவனாக சூட்சும உலகத்திற்குச் சென்று கற்றுணர்ந்த ஞானிகளும்
3.தன் நிலையைத் தெய்வமாக்கி வாழ்ந்தவர்களும் இன்றும் தெய்வமாக உள்ளார்கள்.

நாம் எடுத்துள்ளோம் இப்படிப் பல பிறவிகளை. இந்தப் பிறவிலும் நிறைவு இல்லாமலே வாழ்கின்றோம்.

சமமான நிலை நிலைக்க அவ்ஆண்டவனின் அருள் கிட்ட நம்முள் இருக்கும் ஆண்டவனைப் புரிந்து கொண்டால் தான் “நான்” என்ற நிலையை “நம்மை ஈசன் இயக்குகின்றான்…!” என்ற உண்மையை உணர்ந்து
1.இவ்வுலக வாழ்க்கையிலே சலிப்பும் சங்கடமும் மேற்கொள்ளாமல்
2.நம்மை நாம் சமமாக நிலைப்படுத்தி வாழ்ந்திடும் வாழ்க்கை தான்
3.அச்சகல தேவர்களுடன் நாமும் ஒருவராக வாழப் போகிறோம் எனும் நிலையை எய்திட முடியும்.

சகல தேவர்கள் யார்…? என்ற கேள்விக்குறி எழுந்திட முடியும்…!

ஈசன் ஒருவன் தான் சகலத்திலும் கலந்துள்ளவன். அவ்ஈசன் தான் என்னும் பொழுது சகல தேவர்கள் என்று பிரித்துக் கூறும் நிலையில் உள்ளவர்கள் யார்…? என்று நம் மனதிற்கு விடை காண எண்ணிடலாம்.

சகல ரூபங்கள் கொண்டு ஒவ்வொரு ரூபத்தின் வடிவினிலும் எண்ணி ஏங்குபவர்களுக்கு ஆண்டவனாக வந்து அருள் புரியும் அந்த ஞான நிலை பெற்ற “சித்தர்களும் ரிஷிகளும் தானப்பா அச்சகல தேவர்கள்…”

அன்று ஆண்ட அரசர்களின் பலர் அன்றே “நான்” என்ற மமதையை… அரசை ஆண்டு கொண்டு இருந்தாலும் நான் என்றால் யார்…? என்பதைப் புரிந்து கொண்டு அன்றே அவ்வரசர்கள் தன் நிலையைச் சமமான நிலை நிலைக்கக் கடும் தவம் இருந்து சகல வித்தைகளையும் பெற்று… அச்சூட்சம நிலை கொண்டு வாழும் நிலையை அறிந்து வாழ்ந்தார்கள்.

நாம் இன்று நம் குழந்தைகளுக்கும் நாமே கேட்பதற்கும் பல நூல்களின் வாயிலாக அன்று ஆண்ட விக்கிரமாதித்த மகாராஜாவின் கதைகளைப் பல கோணங்களில் பல ரூபத்தில் அறிவுக்கு உகந்த வழியில் கேட்டும் படித்தும் வருகின்றோம்.

அன்று ஆண்ட அந்த விக்கிரமாதித்தன் எந்த அரச சபையில் ஆண்டானோ அதே நிலையில் தான் இன்றும் அவ்வுடலுடனே பல மாயாஜாலங்களை இன்று வாழும் மனிதர்களின் மமதையைப் போக்க பல ரூபங்கள் எடுத்து உணர்த்திக் கொண்டும்… பல நன்மைகளைச் செய்து கொண்டும்… இன்றும் அவ்வுடலுடனே சித்தி பெற்ற நிலையில் சூட்சம உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளான்.

அன்று அரசாளும் நிலையிலேயே தன் நிலையைச் சமமான நிலை நிறுத்திச் சகல நிலையையும் தானே உணர்ந்து ஏற்கும் சக்தி பெற்ற நிலையைத் தான் ஏற்றுக் கொண்டான் கடும் தவமிருந்து.

அவன் தவத்தைக் கலைக்கத்தான் அவ் வேதாளம் என்னும் பேய் இவனைத் தூங்கவிடாமல் இவனுக்குப் பல கதைகள் சொன்னதாக ஆயிரத்து ஒரு கதைகள் ஆயிரத்து ஒரு இரவு சொன்னதாகச் சொல்வதெல்லாம் என்னப்பா…?

வேதாளமா வந்து கதை சொன்னது…? வேதாளம் என்னும் உருவத்தில் வந்து கதை புகட்டியவர் வேதாள முனிவரப்பா. வேதத்தையே ஆளும் அம்முனிவர் விக்கிரமாதித்த ராஜாவின் நிலை அறிந்து அவரின் நிலை எத்தன்மையில் அச்சக்தியின் அருளை ஈர்க்கிறது என்று சகல நிலையை அறிந்து தான் விக்கிரமாதித்த ராஜாவுக்கு வேதாள முனிவர் பல கதைகளைச் சொல்லி அவர் மனதில் இருந்து விடை காண ஒவ்வொரு இரவும் அவரைத் தூங்க விடாமல் அக்கதை என்ற ரூபத்தில் பல உண்மை உள்ள கதைகளை எல்லாமே உணர்த்தி அவரின் நிலையை வேதாள மாமுனிவரின் ஆசியால் சகல நிலையையும் அறிந்து சமமான நிலை நிலைத்திடும் பக்குவத்தைப் பெற்றாரப்பா அந்த விக்கிரமாதித்த மகாராஜா.

அன்று அரசாண்ட அந்த ராஜாவிற்கு இந்த நிலைகளை எல்லாம் பெற்றுத்தான் தன் நிலையைச் சமமாக்கி வாழ்ந்திடும் நிலையைப் பெற்று வாழ்ந்திட முடிந்ததப்பா.

இவ்வுலகில் நாம் மனிதர்கள் மிருகங்கள் மட்டும் வாழவில்லை.
1.நம்மைச் சுற்றிப் பல கோடி ஆன்மாக்கள் உடலில்லாமல் ஆத்மாவுடன் இவ்வுலகில் நடக்கும் நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்டு
2.தன் நிலைகளுக்கு ஏற்ப உடல்களையும்… தான் தன் ஆன்மா வந்து பிறந்து வாழ்ந்திடும் நிலைக்காகவும்…
3.எவ்உடலில் ஏறினால் அவ் உடலின் மூலமாகத் தான் விட்டுச் சென்ற தன் எண்ணத்தை
4.நன்மையையோ துவேஷத்தையோ பூர்த்தி செய்து கொண்டிட முடியும் என்ற நிலை கொண்டும்
5.இப்படித் தன் நிலையை ஈடேற்றிக் கொள்ள இன்று ஆத்மாவுடன் வாழும் மனிதர்கள் நிலையுடனே
6.உடலில்லா ஆத்மாக்கள் பல கோடி கோடியாகத் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளச் சுற்றிக் கொண்டே உள்ளன.

நாம் நினைக்கின்றோம் நம் எண்ணம் நம் உடல் நம் ஆத்மா என்று. நம் உடலில் நாம் மட்டும் வாழவில்லையப்பா…!
1.நம் மன நிலை எந்தெந்த நிலை கொண்டு மாறுகிறதோ அந்தந்த நிலை கொண்ட ஆவி அணுக்கள்
2.நம் உடலில் எந்தத் திசையிலும் ஏறிக்கொண்டு நம்மையே ஆட்டிப் படைத்து நம்மை ஆண்டு வாழ்ந்து
3.தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள நம் உடலை ஒரு கூண்டாக தான் குடியிருக்கும் கூண்டாக வைத்து ஆண்டு வாழ்கிறது.

நாம் எண்ணுவதைப் போல் நாம் மட்டும் வாழவில்லை. நம் நிலையை மாற்றிக் கொண்டால்… நம் நிலையில் இருந்து வாழ்ந்திடப் “பல அணுக்கள் நம்மைச் சுற்றிக்கொண்டு தான் உள்ளன…” என்று உணர்ந்து
1.நம்முள் அவ் ஆண்டவன் சக்தி ஒன்றைத்தான் ஈர்த்து வாழ்ந்திட முடியும் என்ற உண்மையை உணர்ந்து
2.பல ஆவி உலக அணுக்களுக்கு நாம் அடிமையாகாமல் இவ்வுலக வாழ்க்கையில் பெற்ற சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையுமே நழுவ விட்டு
3.இக்கடைசி நிலை கொண்ட உடலுக்கு நாம் நம் உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி
4.”அச்சகல தேவர்களுடன் ஐக்கியப்படுத்துவது ஒன்றுதான்… இப்பாட நிலையில் உணர்த்திடும் உத்தம நிலையப்பா…”