ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2024

ஆண்டவன் என்பவன் யார்…?

ஆண்டவன் என்பவன் யார்…?

 

1.நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் புலப்படாத
2.இப்புவியிலும் மற்ற எல்லா நிலைகளிலும் கலந்துள்ள சக்தியை
3.யாரும் எந்த நிலையிலும் முழு உருவம் கொடுத்து ஆண்டவன் என்னும் நிலைப்படுத்திச் சொல்லிடும் நிலையில் ஆண்டவன் எங்குள்ளான்…?
4.ஆண்டவனின் நிலையையே பல மதங்களாக்கிப் பல ரூபங்கள் தந்து “அவரவர்கள் வழிக்கு வணங்குகிறார்கள்…”

இவ்வுலகில் உதித்த எல்லாமே அச்சக்தியின் அருள் பெற்ற ஆண்டவன் தான்.

இங்கு ஆண்டவனை வணங்கும் முறையே பல உருவங்களை ஆண்டவனுக்கு அளித்து உருவ ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல அபிஷேகங்கள் செய்து… பொருள் உள்ளவர்கள் மட்டும்தான் ஆண்டவனின் அருளைப் பெற முடியும் என்ற முறையையும் ஏற்படுத்தி…
1.ஆண்டவனின் சக்தியை வணங்கவே பல பல வழிகளை
2.சாஸ்திரங்களின் பெயரால் புரியாத நிலைப்படுத்தி வணங்குகிறார்கள்.

ஏசுபிரானை வணங்கும் நாட்டிலே இயேசு பிறந்தார். பிறக்கும் பொழுதே வானமண்டலத்தில் பல கோடி நட்சத்திரங்கள் தோன்றின. அவ் ஆண்டவனே தான் வந்து அவதரித்தார் என்ற நிலையில் ஆண்டவனே வந்து பிறந்ததாகப் போதிக்கின்றார்கள்.

உலகில் உள்ள எல்லா உயிரணுக்களும் ஆண்டவன் தான். அவ் ஆண்டவனின் சக்தியில் இருந்து பிறந்தவர்தான் அவ் இயேசு பிரானும். நம்மைப் போல் ஒருவராகத் தான் வந்து பிறந்து வளர்ந்தார்.

ஒவ்வொருவரும் அவர் எடுக்கும் சுவாச நிலையும் எண்ண நிலையும் கொண்டு ஆண்டவனாகலாம்.
1.எல்லோருமே ஆண்டவன் தான்…!
2.எண்ணத்தினால் தான் நாம் ஆண்டவனாகவும் பேயாகவும் உலவி வருகிறோம்.

இயேசுபிரான் எப்படி ஆண்டவன் அருள் பெற்றார்…? என்ற உண்மையினை நாம் எண்ணிப் போற்றி வணங்கிடல் வேண்டும்.

சாதாரண ஆட்டிடையனாகத் தான் அவரும் வளரும் காலத்தில் வளர்ந்தார். குழந்தை நிலையிலேயே அவரது நிலை எல்லா உயிரினங்களிடத்திலும் அன்பைப் பூண்டு அகிம்சையைக் கொண்டு அன்புடனே பழகி வந்தார்.

அன்பையே தெய்வமாக எண்ணி வாழ்ந்தார். அந்த நிலையில் எப்படி அவர் அன்பு காட்டி வாழ்ந்தாரோ அந்த நிலை கொண்டு அச்சக்தியின் நிலையினால் அவரின் நிலையில் அவருக்கு முன் தோன்றிய “ஒரு மாபெரும் முனிவர்” அவரின் நிலையில் தோன்றி… அவரின் நிலையில் தோன்றி என்பது ரிஷிகள் முனிவர்களின் நிலையைத்தான் முதலிலேயே பாடத்தில் சொல்லி உள்ளேன்.

அந்நிலை கொண்டு இவர் சிறு வயது முதற்கொண்டே அன்பு கொண்டு வாழ்ந்த நிலையில்…
1.அம் முனிவரின் சக்தி இவர் உடலில் செயல்பட வந்து இவர் உடலில் சேர்ந்து இவர் உடலிலேயே இருந்து கொண்டு
2.இவ்வுலக மக்களுக்கு இயேசுவின் வாயிலாக பல உன்னதக் கருத்துக்களை மக்களுக்குப் போதித்தும்
3.பல வைத்திய முறைகளை அளித்தும் மக்களுக்கு பல நன்மைகளை எல்லாம் செய்தும் காட்டினார்.

இயேசு பிரானின் ஒரே எண்ணம் அவ்அன்பே தெய்வம் என்ற எண்ணம் தான். மக்களுக்கு நல்வழி புகட்டி… செய்த பாவங்களை மறந்து நல்ல நிலைக்கு வருவதற்காகப் பாவங்களை மறந்து விட்டு “இனி வாழும் நாட்களில் நன்மையுடன் வாழ வேண்டும்” என்பதற்காகப் பல நல்ல உபதேசங்களை எடுத்துரைத்தார்.

இப்படி அவர் நல்வழி நடத்திச் செல்லும் பொழுது மக்களின் நிலை எல்லாம் அவர் நிலையை உணர்ந்து அவரையே ஆண்டவனாக வணங்கி அவர் நிலைக்கு வரும் நிலை வந்தது.

அப்பொழுது அன்று அங்கு ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களின் நிலையில் தன் நிலைக்குப் பணியாமல் “ஆண்டவன் ரூபத்தில் மக்கள் அங்கு செல்வதைப் பார்த்து” அவ் இயேசு பிரானுக்குப் பல இன்னல்களையும் பல கஷ்டங்களையும் தந்து… பல கொடுமைகளை எல்லாம்படுத்தி அவரை அழிக்கின்றேன் என்று அவர் உடலை அழித்தார்கள்.

இவர்கள் மூன்று நாட்கள் கல்லறையில் உடலை வைத்துப் பார்த்ததின் நிலை என்ன…?

இயேசுபிரான் தான் அம் மாபெரும் முனிவரின் அருளைப் பெற்று அழியாச் செல்வமுடன் அனைத்து உலகத்திலும் என்றும் வாழும் சூட்சும நிலையில் வாழும் பாக்கியம் பெற்றவர் ஆயிற்றே.

அவர் உடலை இவர்கள் அழித்தால் மூன்று நாட்கள் என்ன 3000 ஆண்டுகள் என்ன…? இம்மூவுலகத்திலுமே கலந்துள்ள உத்தம நிலை பெற்றவரை அவர் உடலை அழித்தால் அவரையே அழித்த நிலையாக எண்ணி… அன்று ஆண்ட ஆட்சியாளர்கள் பல நிலைகளைச் செய்தார்கள்.

அவர் உடலை அழித்த பிறகு தன் நிலைக்குச் சாதகமாக அவரின் நிலையை வைத்தே பிறகு பல ஆண்டுகள் ஆண்டார்கள்.

செய்த பாவங்களுக்கெல்லாம் அவர்கள் சாமியார்கள் என்ற நிலையில் வைத்திருப்பவர்களிடம் பொருள் தந்து… நம் பாவங்களை எல்லாம் அவர்களிடம் சொல்லிவிட்டால் அவர்கள் ஆண்டவனிடம் நமக்குப் பாவ விமோசனம் வாங்கி பாவத்தை நாம் கழித்திட நமக்கு நல்லாசி வாங்கித் தருகிறார்களாம்.

தினசரி நாம் செய்யும் பாவங்களைக் கழித்திட நமக்கு ஒரு தூதுவனாம். எப்படி இருக்கிறது ஆண்டவனின் நிலை…?
1.”ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்டவன் உள்ளான்” என்ற உண்மை நிலையைப் போதிக்கவோ
2.அவ் இயேசுபிரானின் உண்மை அறிந்து செயல்படவோ இன்றைய மனிதர்களுக்குக் காலமும் நேரமும் இல்லை.

செயற்கையுடன் கலந்துவிட்ட செயற்கையான மனிதர்கள் இயற்கையின் சக்தியை எண்ணுவதற்கே நேரமில்லை. இவர்கள் எண்ணி வாழ்வதற்குள் இவர்களுக்குக் காலமும் இல்லை. காலத்தையே விரயம் பண்ணாமல் செயற்கையுடன் செயல்படுகின்றார்களாம்.

இவ் இயற்கையின் சக்தியை ஒவ்வொருவரும் புரிந்து அன்றைய உலகில் எப்படிப் பல சித்தர்கள் ஞானிகள் ஆண்டவன் நிலை பெற்றுச் சூட்சும உலகத்தில் செயல்படுகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவருமே ஆண்டவனின் நிலை கொண்டு வாழலாம் என்ற நிலையில் வாழ்ந்திட வேண்டுமப்பா.
1.எல்லாமே ஆண்டவனின் சக்தி தான்
2.அந்த ஆண்டவனின் சக்தியைத்தான் நாம் இன்று சிதறவிட்டு வாழுகின்றோம்.