ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 27, 2024

அன்பெனும் பொக்கிஷத்தை உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து வாழ்ந்திடுங்கள்

அன்பெனும் பொக்கிஷத்தை உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து வாழ்ந்திடுங்கள்

 

சக்தியின் அருளில் சக்தி பெற்ற சகல ஜீவராசிகளும் ஜீவன் பெறும் நிலையில் ஒரே நிலையில் தான் ஜீவன் மறுபிறப்பு எடுத்து அப்பிறப்பில் நிறைவு பெற்றிட வேண்டும் என்ற நிலையில் தான் பிறப்பெடுகின்றன… நல்ல ஜீவன்கள் எல்லாம்.
1.நல்ல ஜீவன்கள் எல்லாம் தாம் பிறவி எடுத்ததின் குறிக்கோள்…
2.தான் பிறப்பு எடுத்து அடுத்த பிறப்பு இல்லாத நிலையில் எடுக்கும் பிறப்பில் வாழ்ந்திட வேண்டுமென்ற ஆர்வம் கொண்டு பிறக்கின்றன.

ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கு வேண்டிய ஒரே ஆசையான அன்பு எனும் ஆசையைத்தான் நாடி ஏங்கி வாழ்கிறது.

எல்லா ஆத்மாக்களுமே அன்பை வேண்டித்தான் இவ்உடலுடனே வாழ்கின்றன. அவ் அன்பிற்காகத் தான் அவ்அன்பெனும் நிலை கிடைக்காத நிலையில்
1.எண்ணும் மனம் என்றும் நிறைவைப் பெற்றிடாமல்… பல தவறுகளும் பல இன்னல்களும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வந்து
2.அம்மனமென்னும் அன்பு கொண்ட ஒரே லோகத்தைப் பல லோகங்கள் ஆக்கி வாழ்ந்திடுகின்றார்கள் மனிதர்கள்.

பரலோகம் எமலோகம் நரகலோகம் பூலோகம் இப்படி பல லோகங்களைச் சொல்லும் லோகங்கள் எல்லாம் எந்த லோகங்களப்பா…?

மனம் என்னும் அன்பு லோகத்தை அவ் அன்பையே ஏங்கி அன்புக்காக வாழும் அவ்ஆத்ம லோகத்திற்கு நம்மைச் சுற்றியுள்ள பல லோகங்களைத் தான் நாம் அழிக்கின்றோம்.

அன்பு ஒன்றினால் மட்டுமே இவ்வுலகத்தை உன்னதமாக ஆக்கிட முடியுமப்பா. எந்த நிலை கொண்டும் இன்று இக்கலியின் நிலை கொண்டு
1.பல இன்னல்களுடன் வாழ்ந்திடும் இம்மனமென்னும் ஆத்மாவிற்கு
2.அன்பெனும் பொக்கிஷத்தை உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து வாழ்ந்திடுங்கள்.

அன்பினால் நாம் பல நிலைகளை நம் உடலுக்கும் நம் மனதிற்கும் கொடுக்கப்படும் போது… “நம் ஆத்மா பூத்தொளிர் பெற்று வாழ்கிறது” என்ற உண்மையை அறிந்து ஒவ்வொருவரும் அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள்.

ஆண்டவனை வணங்கிடும் முறையை நமக்கு நம் முன்னோர்கள் உணர்த்தியது என்ன…?

1.நம் மனம் என்ற பல சஞ்சலக் கூடு நிறைந்த இம்மனத்தை
2.அன்பு என்னும் நிலையில்தான் அவ்ஆத்மாவை அமைதிப்படுத்திட முடியும் என்பதற்காகத் தான் ஆண்டவன் என்னும் ரூபத்தை ஏற்படுத்தி
3.அவ்ஆண்டவனைப் பல ரூபத்தில் எண்ணி மகிழ்ந்து
4.நம் மனம் என்னும் நிலையைச் சஞ்சல நிலையிலிருந்து மீட்டிட
5.ஆண்டவன் என்னும் அன்பு ரூபத்தை நாம் அன்பு கொண்டு வணங்கிட நம் முன்னோர்கள் வழிகாட்டி வந்தார்கள்.

ஆண்டவன் என்னும் ரூபத்தில் நம் அன்பை எதில் மட்டும் செலுத்தி வணங்கிடலாம்…?

அன்பு கொண்டு நாம் வணங்குவது எல்லாமே ஆண்டவன் தான். எல்லா உயிரினங்களிலுமே அவ ஆண்டவன் உள்ளான்.

உன் அன்பை உயிரினங்கள் மட்டுமல்ல…
1.இவ்வானமும் பூமியும் மரம் செடி கொடிகள் மழை காற்று சூரியன் சந்திரன், நட்சத்திர மண்டலங்கள் இப்படி எந்நிலைகொண்டும்
2.உன் மனம் எனும் அன்பைச் செலுத்தி எண்ணி வணங்கிட்டாலே
3.எந்த ரூபத்திலும் உன் உயிராத்மாவிற்கு நீ சேர்க்கும் உன்னதப் பொக்கிஷம் கிட்டுகின்றது.

அவ்அன்பினால் மட்டும் தான் இவ் உயிராத்மாவிற்குக் குளிர்ந்த நிலையை நாம் அளிக்க முடியும்.

இவ் உடல் முழுவதுமே ஒருநிலை கொண்ட வெப்பத்துடன் தான் உள்ளது. ஆனால் இவ் உடலில் உள்ள நம் உயிரணு ஒன்று மட்டும் தான் குளிர்ந்த நிலையில் உள்ளது.

மனம் என்னும் நிலையை நாம் அமைதிப்படுத்தி அன்புடன் வாழும் பொழுது அவ் உயிராத்மா ஒரே நிலை கொண்டு அமைதியுடன் அன்பு கொண்ட நிலையில் ஆனந்த நிலையில் உள்ளது.

ஆனால்
1.இம்மனம் என்னும் நிலையை நாம் பல நிலை கொண்டு அலையவிடும் பொழுது
2.இவ் உடல் நிலையில் அதி உஷ்ண நிலை ஏற்பட்டு
3.உயிராத்மாவிற்குப் தீங்குகளைத் தான் நம்மால் சேர்த்திட முடிகின்றது.

நம்மில் பல பெரியோர் இவ்வன்பையே பல வழிகளில் நமக்கு உணர்த்திட அன்றிலிருந்து இன்று வரை போதித்துச் சென்றார்கள்.
1.அன்பிலார்க்கு இவ்வுலகமே இல்லை என்ற உண்மையை உணர்த்திச் சென்றார்கள்
2.அன்பே தான் கடவுள் என்றார்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் மனிதர்களின் நிலையில் ஒரே குறிக்கோள் “தான் செல்வந்தனாகச் செழித்து வாழ்ந்திட வேண்டும்” என்ற குறிக்கோள்தான்.

அந்த நிலைக்காகத் தன்னைத்தானே தன் இனத்தை துவேஷிக்கும் நிலையில் மனிதன் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். அன்பிற்கு மேல் துவேஷத்தினால் தான் இன்று உலகமே உள்ளது. இந்நிலையில் இவ்வுலகில் கலந்துள்ள இக்காற்று மண்டலமே விஷமுடன் உள்ளது.

இனி வாழ்ந்திடும் வாழ்நாட்களை வீண் விரயம் செய்திடாமல்…
1.அன்பு கொண்ட வாழ் நாட்களாக வாழ்ந்து
2.அன்பு என்னும் பொக்கிஷத்தை ஆண்டு வாழ்ந்திடுங்கள் அன்புடனே.