ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2024

வடக்கில் தான் சொர்க்கமடைகின்றோம்

வடக்கில் தான் சொர்க்கமடைகின்றோம்

 

பள்ளியில் பாடம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பாசம் கொண்டு சினேகித சினேகிதிகளாகப் பழகி இருப்பார்கள்.

இருந்தாலும்… கல்வியில் சீர்பட வில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை தனக்குள் பெற்ற பின் அவர்கள் ஒருவருக்கொருவர் பழகிய உணர்வு கொண்டு
1.காசைச் செலவழிக்கின்றேன் மற்றவர்களைப் போன்று படிக்காதபடி நீ மக்காக இருக்கின்றாயே என்ற நிலை வருவதும்
2.சிந்திக்கும் திறன் இல்லை என்றால் மற்றவர்கள் இணைத்துப் பார்த்து தன்னையே தான் வெறுக்கும் நிலையும் வருகின்றது.

காரணம் குடும்பத்தில் ஒரு சில நேரங்களில் பணத்திற்காக அவஸ்தைப்படுவார்கள். அந்த மாணவி அல்லது மாணவன் இந்த உணர்வைத் தன் மனதில் எடுத்துக் கொண்டால்
1.அந்த வேதனை உணர்வு கலந்த பின்
2.பள்ளியில் சென்று பாடத்தைப் படித்தாலும்
3.அங்கே சொல்லிக் கொடுப்பதைப் பதிவாக்கிச் சிந்தித்து “மீண்டும் நினைவாக்குவது என்பது” கடினமாகி விடுகின்றது.

அதே சமயத்தில் பள்ளியிலே பிறர் குறும்புத்தனம் செய்வோரையோ தவறு செய்வதையோ உற்றுப் பார்த்தால் அந்த வலிமையான உணர்வுகள் இங்கே அணுவாகி விடுகிறது.

அந்த அணு தன் இரைக்காக உணர்ச்சிகளைத் தூண்டும் போது அதையே நுகரப்படும் பொழுது இந்த உணர்வின் வலிமை பெற்ற பின் பாட நிலைகளில் சரியானபடி படித்தாலும்… குறும்புத்தனம் செய்யும் உணர்வு கலந்து அது திரை மறைவாக்கிவிடும். இதுதான் சித்திரை (சிறு திரை) என்பது.

சந்தர்ப்பத்தினால் ஒரு தீமையான உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின்
1.நல்ல ஒழுக்கத்தின் தன்மையை அந்த உணர்வுகள் மறைத்து விடுகின்றது
2.படிப்பைப் பற்றிய நினைவாற்றல்கள் வருவதில்லை.

ஏனென்றால் பாலிலே ஜீனியை போட்டு காஃபியைப் போடும் பொழுது ருசியாக இருக்கின்றது. ஆனால் சிறிது காரத்தை இணைத்து விட்டால் சுவை வருகின்றதோ…? இல்லை.

இதைப் போன்று தான் குழந்தைகள் விளையாடும் பொழுது ஒருவருக்கொருவர் குறும்புத்தனமான செயல்களைச் செய்யும் பொழுது அந்த உணர்வுகள் கலந்து விட்டால் நினைவுகள் அதிலே வலிமையாகச் சென்று விடுகின்றது.

பின் அவர் படிக்கும் பாடங்களை உற்றுப் பார்த்தால் அவருடைய நினைவாற்றல் இங்கே வருவதில்லை ஆகவே அறியாது இவ்வாறு பார்த்துணர்ந்த கேட்டுணர்ந்த தீமைகள் இவன் அறிவின் தன்மையை சித்திரையாக “சிறு திரையாக” மறைத்து விடுகின்றது.

இதை போன்ற நிலைகளை மாற்றுவதற்கு யாம் சொல்லிக் கொடுக்கும் தியானத்தின் மூலம்
1.அருள் ஞானிகள் உணர்வு கொண்டு இருளைப் போக்கிப் பொருளைக் காண முடியும்
2.இந்தத் தியானம் அதற்கு உதவும்.

ஏனென்றால் மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ நாம் பார்த்தால் அடுத்த கணமே… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி நம் நல்ல குணத்தை மறைத்திருக்கும் அந்தச் சிறு திரைகளை நீக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இதைப் போல் நீக்கி வந்தால் நம் உடலுக்குள் இருக்கும் அறிவுகள் அனைத்தும் மெய் ஒளியைப் பெறும் தன்மையாக நமக்குள் வளர்ச்சி பெறும்… பூரண நிலவாக மாறுகின்றது.

என்றும் ஒளியின் சரீரமாக பெற்று பேரின்ப பெருவாழ்வு வாழும் தன்மை பெறுகின்றது. மனித வாழ்க்கையில் நாம் இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ உடல்களில்
1.தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வைப் பெற்றோம்
2.உயிரின் துணை கொண்டு தான் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்
3.இதிலிருந்து நாம் அடுத்து எந்த நிலையை பெற வேண்டும் என்பதைத்தான் நமது சாஸ்திரங்கள் காட்டுகின்றது

அதனைக் காட்டுவதற்குத் தான் ஆலயங்களில் சொர்க்க வாசலைக் காட்டுகின்றார்கள். உடலை விட்டுப் பிரிந்த பின் பிறவியில்லா நிலை அடைவது தான் கடைசி எல்லை

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள் “வைகுண்ட ஏகாதசி…!” அன்றைய தினம் சொர்க்கவாசலைத் திறப்பதாகக் காட்டுவார்கள்… அதிகாலையில் திறப்பார்கள்.

வழக்கமாக நேர் வாசலில் சென்றால் அன்றைய தினம் வடக்கு வாசலைத்தான் திறப்பார்கள்.
1.காரணம் நாம் வடக்கில் தான் சொர்க்கமடைகின்றோம் என்பதனை அவ்வாறு காட்டுகின்றார்கள்
2.வடக்கில் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் சுழன்று கொண்டுள்ளது
3.அந்த ஈர்ப்பு வட்டத்தில் இணைய வேண்டும் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.