ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2024

ஒவ்வொரு நேரத்திலும் ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறைகள்

ஒவ்வொரு நேரத்திலும் ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறைகள்

 

படுக்கைக்கு முன்பாக;-
1.இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
2.உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் அருளாற்றலை வலுவேற்றிச் செருகேற்றிக் கொள்ளுங்கள்.

அதன் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் மன பலம் பெறவும் உடல் நலம் பெறவும் தொழில் வளம் பெருகவும் இதன் வழி உங்களை அறியாது சேர்ந்த தீமைகளீலிருந்து விடுபடவும் மன மகிழ்ச்சி பெறவும் இது உதவும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.இரவு படுக்கைக்குச் செல்லும் போதெல்லாம் கண்களை மூடி நூறு முறை இவ்வாறு சொல்லுங்கள்.
2.வெறுமனே வாயால் புற நிலையில் சொல்லக் கூடாது
3.அகநிலைகளுக்கு உங்கள் உடலுக்குள் நினைவினைச் செலுத்தி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடல் முழுவதும் நினைவினைச் செலுத்துங்கள். உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப வரிசைப்படுத்தி
2.உங்கள் நினைவினை “அலை அலையாக” உடலுக்குள் செலுத்துங்கள்.

குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ;-
உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வீடு முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது உணர்வுகளிலும் கலந்து எங்களை அறியாத சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் அகன்று துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் மன பலத்துடன் மன வளத்துடன் தொழில் வளத்துடன் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று 10 முறை இவ்வாறு நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

எங்கள் குடும்பம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்து துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் அகன்று குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று இதைப் ;போல் ஒரு பத்து முறை “குடும்பத்திற்குள் ஒற்றுமை வளர வேண்டும்” என்று எண்ணி ஏங்குங்கள்.

பகைமைகள் அகல:-
சகோதர சகோதரிக்குள் கலக்கம் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சகோதர சகோதரிகள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் மன பலம் மன வளம் பெற வேண்டும்.

குடும்பத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழும் அந்த மன பலம் பெற வேண்டும். எங்களை அறியாது சேர்ந்த கலக்கங்கள் நீங்கி குடும்பத்தில் பற்றும் பாசமும் வளர்ந்திடும் அச்சக்தி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.
1.உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பகைமை இருப்பினும்
2.அதை நீங்கள் உங்கள் நினைவில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

சகோதர சகோதரிகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி விட்டு என்னைப் பார்க்கும் போதெல்லாம் அன்பும் பரிவும் பாசமும் அவர்களுக்குள் ஏற்பட வேண்டும் எங்கள் பார்வையில் அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் பாசப்பிணைப்புடன் நாங்கள் ஒன்றி வாழ்ந்திட வேண்டும் என்று இந்த நிலையை நீங்கள் நினைவில் கொண்டு வாருங்கள்.

நம் குழந்தைகளுக்கு;-
குடும்பத்தில் குழந்தைகள் கல்வியில் குறைபாடோ அல்லது உடல் நலக் குறைவோ இருப்பினும் அதை நினைவில் கொள்ளாதீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் குழந்தைகள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்
1.அவர்களுக்கு நல்ல ஞாபக சக்தியும் நல்ல ஞான சக்தியும் பெற வேண்டும்
2.கல்வியில் சிறந்தவர்களாக வளர வேண்டும்
3.உலகம் போற்றும் உத்தமர்களாக எங்கள் குழந்தைகள் வாழ்ந்து வளர்ந்திட வேண்டும்
4.உலகைக் காத்திடும் சக்தி எங்கள் குழந்தைகள் பெற வேண்டும்
5.உலகை அறிந்து வாழும் திறன் எங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்று இவ்வாறு நினைவினைச் செலுத்துங்கள்
6.நீ கல்வியிலே சிறந்த ஞானம் பெறுவாய் உயர்ந்த நிலை பெறுவாய் என்று நல்லதைச் சொல்லி நாம் செயல்படுத்த வேண்டும்.

பேரன்பு கொண்ட நிலைகளில் அந்த குழந்தைகளுக்கு இப்படித்தான் நாம் அருள் வழியைக் காட்ட வேண்டும்

தொழில் செய்யும் இடங்களில்;-
அடுத்து நீங்கள் தொழில் செய்யும் இடங்களை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
1.அங்கு ஏதாவது சிக்கலோ அல்லது மந்தமோ கொடுக்கல் வாங்கலில் ஏதாவது தடைகளோ இருந்தால்
2.அந்தத் தடைகளைக் கருத்தில் வைக்காதீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் படர்ந்து எங்களிடம் தொழில் செய்யும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று அவர்கள் மன பலம் பெற்று அவர்கள் தொழில் சீராக வளர்ச்சி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஒரு பத்து முறை தொழில் செய்யும் இடங்களை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அடுத்து உங்கள் வாடிக்கையாளர்களை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு பத்து முறை நினைவைச் செலுத்துங்கள்.

அவர்கள் குடும்பங்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதைப் போன்று நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

கொடுக்கல் வாங்கலில் ஏதாவது தடைகள் இருந்தால்… எவரால் அந்தத் தடை வந்ததோ ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் தொழில் முழுவதும் படர வேண்டும்
2.அவர்கள் தொழில் சீராகி அவர்களுக்குச் செல்வம் வர வேண்டும்
3.எங்களுக்குக் கொடுக்க வேண்டிய வேண்டிய பணத்தைச் சீராகக் கொடுக்கும் திறன் அவர்களுக்கு வர வேண்டும் என்று
4.இந்த முறைப்படி எண்ணி நினைவினைச் செலுத்துங்கள்.

இவ்வாறு செய்யச் செய்ய அவர்களுக்கும் அந்த நிலைகள் உயர்வு ஏற்படும் உங்கள் பணமும் தடை இல்லாது வந்து சேரும். உங்கள் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம்.